Last Updated : 19 May, 2020 03:38 PM

 

Published : 19 May 2020 03:38 PM
Last Updated : 19 May 2020 03:38 PM

’’ராதிகா மாதிரி ஒரு நடிகையைப் பாக்கமுடியாது. அவர் நீண்ட ஆயுளோட இருக்கணும்!’’ - வடிவுக்கரசியின் ‘மெட்டி’ ஞாபகங்கள் - பிரத்யேகப் பேட்டி

சினிமா சம்பந்தப்பட்ட தகவல் வேணும்னாலும் ராஜேஷ் சாரைக் கேப்பேன். ஒரு நல்ல மனிதர் அவர். எங்களுக்குக் கிடைச்ச நல்ல நண்பர். அருமையான மனிதர். ஷோபா நல்ல தோழியா கிடைச்சது போல, ஸ்ரீப்ரியா இனிய ஸ்நேகிதியா கிடைச்சது போல, ராஜேஷ் சார் அப்படியொரு நண்பனா எங்களுக்குக் கிடைச்சார்.’’ என்று நெகிழ்ந்தும் மகிழ்ந்துமாகச் சொல்லுகிறார் வடிவுக்கரசி.


‘இந்து தமிழ் திசை’ யின், 'RewindWithRamji' எனும் வீடியோ நிகழ்ச்சிக்காக, வடிவுக்கரசி தன் வாழ்க்கையை விவரித்த ஒவ்வொரு சம்பவங்களும் வரிகளும் எல்லோர்க்குமான பாடம்.


வடிவுக்கரசி வழங்கிய வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் தொடர்கிறது...


’’ராஜேஷ் சார், மகேந்திரன் சாரோட சொந்தக்காரர். அப்போ ராஜேஷ் சார் வந்து, ‘மகேந்திரன் சார் ஒரு படம் எடுக்கிறாரு. ரெண்டு ஹீரோயின் சப்ஜெக்ட். அம்மா, ரெண்டு பொண்ணுங்கன்னு கதை பண்ணிருக்கார். நீங்க வாங்க’ன்னு கூப்பிட்டார். என் அண்ணன் அறிவழகனுக்கும் ராஜேஷ் சார், நல்ல நண்பர். அவர்கிட்டயும் சொன்னார். ’’வந்து பேசினா, நம்ம வடிவை அந்தக் கேரக்டருக்குள்ளே எப்படியாவது நுழைச்சிடலாம்’னு சொன்னார்.


அதுக்கு அப்புறம் அண்ணனும் ராஜேஷ் சாரும் மகேந்திரன் சார்கிட்ட போய் சொன்னாங்க. ‘ஆமாமாம்... ‘கன்னிப்பருவத்திலே’ல சேர்ந்து நடிச்சாங்க. இதுலயும் நடிச்சா நல்லாருக்கும்’னு மகேந்திரன் சார் ஓகே சொன்னாரு. அப்படி, மகேந்திரன் சாரோட ‘மெட்டி’ படத்துல நான் நடிக்கிறதுக்கு காரணம இருந்தவர் ராஜேஷ் சார்.
’மெட்டி’ படத்துல ஒருதுளி கூட மேக்கப் போடக்கூடாது. நான் ஏற்கெனவே தக்காளிப் பழக் கலர்ல இருப்பேன் பாருங்க! இதுல வேற மேக்கப்பே போடக்கூடாது. யாருமே போடக்கூடாது. எங்களுக்கெல்லாம் அம்மாவா விஜயகுமாரி அம்மா. அவங்க தங்கம் மாதிரி, தகதகன்னு ஜொலிக்கிறாங்க. எங்களுக்கு அண்ணன் கேரக்டர் சரத்பாபு அண்ணன். அவர் வெள்ளைவெளேர்னு இருக்கார். எங்களுக்குக் கொஞ்சம் திருப்தி என்னன்னா... ராஜேஷ் சார்தான். அவர் கொஞ்சம் ‘டார்க்’கா இருப்பாரா... அதுல எங்களுக்குக் கொஞ்சம் திருப்தி. நிம்மதி. படத்துல கேரக்டரே இவ்வளவுதான். எங்களுக்கெல்லாம் அப்பா, செந்தாமரை அப்பா. அவரும் எங்க கலர்லதான் இருப்பார். சொல்லவே வேணாம்.


