Last Updated : 21 Jul, 2020 08:56 AM

4  

Published : 21 Jul 2020 08:56 AM
Last Updated : 21 Jul 2020 08:56 AM

நடிப்பில் ஸ்டைல்... ஸ்டைலில் நடிப்பு; ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் நினைவுநாள்

சினிமாவை, சி.பி., என்றும் சி.மு., என்றும்தான் ஒரு கோடு கிழித்துப் பிரித்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. ஒரு கதை அமைக்கப்பட்டிருக்கும். நாயகன் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார். இயக்குநர் திட்டமிட்டபடி கதை நகரும். ஆனால் ‘நடிக்கிறது இவருப்பா. அதுக்குத் தகுந்தது போல தைரியமா எத்தனை பக்கம் வேணும்னாலும் வசனம் எழுதலாம்’ என்றார்கள். ‘அவர் நடிக்கிறார்னா, அந்த சீன்ல, டைட் க்ளோஸப்பை தாராளமாவும் தைரியமாவும் வைக்கலாம்’, ‘வெறும் சோளப்பொரி போடாம, அந்த நடிப்பு யானைக்குத் தகுந்தபடி நடிக்கறதுக்கு தீனியைப் போட்டாத்தான், படமே பிரமாண்டமாகும்’ என்றெல்லாம் சொன்னார்கள். அப்படியொரு நடிப்பு அசுரன்... சிவாஜி கணேசன். அதனால்தான், ‘சி.பி., சிவாஜிக்குப் பின், சி.மு., சிவாஜிக்கு முன்’ என்று பகுத்துப் பிரித்து, பிரித்துப் பகுத்து சினிமாவைப் பார்த்தார்கள்.

‘என்னப்பா அந்தப் பையன், வத்தலும் தொத்தலுமா இருக்கானேப்பா. இவ்ளோ பெரிய கேரக்டரை அந்தப் பையன் தாங்குவானா’ என்று முதல் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே, சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்பட்டது. ‘இவர்தான் இந்தக் கேரக்டர் பண்றாரு. எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்று உறுதியாக சொல்லப்பட்டது. ‘ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்’ என்று இவரின் குரலில் வசனங்கள், தெறித்து விழுந்தன. மிரண்டு வியந்து கைதட்டினார்கள். ’பராசக்தி’ வெளியான நாளில் இருந்து, தன் பராக்கிரம நடிப்பால், சக்திமிக்க திறமையால் மொத்த சினிமாவையும் தன் பக்கம் ஈர்த்தார் சிவாஜி.

‘என்னய்யா இந்த உலகம். சிவாஜி மாதிரி நடிக்கறதுக்கு ஒரு பய கிடையாது. ஆனா, சிவாஜிக்கு இதுவரைக்கும் தேசியவிருது ஒண்ணு கூட தரலியே...’ என்று இன்று வரைக்கும் ஏக்கமும் கோபமுமாக, வருத்தமும் ஆவேசமுமாக புலம்பிக்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். ஆனால், கர்ணன் கவசகுண்டலத்துடன் வந்தது போல், திரையுலகிற்கு நுழைந்த தருணத்திலேயே, வி.சி.கணேசன், பெரியாரால் ‘சிவாஜி’ பட்டத்தை நாடகத்தில் வாங்கியதுதான்... அவர் திரைவாழ்வின் மிகப்பெரிய பதக்கப்பூரிப்பு விருதுகள். கணேசன் சிவாஜி கணேசனானார். சிவாஜி கணேசன், நடிகர் திலகமானார். இவற்றை விட அரசியல் கலப்பு இல்லாத அக்மார்க் விருது, ஐ எஸ் ஓ தரச்சான்றிதழ் கொண்ட விருது, 916 கேடிஎம் கொண்ட விருது, வேறு எந்த விருதாக இருக்கமுடியும்?

