Published : 01 Apr 2021 01:45 PM
Last Updated : 01 Apr 2021 01:45 PM

ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட தொண்டர்கள்: இதுதான் திமுக- ஸ்டாலின் பெருமிதம்

பிரச்சாரத்துக்கு நடுவே திமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டதை அடுத்து, இதுதான் திமுக என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பெருமிதத்துடன் பேசினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் அனல் பறக்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், உதகமண்டலம், கூடலூர் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது ஆளும் அதிமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்துக்கு முன்பே ஆம்புலன்ஸ் வழிக்காக நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ஸ்டாலின் பேச்சை நிறுத்திவிட்டு, 'ஆம்புலன்ஸுக்கு வழி விடுங்கப்பா... நம்ம தோழர்கள் வண்டிக்கு வழி விடுங்கள்!' என்று கூறினார். தொண்டர்கள் வழிவிட ஆம்புலன்ஸ் மெதுவாக நகர்ந்தது.

உடனே, ''108 ஆம்புலன்ஸ்- கருணாநிதி கொண்டு வந்த திட்டம். வழிவிட்டு விடுங்கள், ஆம்புலன்ஸ் போகட்டும்'' என்று ஸ்டாலின் கூறினார்.

கூட்டம் முழுமையாக வழிவிட்டு நின்றதும் ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. உடனே ஸ்டாலின், ''இதுதான் திமுக.. இதுதான் திமுக'' என்றதும் திமுக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். மீண்டும் ஸ்டாலின் பேச ஆரம்பித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x