இதுல முக்கியமானவங்களை இன்னும் சொல்லலை. அவங்கதான் ராதிகா. படத்துல அவங்க எனக்கு தங்கச்சி. படத்துல மட்டுமில்ல, இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு ராதிகா தங்கச்சிதான். அவங்க போக்குக்குப் போயிருவேன், ‘வெள்ளைக் காக்கா பறக்குதாக்கா’ன்னு கேட்டா, ‘ஆமாம் கண்ணு’ன்னு சொல்லிருவேன். ’என்ன ராதிகா சொல்றே? கருப்புக் காக்காதான் பறக்குதுன்னு சொன்னதே இல்லை. அது (ராதிகா) என்ன சொன்னாலும் அதைத் தட்டவே முடியாது. தட்டிப் பேசவும் மாட்டேன். என்ன சொன்னாலும் சரி... ராதிகா என் தங்கச்சிதான்.


திடீர்னு கோபமாப் பேசிரும். திடீர்னு வந்து கொஞ்சும். திடீர்னு ஒருநாள் வந்து அழும். ரொம்ப தங்கமான மனசு ராதிகாவுக்கு. நவரசநாயகின்னா அது ராதிகாதான். வெளியுலகுக்கு ராதிகாவைத் தெரியாது. பழகிப் பாத்தவங்களுக்குத்தான் அந்த நல்ல மனசைப் புரிஞ்சிக்கமுடியும்.


’எடுத்தோம் கவிழ்த்தோம்’னு பேசுமே தவிர, அதுல உள்நோக்கம் இருக்காது. நல்ல மனுஷி மட்டுமில்லை... ராதிகா நல்ல நடிகையும் கூட. ‘மெட்டி’ படத்துல நாங்க நடிக்கவே இல்ல. வாழ்ந்தோம்னு சொல்லணும்.


விஜயகுமாரிம்மா, ஒருவகைல எனக்கு சொந்தம். அவங்க அக்கா பொண்ணு, எங்க சித்தப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஒருவகைல எனக்கு அவங்க அத்தை. அவங்களை அப்பலேருந்தே அத்தைன்னு கூப்பிட்டுதான் பழக்கம். கண்ணகின்னா, எனக்கு விஜயகுமாரி அத்தைதான் ஞாபகத்துக்கு வரும். எனக்கு மட்டுமில்ல... மொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அப்படித்தான்!


விஜயகுமாரி அத்தைக்கு மகளா நடிக்கிறது மிகப்பெரிய பாக்கியம். படத்துக்கு அசோக்குமார்தான் ஒளிப்பதிவாளர். நாங்க எல்லாம் செட்டுக்கு வந்ததும் முதல் வேலையா என்ன பண்ணுவோம் தெரியுமா? ஒரு ‘ஜக்’ல தண்ணி வாங்கி, அசோக்குமார் பாக்கற மாதிரி, முகத்தை நல்லாக் கழுவுவோம். ’நாங்க மேக்கப்லாம் போடாமத்தான் இருக்கோம்’னு காட்றதுக்காகவே இப்படிச் செய்வோம்.


படத்துக்கு ஸ்டில் போட்டோகிராபர் ரவி சார். ரொம்பப் பிரமாதமா போட்டோ எடுப்பார். அவர்கிட்ட, ‘ரவி சார், பாத்துக்கோங்க, மேக்கப்லாம் போட்டுக்கலை,. டைரக்டர் சார்கிட்ட சொல்லுங்க’ன்னு சொல்லுவோம்.


அப்புறம் மகேந்திரன் சார் வருவாரு. ஒரு ஓரமாப் போய் உக்கார்ந்துகிட்டு, அன்னிக்கி சீனுக்கு உண்டான வசனங்களை எழுதுவாரு. ’பின் டிராப் சைலண்ட்’டா இருக்கும். இப்ப கத்துற மாதிரி கச்சமுச்சாகச்சமுச்சானு கத்தமாட்டாங்க யாரும். டயலாக் எழுதி முடிச்சதும், எல்லாரையும் ரவுண்டா உக்காரச் சொல்லி, நடுவுல உக்கார்ந்து வசனம் சொல்லித்தருவாரு. ’யார்’ கண்ணன் சார்லாம், அப்ப அஸிஸ்டெண்ட் டைரக்டரா இருந்தாரு.


