Last Updated : 08 Dec, 2016 10:14 AM

 

Published : 08 Dec 2016 10:14 AM
Last Updated : 08 Dec 2016 10:14 AM

சோ: பஞ்ச் டயலாக்குகளின் பிதாமகன்!

மறைந்த திரைக்கலைஞர், அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர் சோ-வுடைய கல்லூரி நண்பரும், திரைப்பட நடிகருமான ஏ.ஆர்.எஸ்., சோ-வின் சுவையான நினைவுகளை ‘தி இந்து’-வோடு பகிர்ந்துகொள்கிறார்:

‘‘நானும் சோவும் சென்னை சட்டக் கல்லூரி யில் ஒன்றாகப் படித்தவர்கள். நான் தொடர்ந்து படிக்கவில்லை. இடையில் எனக்கு பிலிப்ஸ் கம்பெனியில் வேலை கிடைத்துப் போய்விட் டேன். சோ தொடர்ந்து படித்து வழக்கறிஞர் ஆனார். படிப்பு முடிந்தவுடனேயே அவருக்கு டி.டி.கே கம்பெனியில் சட்ட ஆலோசகராக வேலை கிடைத்தது. பின்னாட்களில் அரசியல் விமர்சனங்களுக்கு அவருடைய அந்த சட்டப் படிப்பு உதவிகரமாக இருந்தது.

அந்நாட்களில் நான் கிரிக்கெட் பைத்தியம். நான் விளையாடப் போகும்போதெல்லாம் சோ-வும் என்னுடன் வருவார். ஆனால், விளையாட மாட்டார். பின்னால் நின்றுகொண்டு நாங்கள் விளையாடுவதைக் கூர்ந்து பார்த்து, விமர்சனம் செய்வார். சில சமயம் எங்களுடன் கிரவுண்டுக்கு வராமல் ஒய்.ஜி.பி-யின் ‘யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்’ நடத்தும் நாடகத்துக்கு போறேன்னு சொல்லிவிட்டு போய்விடுவார்.

‘அங்கே உனக்கு என்ன வேலை?’ என்று கேட்டால்… ‘அந்த குழுவுல டேபிள் நகர்த்தறது முதல் எல்லா வேலைகளையும் பார்ப்பேன். அங்கே பட்டுன்னு ஒரு ரைட்டர் இருக்கார். அவரோட ஸ்க்ரிப்ட் நல்லா இருக்கும்… அதுக் காகவும்தான் அங்கே போறேன்!’ என்பார். இப்படி சாதாரணமா அவர்களுடன் பழக்கமான வர், திடீர்னு அந்த குழுவில் சேர்ந்து நடிகராக வும் மாறிவிட்டார். அவரைத் தொடர்ந்து நானும் ‘யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்’ குழுவுல சேர்ந்தேன்.

நாடகத்தில் ஜெயலலிதா

1964-ல் ‘அண்டர் செகரெட்டரி’ என்கிற நாடகத்தில் ஒய்.ஜி.பி, சோ-வுடன் நானும் நடித்தேன். நாடகத்தில் ஹீரோயின் யார் தெரியுமா? ஜெயலலிதாவின் அம்மா சந்தியா. இன்னும் இரண்டு ஹீரோயின் நடித்தார்கள். அவர்களில் ஒருவர் சந்தியாவின் தங்கை வித்யா. இன்னொரு ஹீரோயினுக்கு சேல்ஸ் கேர்ள் பாத்திரம். அதில் நடித்தவர் ஜெயலலிதா.

சோ-வுடன் இணைந்து நடிப்பது என்பது கஷ்டமான செயல். ஸ்கிரிப்ட்டில் இல்லாததை, அன்றைய சூழ்நிலைக்கு தகுந்தது மாதிரி பேசி அசத்திவிடுவார். கூட நடிக்கும் மற்றவர்கள் எல்லாம் திணறுவார்கள். ஆனால், சோ பேசும் டைம்லி வசனங்களுக்கு ஜெயலலிதா ஈடுகொடுத்து சமாளிப்பார்.

கம்பெனி ஆரம்பித்தார் சோ!

