Published : 01 Dec 2014 10:18 AM
Last Updated : 01 Dec 2014 10:18 AM

உதித் நாராயணன் ஜா 10

ஹிந்தி திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகரான உதித் நாராயணன் ஜா-வின் பிறந்த நாள் (டிசம்பர் 1) இன்று. அவரைப் பற்றி அரிய முத்துகள் பத்து...

 நேபாளத்தில் சப்தாரி மாவட்டத் தில் பிறந்தவர். ராஜ்பிராஜ் பி.பி. பள்ளியில் 10-ஆம் வகுப்பும், ஆர். ஆர். காம்பஸ் காட்மண்டுவில் இன்டர்மீடியட்டும் படித்தார். இவரது ஆரம்ப நாட்கள் போராட்ட காலமாக இருந்தன.

 நேபாள வானொலியில் பாடிய மைதிலி, நேபாளி மொழிகளில் நாட்டுப்புற பாடல்கள், நவீன யுகப் பாடல்களுடன் இவரது இசைப்பயணம் தொடங்கியது. அங்கு 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். அவருக்கு பிரபல பம்பாய் பாரதிய வித்யா பவனில் பாரம்பரிய இசை கற்பதற்கு இந்திய தூதரகம் உதவித் தொகை வழங்கியது.

 அந்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டு 1978-ல் பம்பாய் வந்தார். அங்கே 6 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். முதன் முதலாகப் பின்னணி பாடியது, சிந்தூர் என்ற நேபாளத் திரைப்படத்தில். இந்தியாவில் முதல் முதலாக தனது படத்தில் முகம்மது ரஃபியுடன் சேர்ந்து பாடும் வாய்ப்பை ராஜேஷ் ரோஷன் 1980-ல் வழங்கினார். இந்தியத் திரையுலகில் இந்தப் பாடல் இவரை அறிமுகப்படுத்தியது.

 ஆனால், இவரது வெற்றி வரலாறு 1988-ல் பாலிவுட்டின் சூப்பர் டூப்பர் வெற்றிப்படம் ‘கயாமத் ஸே கயாமதக்’கில் பின்னணி பாடியதுடன் தொடங்கியது. இதில் நடித்த நடிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒரு பின்னணி பாடகராக இவருக்கும் அது நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. ஃபிலிம்பேர் விருதையும் வென்றார்.

 அதைத் தொடர்ந்து இந்தியத் திரைப்படத் துறையில் முன்னணி பின்னணிப் பாடகர்களில் ஒருவராகிவிட்டார். தன் தாய்மொழி நேபாளத் திரைப்படங்களிலும் பாடி வந்தார். அங்கே சில திரைப்படங்களில் நடித்தும் இருக் கிறார். இவரது குரல் உலகம் முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது.

 இந்தியாவிலும் அமெரிக்கா, கனடா, உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 3 முறை தேசிய விருதுகள், 5 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

 அவற்றில் பத்மஸ்ரீ விருது, ஸ்கிரீன் வீடியோகான் விருது. எம்.டி.வி. விருது, பிரைட் ஆஃப் இந்தியா கோல்ட் விருது, ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. இவர் ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து பிரபல இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், பாடகர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

 மைதிலி, நேபாளி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் 15,000-க்கும் அதிக மான பாடல்களைப் பாடியுள்ளார். பஜன் சங்கம், பஜன் வாடிகா, ஐ லவ் யூ, தீவானா, யே தோஸ்தி உள்ளிட்ட பல தனிப்பட்ட ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.

 ஹிந்தித் திரையுலகின் 100-ஆவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் இவர் பாடிய “தால் ஸே தால் மிலா” பாடல் “இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல்” என்ற பிரிவில் மிக அதிகமான வாக்குகள் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 கால் நூற்றாண்டைக் கடந்து வெற்றிகரமான பின்னணிப் பாடகராக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் பாடகராகத் திகழ்ந்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x