Last Updated : 13 Jul, 2017 10:46 AM

 

Published : 13 Jul 2017 10:46 AM
Last Updated : 13 Jul 2017 10:46 AM

கலை உலா: அந்த 5 நாட்கள்

நிகழ்வு - 1

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனர் அமரர் கார்த்திக் ராஜகோபாலின் பிறந்த நாள் (ஜூலை 3) அன்று, அவரது பெய ரில் நினைவுப் பரிசு சமீப வருடங் களாக வழங்கப்படுகிறது. இந்த வருடம் அவரது 94-வது பிறந்த நாளின்போது, ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் விருது பெற்றவர் மெளலி. வழங்கியவர் காத்தாடி ராமமூர்த்தி.

சபாவின் துணைத் தலைவர் கே.எம்.நரசிம்மன் வரவேற்பு உரையில், கல்லூரி காலத்தில் மெளலி நாடகம் எழுதத் தொடங்கியது, தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தது, ஒய்.ஜி.பி-யின் குழுவில் இணைந்தது, தனிக்குழு தொடங்கியது, புல்லாங்குழலில் அடுப்பு ஊதியது, டி.வி-க்குள் நுழைந்து ‘நாதஸ்வரம்’ வாசித்தது, சினிமாவில் பிரவேசித்து தெலுங்கு சினிமா வுக்குத் தாவியது என்று மெளலியின் முழு ஜாதகத்தையும் பிட்டு பிட்டு வைத்தார். விருது நிகழ்ச்சியில், நாடகாசிரியர் டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதிய ‘தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.

நிகழ்வு 2

குரு பூர்ணிமாவையொட்டி சுவாமி பார்த்தசாரதியின் ஒரு மணி நேர உரை மியூசிக் அகாடமியில். பேசுபொருள் Devastating Ego. ‘நாசப்படுத்தும் ஈகோ’ என்று தமிழில் சொல்லலாமோ!

90 வயது நிரம்பிய சுவாமியின் 60 நிமிட உரையின்போது ‘பிக் பாஸ்’ ஏற்படுத்தும் சலசலப்பையும், ஜி.எஸ்.டி ஏற்படுத்திய கடுகடுப்பையும் மறந்து, புரியாத வேதாந்த விஷயங்களை இயன்ற வரை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.

நிறைவேறாத ஆசைகள்தான் மன அழுத்தத்துக்குக் காரணம் என்றார் பார்த்தசாரதி. விழித்திருக்கும் நிலை (Waker), கனவு காணும் நிலை (Dreamer), ஆழ்ந்த உறக்க நிலை (Deep Sleeper) என்ற 3 நிலைகள் இருப்பதை உதாரணங்களுடன் விளக்கினார். ஒரு கட்டத்தில், அவர் பேசுவதெல்லாம் எளி தில் புரிந்துவிடுவதுபோல் தோன்றுகிறது. மறுகணம், எதுவுமே விளங்காதது போன்று வெறுமை. அதுவே வேதாந்த மகிமை!

நிகழ்வு 3

கிருஷ்ண கான சபா நடத்தும் ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ மாதாந் திர நிகழ்ச்சியின் 39-வது அமர்வு கடந்த வெள்ளியன்று முனைவர்கள் வ.வே.சு- வும் ராதா பாஸ்கரும் இசைமேதை காயக சிகாமணி ஹரிகேச நல்லூர் முத் தையா பாகவதரைப் பற்றி கலந்துரை யாடினார்கள்.

காயக சிகாமணியின் வாழ்க்கைக் கதையை வா.வே.சு விவரித்துச் செல்ல, தமிழில் நடுநடுவே அந்த மகான் இயற்றிய பாடல்களை பாடினார் ராதா பாஸ்கர்.

