Last Updated : 17 Dec, 2023 02:34 PM

 

Published : 17 Dec 2023 02:34 PM
Last Updated : 17 Dec 2023 02:34 PM

Bigg Boss 7 Analysis: வெளியேற்றப்பட்ட கூல் சுரேஷ்; மற்றொரு எலிமினேஷன் யார்? 

இந்த சீசனின் முதல் வாரத்தில் இருந்தே வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம்பிடித்து வந்த கூல் சுரேஷ், இந்த வாரம் ஒருபடி மேலே சென்று எகிறி குதித்து எஸ்கேப் ஆக முயற்சித்தார். அதன்விளைவாக இந்த வாரம் சனிக்கிழமை எபிசோடிலேயே எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாரம் முழுக்கவே பிக்பாஸ் வீடு விக்ரமன் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல அன்பை பொழிந்தபடியே இருந்தனர். இந்த வாரம் கொடுக்கப்பட்ட ஸ்டார் டாஸ்க்கில் வழக்கமாக ஆக்ரோஷமாக களமாடும் அனைவரும் இலகுவாக விட்டுக் கொடுத்ததன் விளைவு விக்ரமுக்கு அந்த ஐந்து ஸ்டார்களும் அசால்ட்டாக கிடைத்தன. ஒருவேளை உண்மையாகவே டைட்டில் வின்னர் ஆகிவிடுவாரோ என்னவோ? டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின் ஒரு பகுதியாக டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதிலும் மற்ற போட்டியாளர்களின் நடனத்துக்கு மணி பெரிதும் உதவி செய்தார். 75வது நாளை கொண்டாடும் விதமாக ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவத்தை பேசினர். விஷ்ணு பேசும்போது உடைந்து அழுதது நெகிழ்ச்சியாக இருந்தது. எலியும் பூனையுமான இருந்த அர்ச்சனா, பூர்ணிமா இடையே ஒரு நல்ல பிணைப்பு உண்டானது. பூர்ணிமாவின் மாற்றத்துக்காக அர்ச்சனா தன்னுடைய ஸ்டாரை அவரிடம் கொடுத்தது நல்ல முன்னெடுப்பு.

இதன் இடையில், 782வது முறையாக கூல் சுரேஷ் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருந்தார். இந்த வாரம் முழுக்க நடந்த எந்த டாஸ்க்கிலும் அவர் ஆர்வம் காட்டவில்லை. டான்ஸ் மாரத்தானிலும் கூட யாரும் தனக்கு பணம் தரவேண்டாம் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார். கொடுக்கப்பட்ட சிம்பு கதாபாத்திரத்துக்கும் அவர் நியாயம் செய்யவில்லை. அதற்கு சிம்புவின் பெயரை கெடுக்கக் கூடாது என்று சால்ஜாப்பு வேறு கூறினார். ஒருபடி மேலே சென்று அதிகாலை யாரும் கண்விழிக்காத நேரத்தில் ஒரு நாற்காலியை தூக்கிவந்து சுவரேறி குதித்து தப்பிக்க முயன்றார். எதேச்சையாக அதை பார்த்த மணி ஓடிவந்து அவரை தாங்கிப் பிடித்து கீழ இறங்கச் செய்தார்.

அவரை கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்த பிக்பாஸ் வழக்கம்போல அவருக்கு உத்வேக உபதேசங்களை அழைத்தார். வெளியே பெரும்பாலும் திரைப்படங்களில் புரோமொஷன்களில் மட்டும் கவனம் செலுத்தும் கூல் சுரேஷுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு என்பதை 75 நாளாகியும் அவர் உணரவே இல்லை என்பதுதான் உண்மை. அதிலும் கடந்த சில வாரங்களாக அவரிடம் ஒருவித மெத்தனமே தென்பட்டது. வார இறுதிகளில் கமலே அதனை பலமுறை சுட்டிக் காட்டியும் அவர் காது கொடுத்து கேட்கவில்லை.

