Published : 26 Sep 2019 11:17 AM
Last Updated : 26 Sep 2019 11:17 AM

குருப்பெயர்ச்சி : உத்திரட்டாதி நட்சத்திரப் பலன்கள்


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கிரகநிலை:

குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு இருபதாவது நட்சத்திரத்தில் இருந்து இருபத்தி ஒன்றாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.

பலன்:

சாந்தமான குணமும் அதேவேளையில் யாரேனும் சீண்டினால் பொறுக்க மாட்டாத குணமும் கொண்ட உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே.

இந்த குருப் பெயர்ச்சியால் மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளைச் செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையைக் கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியைத் தரும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு : நிதானத்தைக் கடை பிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர்ப் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

கலைத்துறையினருக்கு : போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். செலவுகள் குறையும். உடன் பனி புரிவோர் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள்.

அரசியல் துறையினருக்கு : நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும்.

பெண்களுக்கு : உங்களது ஆலோசனையைக் கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்களுக்கு : வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.

பரிகாரம்: நந்தீஸ்வரரை பூஜித்து வணங்கி வந்தால், எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.

மதிப்பெண்கள்: 77% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

+: ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும்

-: மனஸ்தாபம் உண்டாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x