Last Updated : 11 Dec, 2015 03:35 PM

 

Published : 11 Dec 2015 03:35 PM
Last Updated : 11 Dec 2015 03:35 PM

மழை முகங்கள்: நாளைய வாழ்க்கை என்னவென தெரியாத சேட்டுவின் இன்றைய மக்கள் பணி!

'தி இந்து' நிவாரண முகாம் நெகிழ்ச்சிப் பதிவுகள்

நிவாரணப் பொருட்களை வாகனங்களிலிருந்து இறக்கிக்கொண்டிருந்த சேட்டுவின் வீடு விருத்தாசலத்தில். இரண்டு வருடங்களுக்கு முன்வரை கூட ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி அருகேதான் அவர்கள் குடும்பம் இருந்தது..

அப்பா தசிகர் (அம்மாவின் கணவர்) வெளிநாட்டில் இருக்கிறார். வெளிநாட்டில் வீட்டுவேலைகள் செய்துவந்த அம்மா அம்முனு சமீபத்தில்தான் தாயகம் திரும்பியிருக்கிறார். வாழ்வில் எதிர்பாராத பல்வேறு திருப்பங்களை சந்தித்துவரும் சேட்டு நிவாரண முகாம் பகுதிக்கு வந்ததும் ஒரு திருப்பம்தான்.

''சுனாமியின்போது ஔவையார் சிலைப்பக்கம் மீன்மார்க்கெட் அருகே இருந்த எங்கள் வீட்டு வாசல்பக்கம் கடல்நீர் வந்தது. இதனால் சென்னையே வேண்டாமென அம்மாவின் உறவினர்கள் மூலம் விருதாசலம் சென்றுவிட்டோம். ஏற்கெனவே குடிகார அப்பாவை பிரிந்திருந்த அம்மாவுககு விருத்தாசலம் சென்றபிறகு வேறொரு துணைவர் கிடைத்தார். அவர் மிகவும் நல்லவர்.

எங்களை அன்போடு பார்த்துக்கொண்டார். அவருக்கும் அம்மாவுக்கும் வெளிநாட்டில் வேலைகிடைத்துவிட்டது. அவர்கள் இருவரையும் பிரிந்து நான் விருதாசலத்தில் கோழிக்கடையில் வேலை செய்துவந்தேன். அங்கு சரியாக சம்பளம் தருவதில்லை. இப்போது அம்மா வந்துவிட்டார். இனி ஊரிலுள்ள குடுத்தை அம்மா பார்த்துக்கொள்வார். கோழிக்கடை வேலை பிடிக்காததால் சென்னைக்கு வேலை தேடி வந்தேன். சிலவாரங்களாக இங்குதான் ராயப்பேட்டை அருகே ஒரு இடத்தில் தங்கியிருக்கிறேன்.

கடும் மழை பெய்து மக்கள் எல்லாரும் பாதிக்கப்பட்டதை கண்ணால் கண்டேன். அது மனசை மிகவும் பிசைந்தது. சுனாமியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில்கண்டவன் நான். அந்த அதிர்ச்சி பலநாள் வாட்டியது. அதன்பிறகு சென்னைவந்த நான் கண்டது பெருமழையை. இந்த பாதிப்பையும் கண்டு மனம் வலித்தது.

சுனாமி அதிர்வுக்கு அப்புறம் நான் கடற்கரைப் பக்கமே வந்ததில்லை. அதனால் மன அமைதிக்காக மெரினா கடற்கரைக்கு போகலாம் என வந்தேன். கடற்கரை செல்லும்வழியில் இந்த நிவாரண முகாமைப் பார்த்தேன். இங்குள்ள ஒருவர் என்னை அவரது குழுவில் இணைத்துக்கொண்டார்.

இங்கு மக்களுக்கு நிவாரண வேலைகள் இவ்வளவு மும்முரமாக நடைபெறுவதைக் கண்டபிறகு இவர்களோடு பணியாற்றுவது மிகவும் அவசியம் என்று தோன்றியது. புதிய ஒரு வேலையைத் தேடிக்கொண்டிருக்கும் எனக்கு இன்னமும் வேலை கிடைக்கவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு வேலையை செய்கிறேன், நாளை எனது வாழ்க்கை என்ன? என்று தெரியவில்லை. இன்றைய எனது வாழ்க்கை அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துவிட்டது'' என்று மனநிறைவோடு கூறுகிறார் சேட்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x