Published : 22 Dec 2019 03:14 PM
Last Updated : 22 Dec 2019 03:14 PM

இந்த வார நட்சத்திர பலன்கள் - ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை: (டிசம்பர் 23 முதல் 29 வரை) எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? 


ஜோதிடர் ஜெயம் சரவணன்

ரோகிணி -
கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மற்றவர்கள் உங்களை தேவையில்லாமல் சீண்டிப் பார்ப்பார்கள். அதற்கு நீங்கள் ஆளாகாமல் இருக்க வேண்டும். இஷ்டதெய்வத்தை இடைவிடாமல் வழிபடுங்கள்.தெய்வ மந்திரங்களை, பாடல்களை சொல்லிக்கொண்டே இருங்கள்.

உத்தியோகம் -
சக ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை உங்கள் மீது தேவையில்லாத வீண் பழி சுமத்துவார்கள். பொறுமையாக கையாண்டு இந்த பிரச்சினையிலிருந்து வெளிவரவேண்டும்.வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி இந்த வாரம் செய்ய வேண்டாம். அரசு ஊழியர்கள் தங்கள் கடமையில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கையாளும் பொருட்கள் தொடங்கி வாடிக்கையாளர்கள் வரை நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

தொழில் -
தொழிலில் இந்தவாரம் இயல்பான நிலையே தொடரும். ஒரு சில எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகலாம். தொழில் தொடர்பான பண உதவி அல்லது வங்கிக் கடன் கிடைக்கும். ஒப்பந்தங்கள் போடுமளவுக்கு நடந்த பேச்சுவார்த்தைகள் மேலும் தள்ளிப்போகும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகளோ மாறுதல்களோ இல்லை.பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்கள் அதிக சிரத்தை எடுத்து முதலீடுகள் செய்ய வேண்டும். வியாபாரிகள் ஓரளவுக்கு வளர்ச்சி காண்பார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் இந்த வாரம் பெரிய அளவிலான முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம்.

பெண்களுக்கு -
பொறுமை, நிதானம் அவசியம் தேவை. வீண்செலவுகள் ஏற்படும். எனவே முடிந்தவரை செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிற்சில பிரச்சினைகள் வரும் தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அக்கம்பக்கத்தினருடன் வீண் பிரச்சினைகள் செய்ய வேண்டாம். உறவினர்களிடம் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் சற்றும் எதிர்பாராத தடைகள் ஏற்படும். ஆனாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் ஆற்றலும் கிடைக்கும். எதிர்பார்த்த கல்வி உதவிகள் தள்ளிப்போகும்.

கலைஞர்களுக்கு -
இன்னும் ஒரு சில தினங்கள் பொறுமையாக இருந்தால் பெரிய நன்மைகள் நடக்கும். இந்த வாரம் பொறுமையாக இருப்பதும் நடப்பதை அப்படியே எதிர்கொள்வதும் நன்மையை தரும்.

பொதுப்பலன் -
மன அழுத்தங்களும் தேவையில்லாத குழப்பங்களும் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் உடனடி முடிவுகள் எடுக்கவேண்டாம். பொறுமையாக மற்றவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். ஆரோக்கியத்தில்அச்சுறுத்தல் ஏற்படும், ஆனாலும் பயப்பட வேண்டாம்.பணத்தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும். ஒருசிலருக்கு தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டியது வரும். மன உளைச்சல் அதிகமாக இருக்கும். மருத்துவ ஆலோசனையும், குலதெய்வ வழிபாடும் நன்மை தரும்.

இந்த வாரம் -
திங்கள் -

வியாபார பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்த படியே கிடைக்கும்.

செவ்வாய் -
அலைச்சல்கள் அதிகமாக இருக்கும் செலவுகள் ஏற்படும் ஒருசிலருக்கு மருத்துவச் செலவு உண்டாகும்.

புதன் -
எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.சொத்து விற்பனை தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.தொழில் சம்பந்தமான உதவி கிடைக்கும்.

வியாழன் -
வரவை விட செலவு அதிகமாக இருக்கும் குழப்பமான மனநிலை தோன்றும். தேவையில்லாத அலைச்சல் ஒன்று ஏற்படும்.

