Last Updated : 26 Jun, 2014 01:14 PM

 

Published : 26 Jun 2014 01:14 PM
Last Updated : 26 Jun 2014 01:14 PM

வேண்டாமே சாலை விதிமீறல்கள்

#வாகனத் தணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளிடம் முறையான தகவல் அளிக்காமல், ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

வாகனத் தணிக்கை என்பது சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைவரும் வாகனங்களை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. வாகனத் தணிக்கை சமயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்கும் தகவலை வழங்காமலும் , ஒழுங்கீனமாகவும் நடந்து கொண்டால் இரண்டுக்கும் மோட்டார் வாகனச் சட்டம் 179 (1) மற்றும் (2)-ன் கீழ் தலா 250 ரூபாய் வீதம் அபராதம் விதிக்க முடியும்.

#ஒருவரது வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட பின்னரும் அவர் வாகனத்தை இயக்கினால் என்ன தண்டனை?

ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட பின்பும் ஒருவர் வாகனங்களை இயக்கினால் அவருக்கு மோட்டார் வாகனச் சட்டம் 182 (1)-ன் கீழ் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.

#ஒருவர் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை எப்படி கண்டறிவது? அதற்கு அபராதம் எவ்வளவு?

அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதை வட்டார போக்குவரத்து துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள கருவி மூலம் எளிதாக கண்டறிய முடியும். அவ்வாறு வேகமாக வாகனம் ஓட்டி வருபவருக்கு மோட்டார் வாகனச் சட்டம் 183 (1)-ன் கீ்ழ் 400 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒருவரது வாகனத்தை இன்னொருவர் அதிவேகமாக ஓட்டினால், வாகன உரிமையாளருக்கும் மோட்டார் வாகனச் சட்டம் 183 (2)-ன் கீழ் 300 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். அதுபோல் விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டினால் மோட்டார் வாகனச் சட்டம் 184-ன் கீழ் 1000 ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.

#விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள வாகனங்களை இயக்கலாமா?

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி முறையான பாதுகாப்பு வசதியில்லாமல் வாகனங்களை சாலைகளில் இயக்கக் கூடாது. உதாரணமாக, பஸ்களின் படிக்கெட்டு உடைந்திருந்தால், அவற்றில் பயணிகள் ஏறும்போது கீழே விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு இயக்கினால் மோட்டார் வாகனச் சட்டம் 190 (2)ன் கீழ் 600 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.

#வாகனப் பதிவுச் சான்று இல்லாமலும் புதுப்பிக்காமலும் இருந்தால் எவ்வளவு அபராதம்?

வாகனத் தணிக்கையின்போது பதிவுச் சான்று இல்லாமல் இருந்தாலோ அல்லது புதுப்பிக்காமல் இருந்தாலோ மோட்டார் வாகனச் சட்டம் 192 (1)-ன் கீழ் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x