மகேந்திரன் சார் சைலண்டா, மெதுவாத்தான் பேசுவாரு. ரொம்ப சன்னமாப் பேசுவாரு. இந்த சீன்ல இது, நீங்க இப்படி வர்றீங்க, இதைப் பேசுறீங்க, அப்ப அவங்க அங்கேருந்து வருவாங்க, ஸ்வேதா என்ன செய்யும்னா (கேரக்டர் பெயரையெல்லாம் நினைவுபடுத்திச் சொல்கிறார் வடிவுக்கரசி)...னு சொல்லித் தருவார்.
ஷூட்டிங் ஆரம்பிக்கும். ஒவ்வொருத்தரும் மகேந்திரன் சொன்ன வசனங்களையெல்லாம் பேசுவோம். அப்படிப் பேசப்பேச, ஆட்டோமேடிக்கா கண்லேருந்து தண்ணி வர ஆரம்பிச்சிரும். அப்படி இருக்கும் வசனங்கள். அதேபோல, மகேந்திரன் சார் கட் சொல்றதும் கேக்காது. ஓகே சொல்றதும் கேக்காது. அவ்ளோ சைலண்டா இருக்கும்.
மகேந்திரன் சாருக்கு அப்புறம் அவ்ளோ சைலண்டா நான் பார்த்த டைரக்டர் பாசில் சார்தான்.அவர் குரலே வெளியே கேக்காது. ஆர்.சி.சக்தி சார் எப்படி தெரியுமா? உணர்ச்சிபூர்வமான சீன்ல, நாம அழுவோறோமோ இல்லியோ... அங்கே அவர் அழுதுட்டிருப்பார். அந்த அழுகைல ‘கட்’ சொல்லக் கூட மறந்துருவாரு.
மகேந்திரன் சார், ‘உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமாம்மா’ன்னு கேட்டார். தெரியும் சார்னு சொன்னேன். விஜிபில ஷூட்டிங். நான் சைக்கிள் ஓட்டுவேன். ராதிகா பின்னால ஏறிக்குவாங்க. பிடிச்சுத் தள்ளிவிடுவாங்க. விழுவோம். எந்திரிப்போம். அதுதான் ‘மெட்டிஒலி காற்றோடு’ பாட்டு.


அதேபோல, விஜிபிலயே தங்கிட்டோம். நைட் உக்கார்ந்து அரட்டை அடிச்சிட்டிருந்தோம். ரெண்டரை ஆயிருச்சு. ‘சரி, போய் குளிச்சிட்டு டீ சாப்பிட்டு கிளம்பிவாங்க. சன்ரைஸ் ஷாட் எடுக்கணும்’ன்னு சொல்லிட்டார் டைரக்டர் சார். ‘ஏங்க எந்த ஊர்லங்க இந்த டயத்துல சன்ரைஸ் வருது’ன்னு கேட்டேன்.


அப்புறம் எல்லாரும் மூணரைக்கெல்லாம் கிளம்பி ரெடியாகிட்டோம். அப்ப அந்த ஷாட் எடுத்தாங்க. அந்தப் பாட்டுல அவ்ளோ அழகா இருக்கு அந்த சீன். அதேபோல விஜயா கார்டன்ல பார்க் மாதிரி ஒரு இடம். இப்ப இல்ல. அதுலதான் நாங்க தர்பூசணி சாப்பிடுற மாதிரி சீன்லாம் எடுத்தாங்க.


விஜயகுமாரி அத்தை இறந்து போயிருவாங்க. அப்போ ராதிகாவோட நடிப்பைப் பாக்கணுமே. அய்யோ... இப்போ நினைச்சாலும் உடம்பே சிலிர்க்குது. அப்படியொரு நடிப்பைக் கொடுக்கறதுக்கு ஒரு நடிகையே இல்லை. ராதிகா மிகச்சிறந்த நடிகை. அந்தப் பொண்ணுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கணும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன். ராதிகாவோட அழுகை, எல்லாருக்கும் வந்து எல்லாரும் அழறோம்.


ஒரு குடும்பமா ஆகிட்டதால, ராதிகாவை தங்கச்சியாவே நினைச்சதால, என்னால அழுகையை அடக்கவே முடியலை. அப்படியொரு சீன், காட்சி, இதுவரைக்கும் அமையலைனுதான் சொல்லணும்’’ என்று உணர்ச்சிபொங்கத் தெரிவித்தார் வடிவுக்கரசி.

- நினைவுகள் தொடரும்

வடிவுக்கரசியின் வீடியோ பேட்டியை முழுமையாகக் காண :

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x