Published : 14 Oct 2020 09:04 AM
Last Updated : 14 Oct 2020 09:04 AM

எதிர்ப்புக் காட்டிய தோனி, தாக்கூர்; தீர்ப்பை மாற்றிய நடுவர்; வைடு பந்தை வைடு கொடுக்காமல் பின் வாங்கினார்- நடுவர்கள் மீது செல்வாக்கு செலுத்தும் கேப்டன்கள் வீரர்கள்

வைடு பந்தை வைடு கொடுக்க வந்த நடுவர் தோனி எதிர்ப்புக் காட்டியதால் தீர்ப்பை மாற்றினார், ரீப்ளேயில் பந்து தெளிவாக வைடு.

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 29வது போட்டியில் ஒருவழியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியை வென்று 2 புள்ளிகளை கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு பெற்றது.

இது தோனிக்கு மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சை அளித்தது. டுபிளெசிஸ், வாட்சன் தொடக்க ஜோடியை உடைத்து சாம் கரணை தொடக்கத்தில் இறக்கி ஒரு வழக்கமான பாணியிலிருந்து சற்றே விலகி மாற்றி யோசித்தார் தோனி. இதுவும் கைகொடுத்தது, ஆனால் வாட்சன், டுபிளெசிஸ் நன்றாகத்தானே ஆடிக்கொண்டிருந்தனர்?!

167 ரன்களை எடுத்த சிஎஸ்கே அணி பலவீனமான சன் ரைசர்ஸ் அணியை 147/8 என்று கட்டுப்படுத்தியது. கடைசி 2 ஓவர்களில் 26 ரன்களை எடுக்க விடாமல் ஷர்துல் தாக்கூர், டிவைன் பிராவோ அற்புதமாக வீசினர்.

ஆனால் உறுத்தக் கூடிய விஷயம் என்னவெனில் வீரர்களும், கேப்டன்களும் ஐபிஎல் போட்டியில் நடுவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை ஐபிஎல் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதே.

சுனில் நரைன் நன்றாக வீசத் தொடங்கி கேகேஆர் அணியை வெற்றிக்கு இட்டுச்செல்லும் போது அவர் பவுலிங் ஆக்‌ஷன் மீது சந்தேகம் கிளப்பப் படுகிறது, இதில் நடுவர்கள் நேர்மையாக நடந்து கொண்டனர் என்று மற்ற கேப்டன்கள், கிரிக்கெட் உலகம் நம்பும் போது, நேற்று நடந்த சம்பவம் நடுவர்களை வீரர்கள், கேப்டன்கள் செல்வாக்கு செலுத்தி தீர்ப்பை கொடுக்கவிடாமல், அவர்கள் பணியைச் செய்ய விடாமல் தடுத்ததையே காட்டுவதாக அமைந்தது.

நடந்தது என்ன?

18 ஒவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற 27 ரன்கள் தேவை, சூப்பர் ஓவருக்குச் செல்ல 26 ரன்கள் தேவை. ஷாபாஸ் நதீம் 4 ரன்களுடனும் ரஷீத் கான் 3 பந்துகளில் 11 ரன்கள் என்று அச்சுறுத்தும் நிலையிலும் இருந்தார்.

19வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார், முதல் பந்தில் ரஷீத் கான் 2 ரன்கள் எடுத்தார். மீண்டும் ரஷீத் கான் 2வது பந்தை வீச பந்து ஆஃப் திசையில் வைடாகச் சென்றது நடுவர் வைடு என்றார்.

அடுத்த பந்து மீண்டும் அதே போல் பக்கவாட்டு வெள்ளைக்கோட்டைக் கடந்து பந்து வைடாகச் சென்றது. ஆஸ்திரேலிய நடுவர் பால் ரெய்ஃபல் வைடு என்று காட்ட கையை லேசாகத் தூக்கினார் அவ்வளவுதான் பவுலர் உடனே எதிர்ப்பு காட்டினார், தோனி உடனே அடுத்தபடியாக எதிர்ப்புக் காட்ட பாதி கையை வைடுக்கு கொண்டு சென்ற நடுவர் ரெய்ஃபல் நமக்கு எதற்கு வம்பு என்று கையை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார். ரீப்ளேயில் அந்த பந்து தெளிவாக வைடு என்று தெரிந்தது.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ வர்ணனையில் “ஃபுல் யார்க்கர் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்றது, ரெய்ஃபல் பந்தை வைடு என்று அறிவிக்க கையை கொண்டு சென்றார், கை பாதி வந்தது, உடனே பவுலர் எதிர்த்தார், தோனியும் எதிர்த்தார். உடனே முடிவை மாற்றிக் கொண்டார் ரெஃய்பல், ரீப்ளேயில் பந்து லைனுக்குத் தள்ளி சென்றது தெரிந்தது” (Full yorker floating away from him outside off. Reiffel shaped to call it a wide, hands half out. Then the bowler protested and, so did Dhoni. And suddenly he rethinks it. Replays show it had curved past the line) என்று குறிப்பிட்டனர். போட்டியை பார்த்தவர்களுக்கும் இது தெரிந்ததே.

நடுவரை தன் பணியைச் செய்ய விடாமல் இப்படி கேப்டன்களும், வீரர்களும் செல்வாக்கு செலுத்தி முடிவை மாற்ற முடியுமென்றால் நடுவர் எதற்கு? ரிக்கி பாண்டிங் ஒருமுறை கங்குலிக்கு சிட்னி டெஸ்ட்டில் அவுட் கொடுத்தது போல் கேப்டன்களே அனைத்தையும் முடிவு செய்யலாம், வீரர்களே முடிவு செய்யலாமே!

இது போட்டியின் முடிவை மாற்றியிருக்கும் என்று கூற வேண்டியதில்லை, நடுவர் ஒரு உண்மையான தீர்ப்பை அளிக்க முடியாமல் இப்படி அணி கேப்டன்கள், வீரர்கள் செல்வாக்கு செலுத்தலாமா? இது கிரிக்கெட் ஆட்டத்தின் பரந்துபட்ட நன்மைக்கு உகந்ததா என்பதே கேள்வியாக உள்ளது. ஏற்கெனவே 2019-ல் தோனி களத்திலேயே இறங்கி நடுவரிடம் வாக்குவாதம் புரிந்தார்.

ஐபிஎல் நிர்வாகம் மட்டுமல்ல, ஐபிஎல் கிரிக்கெட்டில் இப்படி நடப்பதை ஐசிசியும் கவனமேற்கொள்ள வேண்டும். எப்போதுமே பவுலிங் கிரீஸ், பேட்டிங் முனையில் இருக்கும் வைடு கிரீஸ் நடுவருக்குச் சொந்தமானது என்பதே வழக்கமாக இருந்து வந்தது, இன்று முன் கிரீஸ் நோ-பால் கூட தொழில்நுட்ப இடையீட்டினால் நடுவர் கையில் இல்லை. ஆனால் இது கூட நன்மைக்குத்தான் எனலாம். ஆனால் கேப்டன்கள், வீரர்கள் நடுவர்கள் தீர்ப்பின் மீது செல்வாக்குச் செலுத்துவது கிரிக்கெட் ஆட்டத்துக்கு நல்லதல்ல என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

இந்த விவகாரத்தில் தோனியை கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்டு ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x