‘அனல் பறக்கும் வசனங்கள்’ என்றொரு வார்த்தை, சினிமா விளம்பரத்தில் உண்டு. வசனங்கள் பஞ்சு என்றால், சிவாஜியின் உச்சரிப்பு நெருப்பு. சிவாஜி பேசினார். தியேட்டரில் அனல் பறந்தது. தெளசண்ட்வாலாவாக கரவொலி எழுந்தது. அதற்கு முன்பு எப்படியோ... சிவாஜி வந்த பிறகு, நடிக்க சான்ஸ் கேட்டு வருவோரையும் நடிக்கத் தேர்வுக்கு வருவோரையும் ’எங்கே, சிவாஜி சார் பேசின வசனம் ஏதாவது பேசிக்காட்டுங்க’ என்றார்கள். இவர்கள் கேட்காவிட்டாலும் ‘வானம் பொழிகிறது பூமி நனைகிறது’ என்று வசனத்தை மனப்பாடம் செய்துவிட்டு வந்து பேசினார்கள். ‘கோயிலில் குழப்பம் விளைவித்தேன். ஆம்... கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக’ என்று பேசி நடித்துக் காட்டினார்கள்.

சிவாஜிக்கு முந்தைய காலத்திலும் டிக்‌ஷனரி இருந்தது. அதில் ஆக்டிங் என்ற இடத்துக்கு நேராக நடிப்பு என்று மொழிபெயர்த்திருந்தார்கள். ஆனால் சிவாஜி வந்த பின்னர், ஆக்டிங், நடிப்பு எனும் வார்த்தைக்கு நேராக, சிவாஜி கணேசன் என்று டிக்‌ஷனரி சொன்னது. ஒருகட்டத்தில், நடிப்பின் மொத்த டிக்‌ஷனரி என்றே விஸ்வரூபமெடுத்தார் சிவாஜிகணேசன்.

தோசையில், ஆனியன், ரவா, மைதா, ஊத்தப்பம், பொடி என பல தோசைகள் உண்டு. பணக்கார கேரக்டர் என்றால் நூறுவிதமான கேரக்டரில் முகங்கள் மாற்றுவார் சிவாஜி. ‘அந்தநாள்’ சிவாஜி ஒரு டைப். ‘உயர்ந்த மனிதன்’ சிவாஜி இன்னொரு டைப். ‘பார் மகளே பார்’ சிவாஜி வேறொரு விதம். ‘தெய்வ மகன்’ சிவாஜி இன்னொரு மாதிரி.
மீண்டும் உயிர் பெற்று வருவதென்பது கதையிலும் சரித்திரத்திலும் புராணத்திலும் சாத்தியம். சிவாஜி நடித்தால், கட்டபொம்மன் டெண்ட் கொட்டகை திரைக்குள் கூட வந்துவிட்டுப் போவார். கோவை சிறையில் செக்கிழுத்த வ.உ.சிதம்பரனார், கோடம்பாக்கத்தில் வந்து செக்கிழுத்தார். ’சிந்துநதி மிசை நிலவினிலே’ என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு மகாகவி பாரதியார் கால்ஷீட் கொடுத்தார். சைவ வைணவ பேதமில்லாமல் திருமங்கை ஆழ்வாரும் பிறந்தும் நடந்தும் வருவார். அப்பர் பெருமானும் ஆடியும் அசைந்தும் வருவார். அவ்வளவு ஏன்... ஆனானப்பட்ட சிவபெருமான் இப்படித்தான் இருப்பார் போல... என்று நம்மை பிரமிக்க வைத்தார் சிவாஜி.

