Published : 02 Aug 2016 10:08 AM
Last Updated : 02 Aug 2016 10:08 AM

பிரபுல்ல சந்திர ரே 10

பிரபுல்ல சந்திர ரே - வங்காள வேதியியல் அறிஞர்



வங்காளத்தை சேர்ந்த கல்வியாளர், வேதியியல் அறிஞரான 'ஆச்சார்யா' பிரபுல்ல சந்திர ரே (Acharya Prafulla Chandra Ray) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* வங்கதேசத்தின் குல்னா மாவட்டம் ராருலி கட்டிபரா கிராமத்தில் (1861) பிறந்தார். இசையிலும் கல்வியிலும் ஆர்வம் கொண்டிருந்த தந்தை, தன் மகனுக்கு சிறந்த கல்வியை வழங்கி னார். 9 வயது வரை கிராமத்திலேயே பயின்றார் பிரபுல்ல சந்திர ரே.

* குடும்பம் கல்கத்தாவில் குடியேறியது. ஆங்கிலம், சமஸ்கிருதம், வங்க இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். லத்தீன், கிரேக்க மொழிகள், பல நாடுகளின் வரலாறுகளைக் கற்றார். கல்கத்தா மெட்ரோபாலிடன் (இன்றைய வித்யாசாகர் கல்லூரி) கல்லூரியில் சேர்ந்தார். இங்கிலாந்து சென்று, எடின்பரோ பல்கலைக்கழகத்தில், அறிவியலில் பட்டம் பெற்றார்.

* 'இந்தியா - சிப்பாய் புரட்சிக்குப் பின்னும் முன்னும்' என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை வெளியானதால், இவரது புகழ் லண்டனில் பரவியது. கல்வி உதவித்தொகை பெற்று, 1887-ல் முனைவர் பட்டம் பெற்றார். அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார்.

* ஜகதீஷ் சந்திரபோஸின் ஆய்வுக்கூடத்தில் உதவியாளராக சேர்ந்தார். 1896-ல் மாநிலக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பதவியேற்றார். மாணவர்களிடம் ஆய்வு மனப்பான்மையை வளர்த்தார். மேகநாத் சாகா, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் உள்ளிட்ட சிறந்த அறிவியலாளர்களை உருவாக்கியவர் இவரே.

* வீட்டில் தனியாக ஆய்வுக்கூடம் அமைத்து, பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதிக நிலைத்தன்மை கொண்ட பாதரச நைட்ரேட் சேர்மத்தை கண்டறிந்தார். கந்தகம், பாஸ்பரஸ், பிளாட்டினம் ஆகியவற்றின் கரிம உலோகச் சேர்மங்கள் பற்றிய இவரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை.

* ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். இந்திய மூலிகைகள் பற்றி ஆராய்ந்தார். அவற்றில் இருந்து மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 'பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபார்மசூட்டிகல்ஸ்' என்ற பெயரில் நாட்டின் முதல் மருந்து தயாரிப்புத் தொழிற்சாலையை 1901-ல் நிறுவினார்.

* சுயசரிதையை 2 தொகுதிகளாக எழுதி வெளியிட்டார். 10 ஆண்டுகள் கடுமையாக பாடுபட்டு ஆராய்ந்து, இந்து மதத்தில் வேதியியல் குறிப்புகள் தொடர்பான நூலை 2 தொகுதிகளாக வெளியிட்டார். பிரம்ம சமாஜத்துடன் இணைந்து சமூகநலப் பணிகளை மேற்கொண்டார்.

* இந்திய வேதியியல் கழகம், இந்திய வேதியியல் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்கினார். தனது ஆராய்ச்சிகள் சம்பந்தமாக 107 கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். மாநிலக் கல்லூரியில் 28 ஆண்டுகள் பணியாற்றினார். தலைசிறந்த ஆசிரியரான இவர், 'ஆச்சார்யா' என்று போற்றப்பட்டார்.

* இந்திய அறிவியல் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். சாகித்ய பரிஷத் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கல்கத்தா அறிவியல் கல்லூரியில் வேதியியல் ஆய்வகத்தின் இயக்குநராகப் பணியாற்றியபோது தன் ஊதியம் முழுவதையும் அந்த ஆய்வகத்தின் வளர்ச்சிக்கே செலவு செய்தார்.

* கல்கத்தா, டாக்கா உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. கதராடை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஏராளமான குடிசைத் தொழில்களைத் தொடங்கினார். அறிவியல் துறையோடு, சமூக மேம்பாட்டுக் களத்திலும் முனைப்புடன் பாடுபட்ட பிரபுல்ல சந்திர ரே 83-ம் வயதில் (1944) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x