Published : 30 Oct 2021 01:07 PM
Last Updated : 30 Oct 2021 01:07 PM

2021 - 2022 குருப்பெயர்ச்சி பலன்கள்; மகர ராசி அன்பர்களே! பண மழை; வேலையில் பதவி உயர்வு; தொழிலில் வெற்றி; சொத்து சேரும்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மகர ராசி நேயர்களுக்கு வணக்கம், இந்த குருப்பெயர்ச்சி மகர ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை தர இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இதுவரை மகர ராசியான உங்கள் ராசியில் குரு பகவான் அமர்ந்து நீச்சம் என்ற நிலையை அடைந்திருந்தார். அது மட்டுமல்லாமல் உங்கள் ராசியாதிபதியான சனி பகவான் உங்கள் ராசியிலேயே இருக்கிறார். குரு பகவான் நீசபங்கம் அடைந்து இருந்தாலும் நீச்சத்திற்கு உண்டான வேலைகளை கச்சிதமாகச் செய்திருப்பார். நிறைய மன உளைச்சல்கள், தாங்க முடியாத துயரங்கள், தேவையற்ற இடமாற்றம், வீடு மாற்றம், கடுமையான செலவுகள், வாகனப் பழுது, வீட்டுப் பராமரிப்புச் செலவு, ஆரோக்கியத்தில் அடிக்கடி பிரச்சினைகள், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் என பலவகையிலும் மிகவும் துயரமான நிலை ஏற்பட்டிருக்கும்.


இப்போது உங்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரப்போகிறது. ஆமாம்... உங்கள் ராசிக்கு 2-ஆம் இடத்திற்கு குரு பகவான் செல்கிறார். இனி பண வரவு என்று சொல்வதை விட பணமழை பொழியப் போகிறது என்றுதான் சொல்லவேண்டும். உங்கள் துயரங்கள் அனைத்தும் தீரும். உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கடன் தொல்லைகள் தீரும். இதுவரை ஏற்பட்டுக் கொண்டிருந்த வீண் செலவுகள் இனி இருக்காது. பலவகையிலும் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும். இந்த குருப் பெயர்ச்சி காலகட்டம் உங்களுடைய மன நிம்மதியை திருப்பித் தரக் கூடிய அளவில் இருக்கும்.

குடும்பத்தில் திசைக்கு ஒருவராக மனவருத்தத்தில் இருந்தவர்கள் இனி ஒற்றுமை ஏற்பட்டு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். பணப் பிரச்சினையினால் ஏகப்பட்ட குழப்பங்கள் குடும்பத்தில் இருந்து வந்தது. இனி பணப்பிரச்சினை என்பதே இல்லாமல் இருக்கப்போகிறது. எனவே குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். தாய் தந்தையரிடம் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் தீர்ந்து பெற்றோருடன் இணையும் நேரம் வந்துவிட்டது. சகோதரர்களிடம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். இப்போது பிரச்சினைகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவர்களுடைய கல்வி வளர்ச்சி நன்றாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். பூர்வீகச் சொத்துகளில் பிரச்சினைகள் தீரும். வழக்குகள் சாதகமாகும். எதிரிகள் காணாமல் போவார்கள்.

அலுவலகப் பணிகளில் இதுவரை இருந்துவந்த அழுத்தங்கள் தீரும். கடுமையான பணிச்சுமை இனி இருக்காது. சக ஊழியர்களின் மறைமுக தொந்தரவு மாறும். சக ஊழியர்கள் இப்போது உங்களுக்கு துணை நிற்பார்கள். உயரதிகாரிகளின் பாராமுகம் இனி இருக்காது, அவர்களுடைய ஆதரவு கிடைக்கும். எவ்வளவு திருப்திகரமாக வேலை செய்தாலும் நிராகரித்த நிலை மாறி உங்களுடைய திறமை அங்கீகரிக்கப்படும். தாமதமாகிக் கொண்டிருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். ஊதிய உயர்வு உண்டு. அலுவலகத்தில் முக்கிய பணிகளை, பொறுப்புகளை உங்களை நம்பி தருவார்கள். அதை திறம்படச் செய்வீர்கள். ஆக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு முழுமையான நற்பலன்களைத் தரும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். வெளி நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு பலருக்கும் உண்டு. வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்பு உள்ளது.

சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மிகச் சிறப்பான காலகட்டம் தொடங்கி விட்டது. இதுவரையும் முடங்கிக்கிடந்த தொழில் இப்போது சூடுபிடிக்கும். உற்பத்தியான பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும். ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த உங்கள் தொழில் இப்போது ஊழியர்களின் ஒத்துழைப்போடு மீண்டும் தொழில் வளர்ச்சி அடையும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு தேவையான பண உதவி கிடைக்கும். வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைக்கும். அரசின் நடவடிக்கைகளால் பலவித சிக்கல்களைச் சந்தித்து இருப்பீர்கள். இப்போது அந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். போட்டி நிறுவனங்கள் விலகிச்செல்லும். உங்கள் தயாரிப்புக்கென்று தனி மரியாதை கிடைக்கும். தொழில் தொடர்பாக பெற்ற கடன்கள் அனைத்தும் இப்போது படிப்படியாக தீரும். வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யும் வாய்ப்பு உள்ளது, சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பத்தை தொழிலில் புகுத்தி வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருவீர்கள்.