மேலே குறிப்பிட்ட அந்த விக்ரமன் பட கேரக்டர்கள் எல்லாம் இந்த டான்ஸ் மாரத்தான் முடிந்ததும் காணாமல் போய், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல ஆகிவிட்டது. அதற்கு காரணம் ரவீனா செய்த ஒரு குழப்படி. முதலில் பெர்ஃபார்ம் செய்த மணிக்கே தன்னிடம் இருந்த ஒட்டுமொத்த பணத்தையும் கொடுத்து ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார். அவரை பின்பற்றி மற்ற போட்டியாளர்களும் அதையே செய்தனர். இதனால் பிக்பாஸே கடுப்பாகிவிட்டார். எந்த சீசனிலும் இல்லாதவகையில் இரண்டாவது முறையாக பிக்பாஸிடம் கோபம் கனலாய் தெறித்ததை பார்க்க முடிந்தது.

சனிக்கிழமை எபிசோடில், ரவீனாவின் இந்த செயல் குறித்து கமல் சரியான முறையில் சுட்டிக் காட்டியிருந்தார். அன்பு என்ற பெயரில் ரவீனா செய்வது மணிக்கு பாதகமாகவே பலமுறை முடிந்து விடுகிறது. கமல் குறிப்பிட்டது போல இந்த சீசனின் ஒரு மிகப்பெரிய ஸ்பாய்லராகவே ரவீனா இருக்கிறார். ஆனால் அதை மணி, ரவீனா இருவருமே உணரவில்லை. முந்தைய எபிசோட்களிலும் கூட ஜோடியாக சேர்ந்து ஆடும் போட்டியாளர்கள் இருந்தாலும், அவரவர் அடுத்தவருக்காக விளையாடாமல் தனக்காகவே விளையாடினர். ஆனால் வெளியில் இருந்தே பரிச்சயமானவர்களாக இருக்கும் மணி ரவீனா இருவரும் தனித்தனி போட்டியாளர்கள் என்ற பிரக்ஞையே இன்றி சேர்ந்து ஆடிவருகின்றனர்.

ரவீனா பஞ்சாயத்தை பேசிக் கொண்டிருந்தபோது, பூர்ணிமாவை ‘ஸ்கிப்’ செய்துவிட்டு சென்றார் கமல். யாரும் அதை கவனிக்காத நிலையில், வான்ட்டட் ஆக வந்து வண்டியில் ஏறினார் பூர்ணிமா. டான்ஸ் மாரத்தான் டாஸ்க்கின் போது ‘கமல் சார் வரும் எதையாவது சொல்லி சமாளிச்சிக்கலாம்’ என்று தான் எதார்த்தமாக சொன்னது பூதம் போல கிளம்பும் என்று நினைத்திருக்க மாட்டார். மாயாவைப் போல சிம்பிளாக மன்னிப்பைக் கேட்டு விட்டு போயிருக்கலாம். ஆனால் அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று பூர்ணிமா செய்வதெல்லாம் அவருக்கே வினையாகிவிடுகிறது.

கடந்த வாரம் இரண்டு முட்டைகளை சாப்பிட்டுவிடும் என்று எலிமினேஷன் குறித்து பூடகமாக கூறிச் சென்ற கமல், சொன்னது போலவே இந்த வாரம் கையில் கவருடன் உள்ளே நுழைந்தார். வழக்கம்போல நீட்டி முழக்காமல் அட்டையில் கூல் சுரேஷ் என்று எழுதியிருந்ததை காட்டி அவரை வெளியே அழைத்தார். வெளியே செல்வது குறித்த வருத்தம் அவரிடம் பெரிதாக தென்படவில்லை.

சனிக்கிழமை ஒரு எலிமினேஷன் இருந்தால், மறுநாள் இன்னொருவர் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை அனன்யா வார நாட்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டு விட்டதால் இன்னொரு எவிக்‌ஷன் இருக்க வாய்ப்பில்லை. இன்னும் நான்கு சில இருக்கும் நிலையில் அடுத்தடுத்த வாரங்களிலும் கூட டபுள் எவிக்‌ஷன்கள் தொடரக் கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x