நடிப்பது ஒரு கலை. ஸ்டைல் பண்ணுவது என்பது இன்னொரு கலை. சிவாஜியின் மிகப்பெரிய பலம்... நடிப்பில் ஸ்டைலும் ஸ்டைலுக்குள் நடிப்பும் என மிரள வைத்தார். ‘உத்தமபுத்திரன்’ படத்தின் விக்கிரமன் கேரக்டர் முழுக்கவே அத்தனை ஸ்டைல்களைக் கொட்டி, உருவம் கொடுத்திருப்பார். ‘தெய்வமகன்’ மூன்று சிவாஜிக்கும் முப்பது வித்தியாசங்கள் காட்டியிருப்பார். ஒவ்வொருவருக்கும் நடையிலும் பாவனையிலும் மாற்றங்கள் செய்து, ஜாலங்கள் காட்டியிருப்பார். அப்பா சிவாஜியின் கண்களில் இயலாமை, மூத்த மகன் சிவாஜியின் கண்களில் ஏக்கம், இளைய மகன் சிவாஜியின் கண்களில் குறும்பு... சிவாஜியைத் தவிர கண்களும் நடிக்கிற, கன்னங்களும் நடிக்கிற, புருவங்களும் நடிக்கிற கலைஞன்... எட்டாவது அதிசயம்.

‘மாதவி பொன்மயிலாள்’ பாட்டுக்கு ஒரு நடை. ‘தெய்வமகன்’ படத்தில் ஒரு நடை. ‘நவராத்திரி’யில் பணக்கார கேரக்டருக்கு ஒரு நடை, மேனரிஸம். புறங்கையைக் கட்டிக்கொண்டு, ‘பிரஸ்டீஜ் பத்மநாபன்’ கேரக்டருக்கு ஒரு நடை. ’அந்த நாள் ஞாபகம் வந்ததே’ என்று இரண்டு கைகளையும் லேசாகத் தூக்கிக்கொண்டு, கால்களில் ஒரு பாவனையுடன் ஓடி வருவதற்கு ஒரு நடை. டி.எஸ்.பி. செளத்ரிக்கு ஒரு நடை. தோள் துண்டை பிடித்துக்கொண்டு, பவ்யமாக வரும் சிக்கல் சண்முகசுந்தரத்துக்கு ஒரு நடை. சகலத்தையும் இழந்து ‘மனிதன் நினைப்பதுண்டு’ என்று பாடுவதற்கு ஒரு நடை. ‘பூங்காற்று திரும்புமா’ பாட்டுக்குள் நடந்து வருகிற ஊர்ப்பெரியவருக்காக ஒரு நடை. 22 ரீல் ‘திருவிளையாடல்’ படத்தில் ஒரேயொரு சீன் கடற்கரையில் நடந்துவருவாரே... அந்த நடையைப் பார்க்க, நடையாய் நடந்து, முப்பது நாற்பது தடவை பார்த்த ரசிகர்கள் உண்டு.

மாடிப்படியில் ஒவ்வொரு விதமாக ஏறுவார். பல நூறுவிதமாக இறங்குவார். அப்பாவி ரங்கனின் உடல்மொழியும் ‘வசந்தமாளிகை’ ஜமீனின் உடல்மொழியும் வண்டிக்கார ‘பாபு’வின் உடல்மொழியும் மனம் பிறழ்ந்த ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்துக்கு உடல்மொழியும் ‘பலே பாண்டியா’ விஞ்ஞானிக்கு ஒரு உடல்மொழியும் ‘ஆண்டவன் கட்டளை’க்காக உடல்மொழியும் காலில் அடிபட்ட ராணுவ வீரரான ‘பார்த்தால் பசி தீரும்’ படத்துக்காக ஒரு உடல்மொழியும்... என ஒவ்வொரு கேரக்டரிலும் கூடுவிட்டு கூடு பாய்ந்த செப்படிவித்தைக்காரர் சிவாஜியைத் தவிர வேறு யார் இருக்கமுடியும்?

