

சென்னை: டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நாளை (நவ. 27) மாலை நடைபெறுகிறது. இந்நிகழ்வை இந்திய மருத்துவ சங்கம், ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
கிராமாலயா தொண்டு நிறுவனம், லலிதாம்பிகை ஃபெர்டிலிட்டி சென்டர் ஆகியவை இவ்விழாவின் பங்குதாரர்களாக இணைந்துள்ளன.
மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும், அர்ப்பணிப்போடும் ஆற்றிவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘மருத்துவ நட்சத்திரம்’ என்ற சிறப்பு விருதுகள் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை, திருச்சி, கோவை என 3 மண்டலங்களில் நடைபெறவுள்ளது. சென்னை ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியின் மினி அரங்கில் நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, விருதுகளை வழங்க உள்ளார்.
இவ்விழாவில், ரெக்கிட் நிறுவனத்தின் தெற்கு ஆசியா, MENARP மற்றும் ஆப்பிரிக்காவின் தகவல் தொடர்பு மற்றும் நிறுவன விவகாரங்கள் இயக்குநர் பேராசிரியர் ரவி பட்னாகர், தமிழ்நாடு ஐஎம்ஏ தலைவர் டாக்டர் பி.செங்குட்டுவன், ஐஎம்ஏ மதிப்புறு மாநிலச் செயலாளர் டாக்டர் எஸ்.கார்த்திக் பிரபு, மதிப்புறு நிதிச் செயலாளர் டாக்டர் எஸ்.கவுரி சங்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழாவில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 71 மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி, கவுரவிக்கப்பட உள்ளனர்.