வியாபாரிகளுக்கு நல்ல காலகட்டம் தொடங்கி விட்டது, இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். வியாபாரத்தில் வெற்றிநடை போடப் போகிறீர்கள். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபார நிறுவனங்கள் நடத்துபவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பொன்னான காலம் தொடங்கிவிட்டது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இரு மடங்கு லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு பலருக்கும் உள்ளது. தற்போது இருக்கும் வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வியாபாரம் நடத்திக் கொண்டிருந்த இடத்தை சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பும் இப்போது உள்ளது. மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களுடைய வளர்ச்சியை மிக பிரம்மாண்டமாக மாற்றித் தரும் என்பது நிச்சயம்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டம் ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்லவேண்டும். நீங்கள் எதைச் செய்தாலும் அல்லது எந்த முயற்சி எடுத்தாலும் நிராகரித்துக் கொண்டே இருந்திருப்பார்கள், இனி உங்களுக்கான மதிப்பு மரியாதை கிடைக்கப்போகிறது. உங்களுடைய கருத்துகளுக்கும், உங்களுடைய செய்திகளுக்கும் அதிக முக்கியத்துவம் கிடைக்கும். புகழ் வெளிச்சம் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மிக முக்கியமான செய்தி சேகரிப்பில் கவனம் பெற்று புகழ் வெளிச்சம் கிடைக்கும். சேவை நிறுவனங்கள் மற்றும் அரசின் விருது, கவுரவம் போன்றவை கிடைக்கும்.

கலைத்துறை சேர்ந்தவர்களுக்கு மிகச் சிறப்பான நன்மைகள் நடக்கக்கூடிய குருப்பெயர்ச்சியாக இருக்கும். இதுவரை முடங்கிக்கிடந்த உங்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் இப்போது சுறுசுறுப்பாக மாறும். கலைத் துறையில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்யப் போகிறீர்கள். உங்களுடைய மதிப்பு மரியாதை உயரும். அரசு விருதுகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு பலருக்கும் உண்டு. பலவிதமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். குடும்பப் பிரச்சினைகள், கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். ஒதுங்கிச் சென்ற நண்பர்கள் மீண்டும் இணைவார்கள். உங்கள் துறை சார்ந்து மிகப்பெரிய சாதனைகளைச் செய்ய கூடிய காலகட்டம் வந்துவிட்டது.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பலவித நன்மைகளை தரப்போகிறது, மிக முக்கியமாக தாமதப்பட்டு கொண்டிருந்த திருமணம் இப்போது நடக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். சொத்து சேர்க்கை வெகு இயல்பாக ஏற்படும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் மூலமாக சொத்து சேர்க்கை கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். அடகு வைத்த நகைகள் மீட்கப்படும். கல்வித் தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு பலருக்கும் உண்டு. துணிச்சலான முடிவுகளை எடுத்து தொழில் செய்யத் தொடங்கினால் மிகப் பெரிய வெற்றியைக் காண முடியும். சிறிய அளவிலான வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் கூட இப்போது வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். அதற்கு தேவையான உதவிகளும் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சியும் அமோகமாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் அனைத்தும் தீரும். இனி மருத்துவச் செலவு என்பது இருக்காது. மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி பல வகையிலும் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காத்திருக்கிறது. கவனச்சிதறலால் கல்வியில் நிறைய இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள், இனி கவனச்சிதறல் இருக்காது. ஞாபகசக்தி அதிகரிக்கும். முடிக்க முடியாமல் இருந்த கல்வியை இப்போது முடிப்பீர்கள். உயர்கல்வி பயில்பவர்களுக்கு பட்டங்கள் கிடைக்கும். கல்வியை முடிந்தவுடனே வேலைவாய்ப்பும் கிடைக்கும். அயல் நாடுகளுக்குச் சென்று கல்வி கற்கும் வாய்ப்பு பலருக்கும் உண்டு. அதற்கு தேவையான வங்கிக் கடன் கிடைக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்யக்கூடிய வாய்ப்பு பலருக்கும் உண்டு. ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் காத்திருக்கிறது, அதிக சிரமம் இல்லாமலேயே கல்வி தொடர்பான விஷயங்கள் அனைத்தும் எளிதாக முடியும். இந்த குருப்பெயர்ச்சியில் குரு பகவான் உங்களுக்கு பல வகையிலும் துணையாக இருப்பார்.

மகர ராசிக்காரர்களுக்கு எப்போதும் பரிகார ஸ்தலமாக இருப்பது திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம். இந்த குருப் பெயர்ச்சி காலத்தில் தர்ப்பாரண்யேஸ்வரரை சென்று வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாக நடக்கும். வாழ்க வளமுடன்.
*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x