Published : 22 Aug 2016 10:08 AM
Last Updated : 22 Aug 2016 10:08 AM

ஆனந்த குமாரசுவாமி 10

இலங்கை எழுத்தாளர், கலை ஆர்வலர்



இந்திய கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிகச் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த முன்னோடியான இலங்கை படைப்பாளி ஆனந்த கென்டிஷ் குமாரசுவாமி (Ananda Kentish Coomaraswamy) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இலங்கை தலைநகர் கொழும்பில் (1877) பிறந்தவர். பிரபல வழக்கறிஞர், மொழிபெயர்ப்பாளராக விளங்கிய தந்தையை 2 வயதில் இழந்தார். தாய் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பதால், கணவர் இறந்ததும் குழந்தையுடன் இங்கிலாந்து சென்றார்.

* லண்டன் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பயின்ற குமாரசுவாமி, புவிஅமைப்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். சிங்களம், தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்ச் உட்பட 14 மொழிகள் அறிந்தவர். 18 வயதில் இருந்தே ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.

* கிழக்கத்திய மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம், பண்பாடுகளை ஒப்பிட்டு பல நூல்களை எழுதினார். இலங்கைக்கு 1903-ல் திரும்பியவர் மண்ணியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். ‘தோரனைட்’ என்ற தாதுப்பொருளைக் கண்டறிந்ததற்காக, லண்டன் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

* பணிதொடர்பாக நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றபோது, பாழடைந்து கிடந்த கோயில்கள், விஹாரங்கள், அங்குள்ள சிற்பங்களை ஆராய்ந்தார். சுதேசிக் கலைகளுக்குப் புத்துயிர் அளிக்கவும், மேலைநாட்டு நாகரிகத்தில் மூழ்கிக் கிடந்த இலங்கை மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தவும் சமூக சீர்திருத்த சங்கத்தை 1905-ல் தொடங்கினார்.

* அதன் சார்பில் ‘சிலோன் நேஷனல் ரெவ்யூ’ என்ற இதழைத் தொடங்கினார். அதில் இலங்கையின் பாரம்பரியம், கலாச்சாரம், சுதேசிப் பொருட்களை ஆதரிப்பது, இந்திய கலைகள் குறித்து பல கட்டுரைகள் எழுதினார்.

* ‘இந்தியா மீது அன்பு கொள்ளாவிட்டால், இலங்கைக்கு வாழ்வில்லை’ என்று கூறியவர். நல்ல பேச்சாளர். இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ரவீந்திரநாத் தாகூர், சகோதரி நிவேதிதையுடன் ஆழ்ந்த நட்பு கொண்டவர். நிவேதிதையுடன் இணைந்து பவுத்த புராணக் கதைகளைத் தொகுத்தளித்தார்.

* சிவநடனத்தை விளக்கி ‘சித்தாந்த தீபிகா’ என்ற இதழில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதினார். இதன்மூலம் இந்தியக் கலைகளின் சிறப்பை உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி என போற்றப்படுகிறார். பல கலைகள் குறித்தும் அறிந்ததால், ‘கலாயோகி’ என புகழப்பட்டார்.

* லண்டனில் ‘இந்தியக் கழகம்’ உருவாக உறுதுணையாக இருந்தார். 1912-ல் சாந்தி நிகேதனுக்கு வந்து சில ஆண்டுகள் தங்கியிருந்தார். தென் இந்தியாவிலும் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவில் இருந்தபோது யோகா கற்றார். ‘பிரபுத்த பாரதா’ என்ற இதழில் தாயுமானவர் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

* அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நுண்கலை அருங்காட்சியகத்தில் கிழக்கத்திய நாடுகள் பிரிவின் கலைக் காப்பாளராகப் பணிபுரிந்தார். 1933-ல் அங்கு ஆய்வாளராகப் பணியாற்றினார். பல்வேறு நாடுகளுக்குச் சென்று கலைப் பொருட்களைச் சேகரித்தார். இந்தியக் கலைகள், திராவிட நாகரிகம் குறித்து பல இடங்களில் உரை நிகழ்த்தினார்.

* பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார். புத்தகங்கள், கட்டுரைகள் என 500-க்கு மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டிடக் கலைஞர், திறனாய்வாளர், எழுத்தாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ஆனந்த கென்டிஷ் குமாரசுவாமி 70-வது வயதில் (1947) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x