Published : 11 Aug 2021 04:44 PM
Last Updated : 11 Aug 2021 04:44 PM

இணையத்தில் வைரலான ஐஏஎஸ் டாப்பர் தம்பதி திடீர் விவாகரத்து

டீனா டாபி, அதார் ஆமீர் கான், இந்த இரண்டு பெயர்களும் இணையத்தின் சென்ஷேனாக சில காலம் இருந்தன. காரணம், மணப்பெண் ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்றவர், மணமகன் அதே தேர்வில் இரண்டாவது இடம் பெற்றவர்.

இந்நிலையில், அந்தத் தம்பதி திடீரென விவாகரத்து செய்திருப்பது மீண்டும் இணையத்தில் வைரல் செய்தியாகியுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் டீனா டாபி முதலிடம் பெற்றார். அதுவும் முதல் முயற்சியிலேயே முதலிடம் பெற்றார். அதுமட்டுமல்லாமல் ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்ற முதல் பட்டியலினப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். அதே தேர்வில் காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த அதார் அமீர் கான் இரண்டாவது இடம் பெற்றார்.

முசோரியில் லால் பகதூர் சாஸ்திரி அகாடமியில் ஐஏஎஸ் பயிற்சியின் போது இருவருக்கும் இடையே காதல் அரும்பியது. அந்தக் காதல் பற்றி டீனா டாபி, அவருக்கு என்னைப் பார்த்ததும் காதல் மலர்ந்துவிட்டது. காலையில் தான் இருவரும் முதன்முதலாக சந்தித்தோம். மாலையில் அவர் எனக்கு காதலை சொல்லிவிட்டார் எனப் பதிவிட்டிருந்தார்.

இருவரின் காதல் கதையும் சினிமா திரைக்கதைக்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது. அதார் கான் ஓர் இஸ்லாமியர், டீனா டாபி இந்து என்பதே இவர்கள் மீது தேசிய அளவில் கவனம் பெறக் காரணமானது. இவர்களை எத்தனை பேர் வரவேற்றுக் கொண்டாடினார்களோ அதே அளவுக்கு இவர்களது காதலுக்கும் திருமணத்துக்கும் எதிராக குரல் எழும்பியது. இந்து மகாஜன் சபா வெளிப்படையாக எதிர்ப்புகளைப் பதிவு செய்தது.

அத்தனை எதிர்ப்புக் குரல்களையும் புறந்தள்ளி இந்த ஜோடி கடந்த 2018ல் கரம் பிடித்தது. அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய அமைச்சர்கள், மக்களவையின் அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். காதலர்களின் இந்தக் கலப்புத் திருமணம் முற்போக்கு சிந்தனைவாதிகளால் கொண்டாடப்பட்டது.

ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், டீனா டாபி, அதார் அமீர் கான் திருமணம் மத வெறுப்புகளும், சகிப்பிண்மையும் அதிகரித்து வரும் காலத்தில் மத நல்லிணக்கத்துக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறினார்.

ஆனால், இந்தத் தம்பதி கடந்த நவம்பர் மாதம் ஜெய்ப்பூர் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இருவரும் மனமுவந்து ஒருமித்து விவாகரத்து கோரியதால் அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.

சாதி, மத எதிர்ப்பு என எதுவும் அசைக்காத காதல், திருமணத்தில் முடிந்து பின்னர் எதனால் முறிந்தது என்ற காரணம் வெளியாகவில்லை.

இவர்கள் திருமண முறிவுக்கு நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டீனா டாபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நீங்கள் என்ன செய்தாலும் யாரேனும் சிலர் உங்களைப் பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். அதனால், நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு மகிழ்ச்சி சேர்க்கும் விஷயங்களையும் செய்யுங்கள். வாழ்க்கையை வாழுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x