Published : 29 Jun 2017 10:32 AM
Last Updated : 29 Jun 2017 10:32 AM
இளம் தம்பதி புதிதாக ஓர் இடத்துக்குக் குடி போனார்கள்.
அதிகாலை தேநீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்துவிட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்துக்கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,
“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”
கணவனும் பார்த்தான்...
ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.
அவர்கள் எழுந்து தேநீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்:
“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டுவிட்டாளா..?
இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...
இன்றுதான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”
கணவன் அமைதியாகச் சொன்னான்:
“இன்றைக்கு அதிகாலையில்தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”
இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாதபோது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.
ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.
ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.
அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்றுகூட நம்மால் யோசிக்க முடிவதில்லை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT