Last Updated : 17 Dec, 2016 09:57 AM

 

Published : 17 Dec 2016 09:57 AM
Last Updated : 17 Dec 2016 09:57 AM

ஒரு நிமிடக் கதை: விழுதுகள்

தோட்டத்தில் சாய்ந்து கிடந்த மரங்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் அருணகிரி.

“பாருங்க , புள்ளைய போல பாத்து பாத்து முப்பது வருஷமா வளர்த்து வந்தீங்க.. ஒரே நாள்ல அடிச்ச புயல்ல எல்லாம் சாஞ்சிடுச்சு” என்றார் அவரது மனைவி கமலா.

அருணகிரி ஓய்வு பெற்ற அரசு அலுவலர். எழுபது வயதாகிறது உழைத்து சம்பாத்தித்து கட்டிய வீட்டைச் சுற்றி தென்னை, மா, கொய்யா, வாழை என மரங்களை நட்டு ஆசையாக வளர்த்து வந்தார்.

அவரின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் செட்டிலான பிறகு, அவருக்கும், கமலாவுக்கும் அந்த மரங்கள்தான் துணை. அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி செய்யவும், நண்பகலில் ஆசுவாசப்படுத்துவதும், மாலை நேரங்களில் பறவைகளின் ஒலியை கேட்கவும், அந்த மரங்கள்தான் அவர்களுக்கு துணையாக இருந்தன.

விழுந்து கிடந்த மரக்கிளை ஒன்றை வாஞ்சையுடன் தடவியவாறு அதை ஓரமாக இழுத்துப் போட்ட அருணகிரியிடம், “உங்களுக்கு எதுக்குங்க இந்த வேலை? ஆளைக் கூட்டி வந்து எல்லாத்தையும் சுத்தப்படுத்திட்டு இந்த எடத்துல ஒரு அறையை கட்டிவச்சா வெளிநாட்டுல இருந்து நம்ம பசங்க வந்தா தாங்குவாங்க” என்றார் கமலா.

அதை காதில் போட்டிக்கொள்ளாத அருணகிரி, “கமலா, இங்க பாரேன்” என்றார். அவர் காட்டிய இடத்தில் பறவை கூடு ஒன்று கீழே விழுந்து பறவை முட்டைகள் நொறுங்கிக் கிடந்தன.

கண் கலங்கிய அருணகிரி, “30 வருஷம் இந்த மரங்களை வளர்த்து வீணாகிடுச்சுன்னு வருத்தப்பட்டியே.. முப்பது வருஷம் வளர்த்த நம்ம புள்ளைங்க மட்டும் நம்மள விட்டுட்டு போகலையா? ” என்றார்.

“அது அவங்கவங்க ஆசாபாசம்ங்க . அவங்களை வளர்க்கறதோட நம்ம கடமை முடிஞ்சுடுது” என்றார் கமலா.

“வெளிநாட்டுக்கு போன உன் புள்ளங்களுக்காக வீடு கட்டணும்னு நினைக்கிற. இந்த மரங்களை நம்பி இங்க வந்து கூடு கட்டுன பறவைகளோட கதியை பாரு. நம்மை நம்பி வர்ற பறவைகளுக்கு நாம ஏன் திரும்பவும் இருப்பிடம் தரக்கூடாது?” என்றார் அருணகிரி.

மறுநாளே தன் தோட்டத்தில் புதிய மரக்கன்றுகளை நட குழி வெட் டியவாறு, “இந்த மரம் வளர்ந்து நிக்கறப்போ நாம இருக்க மாட் டோம். ஆனா பறவைங்க இங்க நிச்சயம் இருக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x