வெள்ளி -
சந்திராஷ்டம தினம். எனவே கவனமாக இருக்கவேண்டும். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளைக் கவனமாக பேச வேண்டும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிட கூடாது.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி இன்று கிடைக்கும் பணத்தேவைகள் பூர்த்தியாகும் வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும் நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறும்.

ஞாயிறு -
ஆலய வழிபாடு ஏற்படும். ஒருசில நல்ல தகவல்கள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். தொழில் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வணங்கவேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு பிரச்சினையின் வீரியத்தைக் குறைக்கும். எதிர்ப்புகளை காணாமல் போகச் செய்யும். தேவைகள் பூர்த்தியாகும்.

********************************************

மிருகசீரிடம் -
எந்த ஒரு விஷயத்திலும் பதட்டப்படாமல் இருப்பது நல்லது. வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். அதை சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் உங்கள் கருத்துக்களை முதலில் கூறவேண்டாம். வழக்குகள் ஏதேனும் இருந்தால் முடிந்தவரை தள்ளிப்போடுங்கள். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

உத்தியோகம் -
பணியிடத்தில் உங்கள் வேலையை மட்டும் செய்து வாருங்கள். மற்றவர்களுக்கு உதவுகிறேன் என்று நீங்களாக எதிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்களின் வேலையை நீங்கள் செய்ய வேண்டியது வரும். உயரதிகாரிகளின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள். எதிர்வாதம் செய்ய வேண்டாம்.அரசு ஊழியர்கள் தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பொறுமையாக அனைத்தையும் கையாள வேண்டும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கையாளும் பொருட்களிலும், வாடிக்கையாளர்களிடம் பேசும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.


தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த ஒரு சில உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும், ஆனால் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு பொருட்களைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். பங்கு வர்த்தகத் துறையினர் அளவாக முதலீடு செய்ய வேண்டும். வியாபாரிகள் ஓரளவுக்கு தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் இப்போதைக்கு பெரிய திட்டங்கள் ஏதும் தீட்ட வேண்டாம்.

பெண்களுக்கு -
கடந்த சில நாட்களாக இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு தீரும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் இழுபறியாகவே இருக்கும். தேவையில்லாத சர்ச்சைகளில் நீங்களாக சிக்க வேண்டாம். பணவரவு ஓரளவுக்கு இருக்கும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றமும் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவு குறையும்.

கலைஞர்களுக்கு -
எதிர்பார்த்த ஒப்பந்தம் இந்த வாரம் நிறைவேறுவதற்கு வாய்ப்பு உண்டு. சிற்சில தடைகள் வந்தாலும் அதை எல்லாம் தாண்டி வெற்றி பெறுவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

பொதுப்பலன் -
மனதில் இனம் புரியாத பயம் ஏற்படும். தேவையில்லாத கற்பனைகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த ஒரு சில உதவிகள் தள்ளிப்போகும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் வாய்ப்பு உண்டு.

இந்த வாரம் -
திங்கள் -

அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் தள்ளிப்போகும்.செலவுகள் இருமடங்காக ஏற்படும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

செவ்வாய் -
எதிர்பார்த்த வியாபார விஷயம் ஒன்று சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். ஆதாயம் தரும் ஒப்பந்தம் உண்டாகும்.

புதன் -
அலுவலகத்தில் மற்றவர்கள் வேலையைச் செய்ய வேண்டியது வரும். வியாபார விஷயங்கள் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். ஆனாலும் முடிவுகள் ஏற்படாது. கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒன்று நெருக்கடி தரும்.

வியாழன் -
பொறுமை அவசியம். நிதானத்தை இழக்கக்கூடாது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஒப்பந்தங்கள் போடுவதைத் தள்ளி வைக்கவேண்டும் ஆலய வழிபாடு மன அமைதி தரும்.

வெள்ளி -
எதிர்பார்த்த ஒரு சில உதவிகள் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். தொழில் தொடர்பான உதவிகள் இன்று கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.

சனி-
நண்பர் ஒருவரால் ஆதாயம் கிடைக்கும். பணத்தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும். செலவுகள் குறையும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக பேசிவந்த பேச்சுவார்த்தை இன்று நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

வணங்கவேண்டிய தெய்வம் -
சிவபெருமானுக்கு வில்வ இலையைக் கொண்டு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யுங்கள். பிரச்சினைகள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும். மன அமைதி ஏற்படும்.

