Published : 03 Oct 2016 09:57 AM
Last Updated : 03 Oct 2016 09:57 AM

ஜேம்ஸ் எம்.புக்கானன் ஜூனியர் 10

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் எம்.புக்கானன் ஜூனியர் (James M.Buchanan Jr.) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*அமெரிக்காவின் டென்னஸி மாநிலம் முர்ஃப்ரீஸ்பரோ நகரில் ஏழ்மையான குடும்பத்தில் (1919) பிறந்தார். படிப்பில் சிறந்து விளங்கினார். இளம் வயது முதலே பொருளாதாரத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். கடற்படையில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

*சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1948-ல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். டென்னஸி, புளோரிடா, வர்ஜீனியா, ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். ஜெர்மன் பொருளாதார நிபுணர் நட் விக்செல் எழுதிய கட்டுரையால் ஈர்க்கப்பட்டு, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

*உலகப் புகழ்பெற்ற பொருளாதார மேதைகளின் நூல்களைக் கற்றார். பொருளாதாரத்தின் பிரிவுகள், அமெரிக்கப் பொருளாதார நிலை குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நண்பர்களுடன் இணைந்து ‘பப்ளிக் சாய்ஸ்’ என்ற பொருளாதார இதழைத் தொடங்கினார். மற்ற நிபுணர்களுடன் இணைந்து பல நூல்கள் எழுதினார்.

*வர்ஜீனியாவில் அரசியல் பொருளாதாரம் பயிற்றுவிப்பதற்காக தாமஸ் ஜெஃபர்சன் என்ற பெயரில் கல்வி மையம் தொடங்கினார். பல மொழிகள் கற்றார். பல்வேறு இடங்களில் ஏராளமான விரிவுரைகள் ஆற்றினார்.

*தனது ஆய்வுகள், கருத்துகளைப் பரப்ப ‘கான்ஸ்டிடியூஷனல் எகனாமிக்ஸ்’ என்ற இதழைத் தொடங்கினார். அவரது கருத்துகள், விரிவுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. அரசியல் பொருளாதாரத் துறை புத்துயிர் பெற்றதில் இவரது பங்களிப்பு மகத்தானது என்று கூறப்படுகிறது.

*இவரது பொருளாதாரக் கொள்கை தார்மிகம், அரசியல், சட்ட சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது. பப்ளிக் சாய்ஸ் கல்வி மையத்தின் முதல் இயக்குநராக 1969-ல் நியமிக்கப்பட்டார். பொது நிதி, பொதுக் கடன், ஓட்டுரிமை, அரசியலமைப்பு பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

*இவர் உருவாக்கிய பொது தேர்ந்தெடுத்தல் கோட்பாடு (Public Choice Theory), உலக பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, உலகப் புகழ்பெற்றது. இதற்காக இவருக்கு 1986-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இக்கோட்பாடு பொருளாதாரத்தையும் அரசியல் முடிவெடுத்தலையும் அலசி ஆராயும் தனித்துவம் மிக்க கோட்பாடாக கருதப்பட்டது.

*பல தலைமுறை மக்களுக்காக உருவாக்கப்படும் அரசியல் அமைப்புச் சட்டமானது, அரசு, சமூகம் மற்றும் தனிப்பட்ட மக்களின் நலன்களை சமன்படுத்துவதாக உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

*அரசியல் மற்றும் அரசியல் கொள்கைகள் இடையிலான வேறுபாட்டை வகுத்தார். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ‘தி கலெக்டட் ஒர்க்ஸ் ஆஃப் ஜேம்ஸ் எம்.புக்கானன்’ என்ற பெயரில் 20 தொகுதிகள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது.

*பொருளாதாரத்தில் சமூக சிந்தனையை அறிமுகப்படுத்தியவர் என்று போற்றப்படும் இவருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தின. பொருளாதாரக் களத்தில் திருப்புமுனையை உருவாக்கிய ஜேம்ஸ் எம்.புக்கானன் ஜுனியர் 94-வது வயதில் (2013) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x