Published : 13 Oct 2016 07:50 PM
Last Updated : 13 Oct 2016 07:50 PM

ட்ரெய்லர் வியூ: சாதிகளிடம் ஜாக்கிரதையாய் இருங்கள்- இயக்குநர் ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம்

'Beware Of castes- Mirchpur' எனும் ஆவணப்படத்தின் முன்னோட்டம் நேற்று யூடியூப்பில் வெளியானது. அந்த முன்னோட்டத்தின் கடைசியில்தான் தெரிந்தது அந்த ஆவணப்படத்தை தயாரித்திருப்பவர் இயக்குநர் பா.ரஞ்சித்.

ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள மிர்ச்பூர் கிராமத்தில் 2010 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை ஜெய்குமார் ஆவணப்படமாக்கியுள்ளார் என்பதை முன்னோட்ட காட்சிகளில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

மிர்ச்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலையைக் காட்சிகள் மூலம் முன்னோட்டத்தில் சொல்கின்றனர். அதே போல் மிர்ச்பூர் கிராமத்தில் கைவிடப்பட்ட தலித் குடியிருப்புகளுக்குள்ளும் கேமரா சென்று வருகிறது.

நாயின் மூலமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட அந்த கலவரம், நாயின் குரைப்பின் மூலமே கேள்விகளைக் கேட்கிறது. முன்னோட்டத்தின் 1.45 நிமிடத்தில் பெண் ஒருவர் பேசும் மொழி புரியாவிட்டாலும் நாங்களெல்லாம் மனிதர்கள் கிடையாதா? என்று கேட்பது உங்களுக்குள் அதிர்வலைகளை எழுப்பும்.

6 வருடத்துக்கு முன்பு நடந்த கலவரத்தை பற்றி பலரும் மறந்திருக்கும் சூழலில், இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் அதனை நினைவுக்கு கொண்டு வருகிறது.

மிர்ச்பூர் கிராமத்தில் நடந்தது என்ன?

ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ளது இந்த மிர்ச்பூர் கிராமம். ஏப்ரல் 21, 2010 ஆம் ஆண்டு இந்தக் கிராமத்தில் மிகப்பெரிய கலவரம் நடந்தது. அங்கே பால்மீகி காலனியில் இருந்த தலித்துகளின் வீடுகள் ஜாட் சாதியினரால் கொளுத்தப்பட்டது. இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டனர்.

இங்கு அடிக்கடி சாதிய வன்முறைகள் நிகழ்ந்தாலும் இந்த அளவிற்கு பெரிதாய் ஒரு கலவரம் அப்பொழுதுதான் நடந்தது. குடிபோதையில் வண்டியில் வந்த இரு ஜாட் நபர்களைப் பார்த்து பால்மீகி காலனியில் உள்ள தலித் ஒருவரின் நாய் குரைத்ததுதான் இந்த கலவரத்திற்கான தொடக்கப்புள்ளி. அதன்பிறகு நடந்த சமாதானக் கூட்டம் கலவரத்தில் போய் முடிந்தது. அக்கலவரத்தில் 70 வயது முதியவரான தரா சந்த் என்பவரும் அவரது 18 வயதான மகள் சுமனும் உயிரோடு எரிக்கப்பட்டனர். இதில் சுமன் போலியோவால் பாதிக்கப்பட்டவர்.

இக்கலவரத்திற்குப் பின் கிராமத்தை விட்டு வெளியேறிய தலித்துகள் 6 ஆண்டுகள் கழித்தும் ஊர் திரும்பவில்லை. தலித் செயல்பாட்டளாரான வேத் பால் தன்வரின் 3.5 ஏக்கர் இடத்தில்தான் இன்னமும் தலித் மக்கள் டென்ட் போட்டு தங்கியுள்ளனர்.

இந்த கலவரத்திற்கு பின் ஹரியானா அரசு நீதிபதி இக்பால் சிங் தலைமையில் தனிநபர் கமிஷனை அமைத்தது. காவலர்களின் மெத்தனப்போக்கே இக்கலவரத்திற்கு காரணம் என 2014ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் இந்தக் கலவரத்தின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 97 பேரில் 15 பேர் தண்டனை பெற்றுள்ளனர். அதன்பின் இந்தக் கலவரம் குறித்த செய்திகள் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் பல செய்திகளையும் தற்போதைய உண்மை நிலவரங்களையும் நம்முன்னே கொண்டு வரும் என நம்பலாம்.

ஆவணப்பட ட்ரெய்லர்: