Published : 04 Sep 2017 08:20 AM
Last Updated : 04 Sep 2017 08:20 AM

டி.சதாசிவம் 10

பு

கழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரும், பத்திரிகையாளருமான டி.சதாசிவம் (T.Sadasivam) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த ஆங்கரை என்ற ஊரில் (1902) பிறந்தார். சிறுவயது முதலே அரவிந்தர், லாலா லஜ்பத்ராய், பாலகங்காதர திலகர் உள்ளிட்ட தலைவர்களின் பேச்சுகளாலும், எழுத்துகளாலும் கவரப்பட்டு, சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.

* விளம்பரத் துறையில் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் திறமையான பாடகர். நல்ல எழுத்தாளரும்கூட. தனது திறன் முழுவதையும் சம்பாதிப்பதற்கு மட்டுமன்றி, சுதந்திரப் போராட்டத்திலும் பயன்படுத்தினார். சுப்பிரமணிய சிவாவின் புரட்சிகரமான சிந்தனைகளால் கவரப்பட்டார்.

* அவரைத் தன் குருவாக ஏற்று, பாரத சமாஜ் அமைப்பில் இணைந்தார். பாரத மாதா ஆலயம் கட்ட நிதி வசூல் செய்தார். பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். பின்னர் காந்திஜி, ராஜாஜி ஆகியோரின் அகிம்சைக் கொள்கைகள் மீது பற்றுகொண்டு அவர்களைப் பின்பற்றத் தொடங்கினார்.

* ஒத்துழையாமை இயக்கத்துக்கு காந்திஜி விடுத்த அறைகூவலை ஏற்று, கல்வியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் முழுமூச்சாக ஈடுபட்டார். தமிழகத்தில் இந்த இயக்கத்தை வழிநடத்திய ராஜாஜியைப் பின்பற்றினார். கிராமம் கிராமமாகச் சென்று தேசபக்திப் பாடல்களைப் பாடி, சுதந்திரப் போராட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

* சுதேசி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். ஆங்கிலேயருக்கு எதிரான மறியல் போராட்டம், வெளிநாட்டுத் துணிகள் புறக்கணிப்பு, கள்ளுக்கடை மறியல் ஆகியவற்றில் கலந்துகொண்டு போராடி 15 மாத சிறைத் தண்டனை பெற்றார். ‘கதர் அணிவதன் மூலம் கிராமியத் தொழிலுக்கு ஆதரவு தருவதும், ஒருவகையில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதுதான்’ என்று எடுத்துக்கூறி, ஏராளமான கதர் துணிகளை விற்றார்.

* மக்களை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்ய அவர்களை காங்கிரஸ் கட்சியில் இணையச் செய்தார். ராஜாஜியோடு உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு, 6 மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

* சிறையில் இருந்து வெளியே வந்தபோது, இவரது நண்பர் (கல்கி) கிருஷ்ணமூர்த்தி, புதிதாகப் பத்திரிகை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இருவரும் இணைந்து 1940-ல் ‘கல்கி’ பத்திரிகையைத் தொடங்கினர். இதனால் ‘கல்கி இரட்டையர்கள்’ என அழைக்கப்பட்டனர்.

* பிரபல கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியை மணந்தார். அவரை கதாநாயகியாக வைத்து ‘மீரா’, ‘சகுந்தலா’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார். எம்.எஸ்.ஸின் தெய்வீக இசைத் திறனை உலகம் அறியச் செய்தார். அவருக்கு உந்துசக்தியாக இருந்து செயல்பட்டார். அவரது கச்சேரிகளை இவர்தான் நுட்பமாகவும் விரிவாகவும் திட்டமிடுவார்.

* எம்.எஸ். கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவரது கச்சேரிகள் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு, நாடு முழுவதும் ஏராளமான ஆலயங்கள், தொண்டு அமைப்புகளுக்கு உதவினார். மிகுந்த இரக்க குணம் கொண்டவர். தன் ஆன்மிக குருவாக காஞ்சி மஹா பெரியவரை ஏற்றார். அவருக்கு மணி மண்டபம் கட்டுவதில் பெரும் பங்கு வகித்தார்.

* கல்கியின் மறைவுக்குப் பின் அந்த இதழைத் தொடர்ந்து நடத்தினார். நட்பை உயிர் மூச்சாகக் கொண்டவர். திரைப்படத் தயாரிப்பாளர், பாடகர், சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட டி.சதாசிவம் 95-வது வயதில் (1997) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x