Last Updated : 13 Apr, 2024 05:06 PM

 

Published : 13 Apr 2024 05:06 PM
Last Updated : 13 Apr 2024 05:06 PM

தனுசு ராசிக்கு தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் | குரோதி வருடம் எப்படி? - ஏப்.14, 2024 முதல் ஏப்.13, 2025 வரை

தனுசு சிறு உளிதான் பெரிய மலையை உடைக்கும் என்ற சூட்சமத்தை உணர்ந்த நீங்கள், சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பவர்கள். ராசிக்கு 7-ம் வீட்டில் குரோதி வருடம் பிறப்பதால் உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். தள்ளிப் போன திருமணம் உடனே முடியும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும்.

இந்தாண்டு பிறக்கும் நேரத்தில் சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் வீராவேசமாக பேசி விமர்சனங்களுக்குள்ளாவதை விட கனிவாகப் பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பது தான் நல்லது என்ற முடிவுக்கு வருவீர்கள். பணப்பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவுக்கு அவர்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய கடன் பிரச்சினையில் ஒன்று தீரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

வருடப் பிறப்பு முதல் 30.04.2024 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் நிற்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் செய்து வைப்பீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். சில நேரங்களில் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்புணர்வு ஏற்படக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

சனிபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டிலேயே இந்தாண்டு முழுக்க முகாமிட்டிருப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் வந்து அமையும். பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். உங்களை எதிர்த்தவர்களெல்லாம் நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அறிஞர்கள், நண்பர்கள் சிலரின் கருத்துகளை கேட்டு அதன்படி நடந்துக் கொள்வீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

இந்தாண்டு முழுக்க ராகு 4-ம் இடத்திலும், கேது 10-ல் இடத்திலும் தொடர்வதால் சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். சொத்தை விற்பதாக இருந்தால் ஒரே தவணையில் பணம் வாங்கிக் கொண்டு உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வது நல்லது. தாயாருக்கு அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டில் வலி, கழுத்து எலும்புத் தேய்மானம் வந்துச் செல்லும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும். அவர் உங்களை கோபத்தில் ஏதேனும் பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம். நேரம் தவறி சாப்பிட வேண்டியிருக்கும். அலைச்சலும் இருக்கும். அசிடிட்டி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உணவில் பழங்கள், காய்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஐம்பது ரூபாயில் முடியக்கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். இடப்பெயர்ச்சி உண்டு. வாடகை வீட்டிலிருப்பவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்களால் தொந்தரவுகள் ஏற்படும். சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு அபராதத் தொகை கட்ட வேண்டி வரும்.

அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால் வழக்கில் தீர்ப்புத் தள்ளிப் போகும். சின்ன சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். வீட்டில் கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய் பிரச்சினை வந்துப் போகும். உங்களைப் பற்றிய விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள் வரும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது. ஏற்றுமதி - இறக்குமதி, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள், கான்ட்ராக்ட் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் வரும். ஆவணி மாதத்தில் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள்.

01.05.2024 முதல் குரு உங்கள் ராசிக்கு 6-ல் அமர்வதால் உத்தியோகத்தில் பொறுப்பு அதிகமாகும். சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள்தான் காரணம் என்று தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும்.

சிலர் பணியிலிருந்து கட்டாய ஓய்வுப் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகும். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இந்த புத்தாண்டு உங்களைக் கொஞ்சம் செம்மைப்படுத்துவதற்கு உதவுவதுடன், சமூகத்தில் வளைந்துக் கொடுத்துப் போகும் கலையை கற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், அய்யாவாடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரத்யங்கரா தேவியை சென்று வணங்குங்கள். செங்கல் சூளை அல்லது கல்குவாரியில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிக்கு உதவுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


-வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x