*********************************************************


திருவாதிரை -
பொருளாதாரப் பிரச்சினைகள் ஓரளவுக்குத் தீரும். தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் தோன்றும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகமாகும். நண்பர்களிடம் தேவையில்லாத மனவருத்தங்கள் ஏற்படும்.

உத்தியோகம் -
பணியிடத்தில் அழுத்தங்கள் அதிகமாக இருக்கும். பணிச் சுமை அதிகமாகும். அடுத்தவர் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய நெருக்கடி உண்டாகும். உயரதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகமாவது மட்டுமல்லாமல், வீண் சர்ச்சைக்கு ஆளாக வேண்டியது வரும்.

தொழில் -
சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் ஏற்படுவதில் தாமதம் ஏற்படலாம். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் கூட்டாளிகளுக்கு கருத்து வேறுபாடுகள் தோன்றும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். ஒருசிலர் கூட்டுத் தொழிலில் இருந்து தனியாக தொழில் செய்ய முற்படுவார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும், பொருட்களின் தரத்தில் அக்கறை காட்ட வேண்டும். பங்கு வர்த்தகத் துறையினர் அளவாக முதலீடு செய்யவேண்டும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் கையாளும் பொருட்களில் கவனமாக இருக்கவேண்டும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் துறையில் இருப்பவர்களுக்கு இன்னும் சில வாரங்கள் பொறுத்திருந்தால் நன்மைகள் அதிகமாக நடக்கும்.

பெண்களுக்கு -
எதிர்பார்த்த உதவிகள் ஓரளவுக்கு கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எனவே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதுபடுத்திப் பேச வேண்டாம். பொறுமை, நிதானம் அவசியம் தேவை.

மாணவர்களுக்கு -
கல்வியில் ஒரு சில தடைகள் ஏற்படும். ஆசிரியர்களின் வருத்தத்திற்கு ஆளாக நேரிடும். சக மாணவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

கலைஞர்களுக்கு-
எதிர்பார்த்த ஒரு சில ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். எதிர்பார்த்த நண்பரின் உதவி கிடைக்காமல் போகும். பணத் தேவைகள் அதிகமாக இருக்கும்.

பொதுப்பலன் -
நண்பர்களிடம் மட்டுமல்லாமல், குடும்பத்தினரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள். தேவையில்லாமல் கோபப்பட வேண்டாம். உங்கள் கருத்திலேயே பிடிவாதமாக இருக்க வேண்டாம். எதையும் விட்டுக் கொடுத்துச் செல்வது, அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை விட்டுக்கொடுத்துச் செல்வதால் மட்டுமே தீர்த்துக் கொள்ள முடியும்.ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். பிறப்பு உறுப்பு, ஆசனவாய் போன்ற இடங்களில் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இந்த வாரம் -
திங்கள் -

எடுத்த வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வேண்டிய உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

செவ்வாய் -
வியாபார விஷயமாக அலைச்சல்கள் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும்.

புதன் -
வீடு நிலம் போன்ற வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான உதவிகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

வியாழன் -
நன்மைகள் பெருகும். பிரச்சினைகள் குறையும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் இழுபறியாக இருந்து, சுமுகமான முடிவை எட்டும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப் போகலாம்.

வெள்ளி -
அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். செலவுகளும் ஏற்படும். வாகனப் பழுது சரி செய்ய முற்படுவீர்கள். முக்கியமான சந்திப்புகள் தள்ளிப்போகும்.

சனி-
அமைதியாக இருப்பது நல்லது. வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். பிரச்சினைகள் தேடிவரும். அதிலிருந்து விலகியே இருங்கள். நண்பர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.

ஞாயிறு -
இன்று சந்திராஷ்டம தினம். பொறுமை மிக மிக அவசியம். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். வியாபார சந்திப்பு ஏதும் இருந்தால் ஒத்தி வையுங்கள். ஆலய வழிபாடு மன அமைதி தரும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்யுங்கள். நன்மை அதிகமாக இருக்கும். தடைகள் அகலும். பிரச்சினைகள் குறையும்.
********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x