Published : 12 Jul 2016 02:22 PM
Last Updated : 12 Jul 2016 02:22 PM

யூடியூப் பகிர்வு: கண்ணீர்விட்ட பிரான்ஸ் ரசிகர்.. ஆறுதல் கூறிய போர்ச்சுக்கல் சிறுவன்!

30 நாட்கள், 50 போட்டிகள், 107 கோல்கள் என்று யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துடன் தொடங்கியது. இதில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, முதல் முறையாக போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

ஆட்டம் ஆரம்பித்த அரை மணிக்குள்ளாகவே போர்ச்சுக்கல் நட்சத்திர வீரர், கேப்டன் ரொனால்டோ காயத்தின் காரணமாக கண்ணீருடன் வெளியேறினார். ஆனாலும் பதிலி வீரரால் அடிக்கப்பட்ட அரிய கோலால் போர்ச்சுக்கல் சாதனை படைத்தது. இதனால் 3-வது முறையாக பட்டம் வெல்லும் பிரான்ஸ் அணியின் கனவு கலைந்தது. இந்த வெற்றி போர்ச்சுகல் கால்பந்து வரலாற்றில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

பாரீஸில் நடைபெற்ற இந்த போட்டியை லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் நேரிலும், தொலைக்காட்சியிலும் கண்டுகளித்தனர். போட்டியின் முடிவால் அதிர்ச்சி அடைந்த பிரான்ஸ் ரசிகர் ஒருவர் அழத் தொடங்கினார். தன் நாடு கோப்பையைப் பெற்றதால் மகிழ்ச்சியுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தான் போர்ச்சுக்கல் சிறுவன். அந்த நேரத்தில் சிறுவன் கண்ணீர் விட்டுக் கதறிய பிரான்ஸ் ரசிகரைக் காண நேர்ந்தது.

அவரின் அருகில் சென்று கைகுலுக்கிய சிறுவன், அழுகும் ரசிகரின் தோளைப் பற்றி ஆறுதல் சொல்கிறான். பதிலுக்கு போர்ச்சுக்கல் சிறுவனின் உச்சந்தலையில் மென்மையாக முத்தமிடுகிறார் பிரான்ஸ் ரசிகர். மீண்டும் ஒருமுறை இருவரும் ஆதரவாகக் கட்டியணைத்துக் கொள்கின்றனர்.

வார்த்தைகளால் விவரித்துவிட முடியாத இந்தக் காட்சியின் காணொளியை நீங்களும் காணுங்களேன்...