Published : 30 Apr 2017 08:51 AM
Last Updated : 30 Apr 2017 08:51 AM

திரைத்துறை வேலைநிறுத்தமும் மனித நேரமும்!

எங்கே நிலையற்றதன்மை இருக் கிறதோ அங்கே, குழப்பம் இருக்கத் தான் செய்யும். அதில் இருந்துதான் தெளிவும் விடிவும் பிறக்கும். அரசியல் பாடத்தின் பிரதான ’தியரி’ இது. தமிழகம் தற்போது, இத்தகைய ஒரு சூழலில்தான் பயணித்துக் கொண்டு இருக்கிறது. ஆங்காங்கே பல போராட்டங்களும் எதிர்ப்புகளும் எழுவதன் காரணிகளில் இதுவும் ஒன்று.

பல்வேறு காரணங்கள், கோரிக்கை களுக்காக, வெவ்வேறு கூட்டங்கள், ஊர்வலங்கள், கிளர்ச்சிகள் நடைபெறுகிற போது, எது தங்கள் நலனுக்கானது என்று தெளிவாகத் தெரிகிறதோ, அதற்கு மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே போகும். தேர்தலில் வாக்குரிமை மூலம் வெளிப்படுத்த முடியாததைக்கூட, இந்தக் கொந்தளிப்பும் அதற்கான பொதுமக்களின் ஒத்துழைப்பும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.

அசைத்துப் பார்க்க முடியாத அசுர பலத்துடன் ஓர் அரசாங்கம் இருந்திருந்தால், வீதிக்கு வந்து போராட மக்கள் தயங்கி இருக்கலாம். மனதுக்குள் குமைந்து கொள்வதைவிட வேறு வழி இல்லை. இப்போது என்ன நடக்கிறது..?

ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டம், விவசாயத்துக்கு நிவாரணம், மதுக்கடைகளை அகற்றுதல்... என்று, ஒவ்வொரு பிரச்சினையிலும் தங்கள் எண் ணங்களை மக்கள், ஆழமாக வெளிப் படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், நடிகர் விஷால் இரு நாட்களுக்கு முன் அளித்த பேட்டியைப் பார்க்க வேண்டி உள்ளது. தாங்கள் முன்வைத்த 14 கோரிக்கைகளையும் மே மாதம் 30-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை எனில், காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபடப் போவதாக அறிவித்து இருக்கிறார்.

‘வறட்சி, தண்ணீர்த் தட்டுப்பாடு போன்ற வற்றை எல்லாம் அரசு நிதானமாகப் பார்த்துக் கொள்ளட்டும்; சாமானியன் என்ன துன்பப்பட்டாலும் எங்களுக்குக் கவலை இல்லை; முதலில் எங்கள் ‘பிரச்சினை'யைத் தீர்த்து வையுங்கள்' என்பதான தொனி தெரிகிறது.

ஏற்கெனவே சொன்னதுதான். எல்லோ ரையும் போல, திரைப்படத் துறையின ரும் போராட்டத்தில் ஈடுபடலாம். இந்த ஜனநாயக உரிமையை யாரும் மறுக்க முடியாது, பறிக்கவும் முடியாது. திரைப்படக் கலைஞர்கள் என்றாலே அவர்கள் பின்னால் மிகப் பெரிய மக்கள் கூட்டம் இருக்கிறது என்கிற எண்ணத்தில்தான், அரசியல்வாதிகளும் திரைத்துறையினரின் ஆதரவை நாடுகிறார்கள்.

விஷால் அறிவித்தபடி படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டால், எந்த அளவுக்குப் பொது மக்கள் கவலை அடைந்து திரைத்துறைக்கு ஆதரவாகக் களத்தில் குதிக்கிறார்கள் என்பதை தமிழகம் கவனிக்கும்.

பல கோடிகளைப் போட்டு மேலும் பல கோடிகளை ஈட்டுகிற வணிகமாக திரைப்படத் துறை ஆன பிறகு, ‘கலைச் சேவை' என்று சொல்வதற்கு அங்கே என்ன மிச்சம் இருக்கிறது..? முதலீடு மிகப் பெரிதாக இருக்கும்போது, பல கோடி நஷ்டமும் சிலருக்கு வரத்தானே செய்யும்.

ஒரு ‘கணக்கு போட்டுப் பார்த்தால் இன்னொரு நிதர்சனம் புரியும். தமிழகத்தில் சுமார் 100 திரையரங்குகளில் தினந்தோறும் 4 காட்சிகள் என்று குறைந்தபட்ச கணக்கு வைத்துக் கொண்டாலும், 400 காட்சிகள். ஒரு காட்சிக்கு இரண்டரை மணி நேரம். ஆக, 1000 மணி நேரம் படம் ஓடுகிறது. ஒரு காட்சியில் 100 பேர்தான் பார்வையாளர்கள் என்றே வைத்துக் கொள்வோம். மொத்தம் ஒரு லட்சம் மனித நேரம் சினிமா பார்க்க தினமும் செலவாகிறது. இதுவே, ஓர் ஆண்டுக்கு சுமார் 4 கோடி மணி மனித நேரம்!

இந்நிலையில், திரைப்படத் துறையின் ‘கால வரையறையற்ற' வேலை நிறுத் தத்துக்கு வழி விடுவதன் மூலம், பொதுமக்களின் ஆசையும் எதிர்பார்ப்பும் என்ன என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிடும். அதை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றதுபோல், அரசாங்கம் அவசர, அவசிய முடிவு எடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x