1877-ம் வருடம், நவம்பர் 15-ம் தேதி பிறந்தவர் முத்தையா பாகவதர். வறுமை யும், செழுமையும் கலந்த வாழ்க்கை அமைந்தது அவருக்கு. புனல்வேலி ஹரிகேச நல்லூர், திருவையாறு என்று புலம் பெயர்ந்த வண்ணம் இருந்தவர் அவர். வேதங்கள் பயில அனுப்பப்பட்ட வருக்கு இசை வசப்பட்டது. பாடும் திற மையை வளர்த்துக்கொண்டு, பல ஊர் களுக்குப் பயணித்துக் கொண்டிருந்த வருக்கு திடீரென்று குரலில் பாதிப்பு. தஞ்சைக்குத் திரும்புகிறார். நூலகம் சென்று பல்வேறு புத்தகங்கள் படித்துத் தெளிகிறார். ஹரிகதைக்கு தடம் மாறி விற்பன்னராகிறார்.

ஆறடி உயரம். ஆஜானுபாகுவான தேகம். சந்தனமும், ஜவ்வாதும் மணம் பரப்ப, கம்பீரமானத் தோற்றத்தில் பலரையும் கவரும் வண்ணம் இருந்தார் முத்தையா பாகவதர். மதுரை மணி ஐயர் உட்பட நிறைய சீடர்களைத் தயாரித்தப் பெருமைக்குரியவர்!

நிகழ்வு - 4

ஷ்ரத்தாவின் குறு நாடக விழா- 2. ஒன்றரை மணி நேரத்தில் ஐந்து குறு நாடகங்கள் - பஸ் டிக்கெட் பின்னால் நாடகம் எழுதுவது மாதிரி!

மனோரங்ஸ் வெங்கட் இயக்கத்தில் நடிக்கப்பட்ட ‘யோசி’, ஒரு மைமிங் நாடகம். சுற்றுச் சூழலுக்கு நாம் விளை விக்கும் கெடுதல்களை செய்கைகளால் சொல்லி யோசிக்க வைத்தனர். வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு தோலை நடுத்தெருவில் கடாசுவது, ரயில்வே பிளாட்ஃபாரத்தில் பாட்டிலில் தண்ணீர் பிடித்துவிட்டுக் குழாயை மூடாமல் விடுவது. ரயில் பெட்டியில் பல் தேய்த்துவிட்டு வாஷ்பேசின் குழாயைத் திறந்தபடி வந்துவிடுவது… இப்படி பல. சில ஆக்‌ஷன்களில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியாமல் யோசிக்கவும் வைத்த நாடகம்.

கோபாலகிருஷ்ண பாரதியின் மாஞ்சி ராகப் பாடல் ‘வருகலாமோ'. ‘பூமியில் புலையனாய் பிறந்தேனே… நான் புண்ணியஞ் செய்யாமலிருந் தேனே..!’ என்று தில்லையில் சரண மடைந்து, ‘உந்தன் அருகில் நின்று கொண்டாடவும் பாடவும் நான் வரு கலாமோ ஐயா’ என்று நந்தனார் கதறு வதாக அமையப்பட்ட பாடலை எஸ்.எஸ். கலைராணி நாட்டிய நாடகத்தில் நவரசங்களுடன் வெளிப் படுத்த, இடையே நிறைய கைத்தட்டல்கள். இவற்றில் ரசிகர்களின் பொறுமையின்மை எதிரொலிப்பதைப் புரிந்துகொள்ளா மல் கலைராணி பாராட்டாக எடுத்துக் கொண்டதுதான் சோகம்!

வினோதினி வைத்தியநாதனின் ‘தாத்தாவின் பெட்டி' த்ரில்லர் கலந்த காமெடி. டார்ச் வெளிச்சத்தில்தான் முக்கால்வாசி நாடகமும். கதை நடக்கும் வீட்டில் பவர்கட். நிறைய ஜோக்குகளுக்கு ஸ்மைலி போடலாம். சஸ்பென்ஸ் உடையும்போது கட்டை விரல் உயர்த்தலாம்.

சுந்தர ராமசாமியின் சுயசரிதை மாதிரி யான சிறுகதை ஜன்னல். படுத்த படுக்கை யாகி கட்டிலே கதி என்று கிடக்கும் கதா நாயகன். கட்டில் பக்கத்தில் ஜன்னல். அது வழியே பார்க்கும்போது தென்படும் காட்சிகளால் அவனுக்கு ஏற்படும் உணர்வுகள். கட்டில் நகர்த்தப்படும் போது அவனுக்கு ஏற்படும் முடிவு. சுரா வின் இயல்பான, யதார்த்தமான வரி களை, தனி நபராக நாடகத்தை நடத் திச் செல்பவர், தெளிவான சிறப் பான உச்சரிப்பு மற்றும் சிட்டமான மாடுலேஷன்களால் ‘அட’ போட வைத்தார்.

