Last Updated : 15 Feb, 2018 12:34 PM

 

Published : 15 Feb 2018 12:34 PM
Last Updated : 15 Feb 2018 12:34 PM

மூன்று முறை சத்தியம் செஞ்சு முழுசா ஒரு வருஷம் ஆயிடுச்சு

பிப்ரவரி 15 2017. அன்றுதான் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூருவுக்குச் சென்றார். இன்றுடன் அவர் சிறை சென்று ஓராண்டு ஆகிறது. சிறை செல்வதற்கு முன்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவர் ஓங்கி மூன்று முறை அடித்து சத்தியம் செய்தார். அது என்ன சத்தியம் எதற்கான சூளுரை என்பது அவரும் சொல்லவில்லை யாருக்கும் விளங்கவில்லை.

அவர் அப்படி மூன்று முறை சத்தியம் செஞ்சு முழுசா ஒரு வருஷம் ஆன நிலையில், ஜெ.வுக்குப் பிந்தைய அதிமுக அதிர்வலைகளை வேகமாகப் பார்ப்போம்.

அஇஅதிமுக, ஜெயலலிதா இருந்தவரை அது இரும்புக்கோட்டைதான். ஆனால், அவர் மறைந்த ஒரே மாதத்துக்குள் நடந்த நிகழ்வுகள் 'சரிந்து போன சாம்ராஜ்யம்' என்ற விமர்சனத்தைப் பெற்றது.

ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ல் மறைந்தார். அன்றைய தினமே ஓபிஎஸ் மீண்டும் முதல்வராக்கப்பட்டார். அதுவரை ஜெ.வின் பின்னால் இருந்த சசிகலா கட்சியினரால் முன்னிலைப்படுத்தப்பட்டார். அஇஅதிமுகவின் பொதுச் செயலாளராக அவர் டிசம்பர் 29-ம் தேதி அன்று நியமிக்கப்பட்டார்.

 

 

அவர் பொதுச் செயலாளர் ஆனவுடனேயே கட்சிக்குள் சிலர் புது கோஷம் எழுப்பினர், அது 'கட்சியும் ஆட்சியும் ஒருவரிடம்' என்ற கோஷம். அதன் விளைவு ஓபிஎஸ் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்க ஓபிஎஸ் ஜெயலலிதாவின் சமாதியில் 40 நிமிட தியானத்தில் அமர்ந்தார். அங்கேயே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

ஓவர் நைட்டில் ஓபிஎஸ் தமிழக மக்கள் மத்தியிலும் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் வானளவு உயர்ந்தார். அதிமுக இரண்டானது ஓபிஎஸ் அணி சசிகலா அணி. சென்னை க்ரீன்வேஸ் சாலை ஓபிஎஸ் இல்லம் போயஸ் இல்லத்தைவிட ஊடக கவனத்தைப் பெற்றிருந்தது. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அதிகரித்துவர ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களும் கூவத்தூரில் ஒரு சொகுசு விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதுவரை அவ்வளவோ அறியப்படாத கூவத்தூர் சர்வதேச செய்திகளில்கூட இடம்பெற்றது. சசிகலாவுக்கு ஆதரவாக எல்லோரும் அங்கே திரண்டிருக்க ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வருவார்கள் என காத்துக் கொண்டிருக்க பொறுப்பு ஆளுநரும் சென்னை வருகையை ஒத்திவைத்துக் கொண்டே இருக்க ஹை டிராமா நடந்த காலம் அது.

அப்போதுதான், உச்ச நீதிமன்றம் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. சசிகலா சிறை செல்ல வேண்டிய சூழல் எழுந்தது. ஆனால், சற்றும் அலட்டிக் கொள்ளாமல் கூவத்தூரில் பேட்டி கொடுத்த சசிகலா எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு ஓபிஎஸ் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சிறைக்குப் புறப்பட்டார்.

பிப்ரவரி 15-ம் தேதி 2017, காலையில் போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட அவர் நேராக ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்தார். அங்கே மலர் வளையம் வைத்து வணங்கிய அவர் மூன்று முறை ஓங்கி அறைந்து சபதம் செய்தார். 'சசிகலாவின் சபதம்' புகைப்படமாகவும் செய்தியாகவும் களை கட்டியது. பின்னர் ராமவர தோட்டத்தில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு பெங்களூரு சிறைக்கு சென்றுவிட்டார். இதோ ஓராண்டும் முடிந்துவிட்டது.

இப்போது எடப்பாடியும் பன்னீர்செல்வமும் ஓரணியாக இருக்கின்றனர். இரட்டை இலையும் அவர்கள் வசமே. டிடிவி தினகரன் சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்பது எப்படி சஸ்பென்ஸோ அதேபோல்தான் அந்த சபதத்தின் பின்னணியும் சஸ்பென்ஸ்.

சசிகலாவே சபதத்தைப் பற்றி விளக்கும்வரை காத்திருப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x