

புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தங்கள் சொந்தச் செலவில் அரிசிப் பை வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில், பாட்னாபட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் இந்த கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஊரடங்கின் காரணமாக வீடுகளில் முடங்கிப் போயிருந்தனர்.
எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் படும் துயரைப் போக்க ஏதாவது செய்ய வேண்டும் என அப்பள்ளி ஆசிரியர்கள் முடிவெடுத்தனர். பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் ம.ஜார்ஜ் குஞ்சுமணி மற்றும் இரு உதவி ஆசிரியர்கள் இரா.ஜேம்ஸ்மேரி, ஆ.ராமசாமி ஆகியோர் சேர்ந்து பள்ளியில் பயிலும் 73 மாணவர்கள் மற்றும் இந்த ஆண்டு பள்ளியில் முதல் வகுப்பில் சேரத் தகுதியுடைய 14 குழந்தைகள் என மொத்தம் 87 குழந்தைகளுக்கு அரிசி வழங்கினர். ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 கிலோ அரிசிப் பை வழங்கப்பட்டது.
அரிசிப் பையைப் பெற்றுக்கொண்ட பெற்றோர்கள், ஆசிரியர்களை வெகுவாகப் பாராட்டினார்கள்.