Last Updated : 04 Mar, 2023 11:50 PM

 

Published : 04 Mar 2023 11:50 PM
Last Updated : 04 Mar 2023 11:50 PM

கன்னி ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் - முழுமையாக | 2023

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சூரியன் - சப்தம ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 09-03-2023 அன்று புதன் பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-03-2023 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14-03-2023 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-03-2023 அன்று சூரிய பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 29-03-2023 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி இடைவிடாத உழைப்பினால் பொருளை தக்க வைத்திடும் கன்னி ராசி அன்பர்களே... இந்த மாதம் மனதில் ஞானம் நிறைந்த புதிய சிந்தனைகளும், எந்த செயலையும் மின்னல் வேகத்தில் புரிந்து கொள்ளும் புதிய மனோபாவமும் உண்டாகும். கடன், வழக்கு போன்ற வகைகளில் பதற்றத்திற்கு இடம்தராமல் நிதான போக்கை கடைப்பிடித்து சிரமங்கள் வராமல் தவிர்த்துக் கொள்ளுங்கள். உடல் நலம் சீராகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் தாயின் உடல் நலத்தில் கவனமும், வீட்டு பாதுகாப்பில் தகுந்த கவனமும் செலுத்துவது நன்மை தரும். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு பத்திரங்களை நம்பிக்கையில்லாத நபர்களிடம் கொடுப்பது சிரமம் தரும். கவனம் தேவை. சமூகத்தில் தகுந்த புகழும், தந்தை வழி, தாய்மாமன் வகை உறவினர்களிடமும் விட்டுப் போன உறவுகளை திரும்பவும் தொடருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வெளி நாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அனுகூலமான நிலையில் கிரகம் அமைந்திருப்பதால் இடைவிடாத முயற்சிகள் மூலம் நற்பலனைத் தரலாம். மேலதிகாரிகள் உங்களை மனதில் வைத்து தான் அடுத்தகட்ட நிலைக்கு உங்களை அழைத்துச் செல்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

தொழிலதிபர்கள் புதிய முதலீடுகள் செய்வதை இப்பொழுது ஒத்திப்போடுவது சிறந்தது. ஆடம்பர எண்ணங்களை ஒதுக்கி விட்டு, கிடைத்த லாபத்தை பயன்பாடு உள்ள வகையில் பயன்படுத்துங்கள். தந்தையின் வழி தொழில் செய்பவர்கள் தந்தையின் நீண்ட கால திட்டம் ஒன்றை உங்கள் மூலமாக நிறை வேற்றும் சிந்தனை தந்தையின் மனதில் அதிகரிக்கும்.

பெண்கள் சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியின் தன்மையை உணர்ந்து செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆபரணச் சேர்க்கையிலும் அனுகூல பலன்கள் உண்டு. வேலைப்பளு காரணமாக உணவு உண்ண நேரமில்லாமல் வயிற்றுத் தொந்தரவு ஏற்படலாம். அலர்ஜி போன்ற உபாதைகளும் வரலாம்.

கலைஞர்கள் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைநழுவி போகலாம். மற்றவர்கள் பாராட்டுக்கு மயங்கி எந்தவொரு நிகழ்விலும் நிதானத்தை இழக்க வேண்டாம். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கிய முடிவுகளை சற்று யோசித்து நிதானத்துடன் எடுக்க ஆபத்து அண்டாது.

அரசயில்வாதிகள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி, பொறுப்புகள் உங்களையே வந்தடையும். எதிர்பார்த்த ஒவ்வொரு விசயங்களிலும் நன்மையே கிட்டும். எதிரிகளைவிட உடனிருப்போரிடம் கவனம் வையுங்கள். குலதெய்வத்தை வழிபட்டு காரியங்களை வெற்றியுடன் நடத்தி வாருங்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது மிக முக்கியம்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் மிகவும் கவனம் செலுத்துவதால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். தந்தை, மகன் உறவு நிலைகளில் நம்பிக்கை குறையாமல் நல்ல முறையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் தகுந்த கவனத்துடன் செயல் பட வேண்டும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பேச்சில் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள்.புதிய வாகனம் வாங்கும் எண்ணமிருப்பின் அதை தள்ளி வையுங்கள்.

அஸ்தம்: இந்த மாதம் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குழப்பத்தின் காரணமாக முடிவுகள் தவறாக அமைந்து விடலாம். ஆதலால் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்வது மிகவும் உத்தமம்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த மாதம் சிலருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தக்க நேரத்தில் உணவு உண்ண முடியாமல் அதனால் வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகளுக்கு மனக்குழப்பங்கள் ஏற்படக் கூடும்.

பரிகாரம்: சூரிய பகவானுக்கு உள்ள மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்வதாலும், குலதெய்வத்தை தகுந்த முறையில் வழிபடுவதாலும் அனுகூல பலன்கள் பெற்று அமைதியான வாழ்க்கை கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 24, 25 | அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x