Last Updated : 09 Aug, 2016 04:54 PM

 

Published : 09 Aug 2016 04:54 PM
Last Updated : 09 Aug 2016 04:54 PM

ஏழ்மைக்கு கல்வி வாய்ப்பை பறிக்கும் அதிகாரம் இல்லை- அனுபவம் சொல்லும் பிரண்ட்ஸ் அறக்கட்டளை

அரசுப் பள்ளியில் குழந்தையை சேர்த்தால் மற்ற குழந்தைகளுடன் போட்டி போட்டு வெற்றி காணமுடியுமா என்ற சந்தேகத்துடன் அரசுப் பள்ளியைக் கடந்து செல்லும் பெற்றோர்களே அதிகம்.

அத்தகையவர்களின் தவறான புரிதலுக்கு பதில் தரும் சாட்சியாக இருக்கிறது சென்னையை சேர்ந்த பிரண்ட்ஸ் கல்வி அறக்கட்டளை.

சென்னை கொடுங்கையூரில் அமைந்துள்ளது பிரண்ட்ஸ் கல்வி அறக்கட்டளை. கடந்த ஜூலை மாதம் தங்களது கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டு மூன்றாம் ஆண்டுக்கு அடிஎடுத்து வைத்திருப்பதை தங்களுக்கே உரிய இயல்பான பாணியில் கொண்டாடியுள்ளனர் பிரண்ட்ஸ் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்த நண்பர்கள்.

2014-ம் ஆண்டு 15 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையில் தற்போது 50 மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் கொடுங்கையூர் பகுதியின் சமூக அடையாளமாக மெல்ல மாறிவருகிறது இந்த பிரண்ட்ஸ் கல்வி அறக்கட்டளை.

பிரண்ட்ஸ் கல்வி அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழாவில், உதவி தொகை பெற்ற மாணவர்கள்

பிரண்ட்ஸ் கல்வி அறக்கட்டளை சமூக அடையாளமாக மாறி வருவதற்கு வலுவான காரணம் இருக்கிறது.

அது என்னவென்றால் பிரண்ட்ஸ் கல்வி அறக்கட்டளையில் உள்ள பெரும்பான்மையானவர்கள் அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் என்பதே.

பிரண்ட்ஸ் அறக்கட்டளையின் தலைவராக உள்ள தேவி, செயலாளர் தனலட்சுமி, பொருளாளர் கலா ஆகிய மூவருமே அரசுப் பள்ளியில் பயின்று தற்போது தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

அரசு பள்ளியில் பயின்று வாழ்க்கையில் வென்றவர்கள் என தங்களை பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் இப்பெண்கள்.

தனலஷ்மி, கலா

பிரண்ட்ஸ் கல்வி அறக்கட்டளையைப் பற்றி அதன் தலைவர் தேவி நம்மிடையே கூறியதாவது:

பிரண்ட்ஸ் அறக்கட்டளை தொடங்க தனிப்பட்ட நோக்கம் ஏதாவது இருந்ததா?

ஏழ்மையைத்தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும். சிறிய வயதில் குடும்பத்தின் பொருளாதாரம் காரணமாக பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் சேர்த்தார்கள். அப்போது அரசுப் பள்ளியில் படிக்கிறேனே என பல தருணங்களில் வருத்தப்பட்டது உண்டு. அதுவெல்லாம் தற்போது வேடிக்கையாக உள்ளது. ஆனால் தற்போது நான் எனது போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்க முக்கிய காரணமாக இருப்பதே அரசுப் பள்ளியில் பயின்றதுதான்.

பிரண்ட்ஸ் கல்வி அறகட்டளையின் தலைவர் தேவி

நான் எனது பள்ளி படிப்பை முடித்தவுடன் எனது பெற்றோரின் முயற்சியால் கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எனது தோழியால் கல்லூரிப் படிப்பை தொடர முடியவில்லை காரணம் ஏழ்மை. அச்சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. என் கல்லூரி படிப்பிற்கு தனியார் அறக்கட்டளை நிறுவனம் பணம் வழங்கியது. அவர்களைப் போல நானும் பிறரது கல்விக்கு உதவ வேண்டும் என்று எண்ணினேன். ஏழ்மையால் எந்தக் குழுந்தையும் கல்வி வாய்ப்பை இழக்கக் கூடாது என்று எண்ணினேன். இதனை என் நண்பர்களிடமும், பெற்றோர்களிடமும் கூறினேன். அவர்களும் என்னை ஊக்கப்படுத்தினர்கள், அதன் விளைவாய் தோன்றியதே பிரண்ட்ஸ் அறக்கட்டளை.

அரசுப் பள்ளியில் படித்ததன் மூலம் என்ன கற்றுக் கொண்டீர்கள்?

அரசுப் பள்ளியில் கல்வியோடு வாழ்வியல் அனுபவங்கள் பல கிடைக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பல்வேறு மாணவர்கள் உங்களோடு படிப்பார்கள். அவர்களின் மூலம்தான் கல்வி பெறுவது எப்படிப்பட்ட போராட்டம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். உங்கள் குழந்தை தனித்திறமையுடன் இந்த உலகத்தோடு போட்டிபோட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அவர்களை அரசுப் பள்ளியில் சேருங்கள்.

உங்கள் அறக்கட்டளையில் பயிலும் மாணவர்கள் பற்றி?

எங்களது அறக்கட்டளையில் பயிலும் மாணவர்கள் அனைவருமே வறுமையான பின்னணியைக் கொண்டவர்கள். பெரும்பாலான குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பவர்கள். அவர்களுக்கு கல்விக்கான உதவித் தொகையை வழங்குவதுடன் மட்டுமில்லாது அவர்களின் தனித்திறமைகளை வளர்க்கவும் சிறப்பு வகுப்புகள் நடத்துகிறோம். இதற்கு என்னுடைய நண்பர்கள் உறுதுணையாக உள்ளனர்.

பிரண்ட்ஸ் கல்வி அறக்கட்டளையில் உங்களது நண்பர்கள் பற்றி?

சினிமா, பொழுதுபோக்கிற்காக பணத்தை செலவு செய்பவர்களுக்கு மத்தியில் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் எனது நண்பர்கள் தனித்துவமானவர்கள்.

மாணவர்களின் கல்விக்கு உதவ வெளி நபர்கள் யாரிடமும் நாங்கள் பணம் பெறவில்லை. எங்களது நண்பர்கள் குழுவில் உள்ள அனைவரது மாதச் சம்பளத்தின் ஒரு பகுதியை சேமித்து வைத்து, அத்தொகையைக் கொண்டே மாணவர்களின் கல்வி செலவுக்கு உதவி வருகிறோம்.

பிரண்ட்ஸ் கல்வி அறக்கட்டளையை தொடர்பு கொள்ள: 9094882746, >www.friendsedutrust.org mailtofet@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x