தலை இல்லாவிட்டாலும் அவர் தலை வர்தான் என்பதை நிஜமாகவே வித் அவுட் தலை ஒருவரை மேடையில் நிறுத்திக் காட்டும் நாடகம் ‘தலைவர்'! அர சியல் தொண்டர்கள் இருவர் 20 நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்கும் நையாண்டி. ‘வருகிறார்’ என்பதை சுவரில் பின்னால் இருந்து ர்-ல் ஆரம்பித்து எழுதும் டெக்னிக் மட்டும் புதுசு. அதற்கு சொல்லும் காரணம் சிரிப்பு.

நிகழ்வு 5

கெளரி ராம்நாராயண் ஒவ்வொரு மாதமும் 2-வது ஞாயிறன்று நடத்தும் ‘கதை நேரம்’ நிகழ்ச்சியின் 4-வது அமர்வு கடந்த ஞாயிறன்று. சிம்மாசனத்தில் (சோபா) அமர்ந்து தி.ஜானகிராமன் மற்றும் ஜெயமோகனின் ஒவ்வொரு சிறுகதையை அசத்தலாக வாசித்தார் பாரதி பாஸ்கர்.

கதையில் வரும் பாத்திரங்களாகவே மாறி, ஏற்ற இறக்கங்களுடன் உணர்ச்சிபூர்வமாகப் படித்து நெகிழ வைத்தார் பாரதி பாஸ்கர். இரண்டு கதைகளிலும் ‘சொல்’ பெறும் முக்கியத்துவத்தையும் ‘அறம்’ முன் னிறுத்தப்படும் செய்தியையும் சிலா கித்தார்.

தி.ஜானகிராமனின் ‘பரதேசி வந்தான்’ சிறுகதையில் கோர்ட்டில் வக்கீலாகவும் வீட்டில் நீதிபதியாகவும் செயல்படும் பெரியவர், ஒருவித தஞ்சாவூர் திமிருடன் தன் மகன் திருமணத்தை நடத்துவதையும், பந்தியில் உட்காரும் பரதேசி ஒருவரை எட்டி உதைக்காத குறையாக விரட்டி அடிப்பதையும், பசி தீராத அந்தப் பரதேசி விடுக்கும் சவால் காலதேவனின் குரலாகவே மாறிவிடுவதையும்… தி.ஜா-வின் யதார்த்த வரிகளில் வாசிக்கப்பட்டபோது கும்பகோணத்தில் கோலோச்சிய எழுத்துலக மேதையின் வீச்சு சிலிர்க்க செய்தது.

அடுத்து, ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதை. எழுத்தாளர் ஒருவருடன் ஜெ.மோ உரையாடிய நிஜ சம்பவம். அந்த எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் என்றார் பாரதி பாஸ்கர்.

ஜரிகை தறி தொழிலில் வளமாக வாழ்ந்தவர் வெங்கட்ராம். ஒரு கட்டத்தில் தொழில் படுத்துவிட, அதளபாதாளத்தில் தள்ளப்படுகிறார். ஜீவனத்துக்கு எழுத்தைத் தேர்வு செய்துகொள்கிறார். பட்ட அவமானங்களை விவரிக்கிறார். ஒரே வருடத்தில் 100 புத்தகங்கள் எழுதுகிறார். பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. ஆனால், செட்டியார் பணம் கொடுக்க மறுக்கிறார். செட்டியார் வீட்டில் அறம் காக்கும் ஆச்சி, நடுவீதியில் வேகும் வெய்யிலில் உட்கார்ந்து போராடி பணம் வாங்கித் தருகிறார்.

‘‘நீங்க எழுதி வாழ்ந்தவராச்சே..!’’ என்று ஜெயமோகன் ஒரு இடத் தில் சொல்லும்போது, ‘‘எழுதி னேன்… எங்கே வாழ்ந்தேன்?’’ என்று எழுத்தாளர் பேசும் வசனம் உலுக் கியது. ‘

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x