Published : 23 Nov 2015 06:58 PM
Last Updated : 23 Nov 2015 06:58 PM
சென்னையில் மழை, கனமழை, பலத்த மழை, இடியுடன் கூடிய மழை... இவை மட்டுமேதான் அண்மைக்கால உள்ளூர் வானிலை நிலவரமாக இருக்கிறது. இது சற்று அதிகமாகவே மனக் கலவரம் ஏற்படுத்தும் நிலவரம்தான். |வீடியோ இணைப்பு கீழே|
லட்சங்களை கொட்டி சொகுசு வீடுகளை வாங்கியவர்களும் ஹெலிகாப்டரில் இருந்து வீசப்படும் நிவாரணப் பொருட்களுக்காக கையேந்தியதை பார்த்தபோது, 'சென்னைக்கு மிக அருகில்.. சென்னைக்கு மிக அருகில் என்றே கூறி' மக்களை வசப்படுத்திய ரியல் எஸ்டேட்காரர்களின் சதியா? இல்லை சொந்த வீடு இருந்தால் மட்டுமே தான் வாழ்க்கை வெற்றி பெற்றதென அர்த்தம் என்று வலையில் விழுந்த மக்களின் அறியாமையா?
இல்லை, சிங்காரச் சென்னையாக ஆக்குகிறோம்... சிங்கப்பூராக மாற்றுகிறோம்... அடையாற்றை தூர் வாருகிறோம்... கூவத்தில் படகு குழாம் அமைப்போம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசியவர்களின் வாய்ச்சவுடாலா என்ற எண்ணங்கள் எழுந்தன.
வானமே கூரையாக வாழ்ந்த மக்கள் அந்த நடைபாதைகூட தண்ணீரில் மூழ்கிப்போக தவியாய் தவித்த காட்சிகளையும் தொலைக்காட்சியில் பார்த்தபோது மனம் இன்னுமே பதைபதைத்தது.
இந்த எண்ணங்களை எல்லாம் ஏக்கப் பதிவாக்கி, ஒரு சென்னைவாசி ஒரு பாடலை இயற்றியுள்ளார். இத்தனைக்கும் சராசரியைவிட சற்றே அதிகமாகத்தான் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது.
இந்நிலையில் மழையால் மட்டுமே இவ்வளவு பாதிப்பா? இல்லை மனிதனாலும் இந்த பாதிப்புகளா? என்பதை ஏக்கப்பதிவாக வெளியிட்டிருக்கிறார் பெ.கருணாகரன். மனித தவறுகளை மன்னித்தருள வேண்டும் என்ற தொனியில் அமைந்துள்ளது அந்தப் பாடல்.
இதோ உங்களுக்காக...
>சென்னையின் வெள்ளப் பாடல் @ பெ.கருணாகரன்
வெள்ளத்தில் சென்னை வெள்ளம்
வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா - வருணா
எம்மிடம் அருள் செய்யடா...
குடியேற இடம்தேடி
கூடாத செயல் செய்து
ஏரிகள் தூர்த்தோமடா - வருணா
உன்னிடம் தோற்றோமடா...
கால்வாய்க்கு வழியில்லை
நீர்வடிய வழியுமில்லை
வீடுகள் மிதக்குதடா - நீயும்
தண்டித்தல் அறமல்லடா...
மழைவெள்ளம் வடியாமல்
மனம்நொந்த மக்களுக்கு
தாயுள்ளம் காட்டிடடா - வருணா
ரேஷனில் மழை பெய்யடா...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT