Last Updated : 21 Jun, 2014 10:00 AM

 

Published : 21 Jun 2014 10:00 AM
Last Updated : 21 Jun 2014 10:00 AM

பொதுப் போக்குவரத்து வாகனத்துக்கு பர்மிட் ஏன் அவசியம்?

போக்குவரத்து வாகன அனுமதி வகை மற்றும் அவற்றைப் பெறும் வழிமுறை, கட்டண விவரம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் ஈரோடு மண்டல துணைப் போக்குவரத்து ஆணையர் எஸ்.வேலுசாமி.

# பொதுப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனத்துக்கு அனுமதி பெறவேண்டியது எதற்காக?

சாலை வரி உள்ளிட்டவற்றை செலுத்திவிட்டுத்தான் கார் போன்ற சொந்த வாகனங்களை வாங்குகிறோம். அதனால், வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது அங்கு தனியாக சாலை வரி செலுத்தத் தேவையில்லை. அதனால்தான் அவற்றுக்கு அனுமதி (பர்மிட்) தேவையில்லை.

அதே வாகனத்தை பொதுப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தும்போது அனுமதி பெற வேண்டும். ஏனெனில் வெளி மாநிலத்துக்கு செல்ல நேர்ந்தால் ஆகும் சாலை வரியைத்தான் பர்மிட் கட்டணமாக வசூலிக்கிறார்கள். ஒரு வாகனம் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏற்றதுதானா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து, பின்னர் அதை சாலையில் பொதுப் போக்குவரத்துக்கு இயங்க அனுமதி அளிப்பர். இது லாரி போன்ற சரக்கு வாகனங்களுக்கும் பொருந்தும்.

# இவ்வாறு அனுமதி வழங்குவதில் எத்தனை வகைகள் உள்ளன?

ஒப்பந்த ஊர்தி அனுமதி (கான்டிராக்ட் கேரேஜ் பர்மிட்), பொது சரக்கு வாகன அனுமதி (கூட்ஸ் கேரேஜ் அனுமதி), நிலைய அனுமதி (ஸ்டேஜ் கேரேஜ் பர்மிட்) என மூன்று வகைகளில் அனுமதி வழங்கப்படுகிறது. பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ, மேக்ஸி கேப் போன்ற வாகனங்களுக்கு ஒப்பந்த ஊர்தி அனுமதி வழங்கப்படுகிறது. லாரி போன்ற வாகனங்களுக்கு பொது சரக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அதிலும் மாநிலம் மற்றும் தேசிய அனுமதி என இரு முறைகளில் அனுமதி வழங்கப்படுகிறது. பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லும் பேருந்துகளுக்கு நிலைய அனுமதி வழங்கப்படுகிறது.

# அனுமதி பெறுவதற்கான கட்டணம், அவற்றுக்கான கால அளவு எவ்வளவு?

கார் போன்ற ஒப்பந்த ஊர்திகளுக்கு ரூ.325, பொது சரக்கு வாகனங்களுக்கு ரூ.750 கட்டணமாக செலுத்தவேண்டும். அதிலும், நாடு முழுவதும் ஒரு வாகனத்தை இயக்க தேசிய அனுமதி பெற வேண்டும். அதற்கு ரூ.1,450 மற்றும் ரூ.500 கட்டணம் செலுத்தவேண்டும்.

இந்த அனுமதி 5 ஆண்டு காலத்துக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பின், அனுமதியை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதே நேரம், போக்குவரத்து வாகனங்களுக்கான வரியை ஒவ்வொரு காலாண்டும் செலுத்த வேண்டும். அல்லது, ஆண்டுக்கு ஒருமுறை நான்கு காலாண்டுக்கான வரியை சேர்த்து ஒரே முறையாகவும் செலுத்தலாம்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x