Last Updated : 26 Oct, 2023 01:33 PM

 

Published : 26 Oct 2023 01:33 PM
Last Updated : 26 Oct 2023 01:33 PM

மிதுனம் ராசியினருக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் | 30.10.2023 - 19.05.2025

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

எறும்பைப் போல் சுறுசுறுப்பும், எதுகை, மோனையான பேச்சும், சிந்தனையாற்றலும், பகுத்தறிவுத் திறனும் கொண்ட நீங்கள், எந்தக் காரியத்தையும் தொலைநோக்குடன் செய்து முடிப்பவர்கள். எப்போதும் மற்றவர்களுக்கு சவாலாக விளங்கும் நீங்கள், சில சமயங்களில் விட்டுக்கொடுத்து போகும் கெட்டிக்காரர்கள்.

ராகுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீடான லாப வீட்டில் அமர்ந்து கொண்டு பிரபலங்களின் நட்பு, திடீர் பணவரவு, வாகன வசதிகள் என பல வகையிலும் முன்னேற்றம் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்து அமர்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி பெற வைப்பார். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுயமாக தொழில் செய்யும் வல்லமை கிடைக்கும். வீடு, வாகன வசதி பெருகும். ராசிக்கு 10-ல் ராகு வருவதால் வெளிவட்டாரத் தொடர்பு அதி கரிக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 6.7.2024 வரை ராகுபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. வீட்டில் மங்கல இசை முழங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 6.7.2024 முதல் 15.3.2025 வரை ராகுபகவான் சஞ்சாரம் செய்வதால் திருமணம், கிரஹப்பிரவேசம் என வீடு களை கட்டும். தந்தைவழியில் சொத்து சேரும்.

குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 15.3.2025 முதல் 19.5.2025 வரை ராகு பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் எதிர்பார்த்த காரியங்கள் தடைபட்டு முடியும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு பற்றுவரவை உயர்த்து வீர்கள். வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதி காரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் இடமாற்றம் உண்டு. மறைமுக எதிர்ப்புகள் இருக்கும்.கலைஞர்களின் திறமைக்கு பரிசு, பாராட்டு கிட்டும்.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, உறவினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளையும், பல கசப்பான அனுபவங்களையும் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் பதட்டத்திலிருந்து விடுபட வைப்பதுடன் பக்குவப்படுத்துவார். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் இனி நடக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேறும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 4.3.2024 வரை கேது பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்கள் பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. சந்திரனின் அஸ்தம் நட்சத்தி ரத்தில் 4.3.2024 முதல் 8.11.2024 வரை கேது செல்வதால் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு கட்ட வங்கியில் லோன் கிடைக்கும். சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 8.11.2024 முதல் 19.5.2025 வரை கேது செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். தந்தைவழி உறவினர்கள் மதிப்பார்கள். பெண்களுக்கு நல்ல ஆடை, ஆபரண, அணிகலன்கள் சேரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். வியாபாரத்தில் உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாராட்டு, பதவி உயர்வு உண்டு. இந்த ராகு - கேது மாற்றம் முதல் முயற்சியில் தடைகளை தந்தாலும் மனம் தளராத இடைவிடாத முயற்சியால் முன்னேற வைக்கும்.

பரிகாரம்: திருவாரூர் - நாகை பாதையிலுள்ள கீழ்வேளூருக்கு 3 கி.மீ, தொலைவில் உள்ள திருக்கண்ணங்குடி எனும் ஊரில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ காளத்தீஸ்வரரை வணங்குங்கள். மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். சுபிட்சம் உண்டாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x