இந்தக் காலகட்டத்தில்தான் சோ தன்னுடைய ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்’ என்கிற நாடகக் குழுவைத் தொடங்கினார். சோ, தான் படித்த விவேகானந்தா கல்லூரியை நினைவூட்டும் வகையில் தனது நாடகக் குழுவுக்கு அந்தப் பெயரை வைத்திருந்தார். அவரது குழுவின் முதல் நாடகம் ‘ஈஃப் ஐ கெட் இட்’. இதில் சோ-வுடன் ஜெய்சங்கர், காத்தாடி ராமமூர்த்தி, நீலு, சோ-வின் தம்பி அம்பி ஆகியோர் நடித்தனர். நாடகம் பெரிய வெற்றிபெற்றது. இது முழுக்க முழுக்க அப்பட்டமான அரசியல் கலப்படமற்ற நாடகம். இதற்குப் பிறகு வந்த நாடகங்கள் எல்லாமே சோ-வின் அரசியல் சரவெடி கலந்திருக்கும். அவருடைய ‘சம்பவாமி யுகே யுகே’, ‘கோவாடிஸ்’, ‘சரஸ்வதியின் சபதம்’ போன்ற நாடகங்களுக்குப் பிறகு சோ புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

சோவுக்கு அறிஞர் அண்ணாவையும், காம ராஜரையும் நிறையப் பிடிக்கும். அண்ணாதான் எம்.ஜி.ஆரிடம், ‘இந்தப் பையன் பேச்சு வித் தியாசமா இருக்கு, இவரைத் தொடர்ந்து உங்கள் படங்களில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!’ என்று சிபாரிசு செய்தார் என்பது பலருக்குத் தெரியாது.

சோ-வின் புகழ் இன்னும் இன்னும் கூடுத லானதற்கு ‘முகம்மது பின் துக்ளக்’ நாடகமும், திரைப்படமும் அடிப்படையாக அமைந்தது. இதற்கு உதாரணம் ஒன்று சொல்கிறேன். அப்போ தெல்லாம் நாரதகான சபா, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், கிருஷ்ணகான சபா போன்ற இடங் களில்தான் நாடகங்கள் நடக்கும். சோ-வின் ‘முகம்மது பின் துக்ளக்’ நாடகம் அந்த நாட் களில் சஃபையர் திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை நிகழ்ச்சி யாக நடந்தது.

இன்றைக்கு நாம் ‘பஞ்ச் டயலாக்’ என்று சொல்கிறோம் அல்லவா. இதற்கு முன்பே தனது நாடகம், சினிமாக்களில் ஏராளமான பஞ்ச் டயலாக்குகளைப் பயன்படுத்தியவர் சோ.

ஒரு தடவை சோ-விடம் ‘ஏண்டா… நீதான் ஜெயலலிதாவுக்கு எல்லா ஆலோசனைகளை யும் கொடுக்கிற அட்வைஸரா இருக்கேன்னு… தமிழ்நாட்டுல எல்லாரும் பேசிக்கிறாங்களே?’ என்று கேட்டேன். அதற்கு, ‘இருக்கேன்… இல்ல; இருந்தேன்!’ என்று பதில் சொன்னார்.

எனக்குத் தெரிந்து உலக அளவில் தன்னுடைய நாடகக் கம்பெனிக்கு மூடுவிழா நடத்திய ஒரே கலைஞன் சோ மட்டும்தான். அதற்கு சோ சொன்ன காரணம் என்ன தெரியுமா? ‘என் நாடகத்துல நடிக்கிற நீலு, ஏ.ஆர்.எஸ்., காத்தாடி ராமமூர்த்தி, அம்பி, வி.ஆர்.எஸ்., வர்க்கீஸ், பர்மா சங்கரன் எல்லாருக்குமே வயசு 60-க்கு மேல நடக்குல… ரன்னிங். எல்லாரும் இந்த வயசுல காலேஜ் ஸ்டூடன்ட் பாத்திரங்கள்ல நடிக்கிறதை நான் விரும்பலை. காலம் மாறிக்கிட்டே இருக்கு. அதனால இனி நான் நாடகங்கள் போட மாட்டேன்’ என்று சொல்லி திரைப் போட்ட தீர்க்கதரிசி.

இப்போது, சோ-வின் 82-வது வயதில் அவரது உயிர் இயக்கத்துக்கு ‘தி எண்ட்’ என காலம் திரைப்போட்டுவிட்டது. ஆனால் அவரைப் பற்றிய நினைவுகளுக்கு யாரால் திரை போட முடியும்?”

இளைஞர்களாக சோ, ஏ.ஆர்.எஸ். | ஏ.ஆர்.எஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x