Published : 26 Aug 2021 06:06 PM
Last Updated : 26 Aug 2021 06:06 PM

ஆப்கன் மக்கள் 28,000 பேர் வெளியேற உதவியுள்ளோம்: அமீரகம்

ஆப்கானிஸ்தானிலிருந்து சுமார் 28,000 மக்கள் வெளியேற உதவி இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தரப்பில், “தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்ததிலிருந்து சுமார் 28 ஆயிரம் ஆப்கன் மக்கள் வெளியேற உதவி செய்திருக்கிறோம். இதில் தேவையானவர்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலிபான்களுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்ள ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி தற்போது ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னணி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் என தலிபான்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x