சிகரெட் பிடிப்பதாக இருந்தாலும் வெரைட்டி காட்டியிருப்பார் சிவாஜி. ‘சிகரெட்... உதடு... புகை.. இதிலென்ன வித்தியாசம்’ என்று கேட்கலாம். அலட்சியமாக சிகரெட் பிடிப்பது, ஆணவத்துடன் சிகரெட் பிடிப்பது, பீடி வளிப்பது, பைப் பிடிப்பது, குற்ற உணர்ச்சியுடன் புகைப்பது, குதர்க்கத்துடன் பிடிப்பது, இயலாமையுடன் பிடிப்பது என சிவாஜி கைக்கு வந்துவிட்டால் சிகரெட் கூட நடிக்கும். உதட்டில் இருந்து வருகிற புகை கூட நடிப்பில் அசத்தும். ‘யார் அந்த நிலவு?’க்கு நடையிலும் முகபாவத்திலும் சிகரெட்டிலும் ஸ்டைல் காட்டியிருப்பார்.

சிவாஜியைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். எழுதிக்கொண்டே இருக்கலாம். படித்துக் கொண்டே இருக்கலாம். இன்னொரு விஷயம்... சிவாஜியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

‘சிவாஜி சார் மாதிரி நடிக்கமுடியாது’ என்பார்கள். ‘சிவாஜி சார்தான் செட்டுக்கு முத ஆளா வருவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார் சம்பள விஷயத்துல கறார் காட்டமாட்டாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், அந்தக் கேரக்டராவே மாறிடுவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், விளம்பரப்படுத்திக்காம எத்தனையோ உதவிகள் செய்திருக்கார்’ என்பார்கள். ‘சிவாஜி சார் அப்படி என்கரேஜ் பண்ணி நடிக்க வைப்பாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், எல்லார்கிட்டயும் தாயாப்பிள்ளையா பழகுவார்’ என்பார்கள். ‘சிவாஜி சார், வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிட வைச்சுத்தான் அனுப்புவார்’ என்பார்கள்.

சிவாஜி அப்படித்தான். வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத மனிதர். திரையில் நடிப்பில் பின்னிப் பெடலெடுத்த கலைஞன். நன்றியும் பண்பும் பாசமும் கொண்ட உன்னத மனிதக் கலைஞன்.

சிவாஜி இருக்கும் வரை, ஒவ்வொரு பொங்கலின் போதும் பெருமாள் முதலியார் என்பவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் புத்தாடைகள் வழங்கி, நமஸ்கரித்துவிட்டு வருவார். இன்று சிவாஜியும் இல்லை. பெருமாள் முதலியாரும் இல்லை. ஆனாலும் சிவாஜி குடும்பத்தார், பெருமாள் முதலியார் குடும்பத்தாருக்கு தொடர்ந்து புத்தாடைகள் வழங்கி சந்தித்து வருகிறார்கள். அது நன்றியின் வெளிப்பாடு. பெருமாள் முதலியார்... ‘பராசக்தி’யின் தயாரிப்பாளர். 1952ம் ஆண்டிலிருந்து வந்த பந்தம். பிணைப்பு. பழக்கம்.

சிவாஜிக்கு நிகர் எவருமில்லை என்போம். நிகர் உண்டு.

கட்டபொம்மன், சிதம்பரனார், அப்பர், பக்த்சிங், பாரதியார் முதலானோரை தன்னுடலுக்குள் புகுத்தி, சிவாஜி உலவவிட்டது போல்... அந்த சிவாஜியே மீண்டும் வந்தால்தான் சாத்தியம்.

இதைத்தான் மிக எளிமையாக, பாமரர்களும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்... ‘சிவாஜி மாதிரி நடிக்க ஒருத்தன் பொறந்து வரணும்யா’ என்று!
சிவாஜி... 20ம் நூற்றாண்டின் அதிசயம். 21ம் நூற்றாண்டிலும் தொடர்கிற ஆச்சரியம். எத்தனை நூற்றாண்டுகளானாலும் சரித்திரம்.

- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுநாள் இன்று.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x