Last Updated : 13 Apr, 2024 04:16 PM

 

Published : 13 Apr 2024 04:16 PM
Last Updated : 13 Apr 2024 04:16 PM

விருச்சிகம் ராசிக்கு தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் | குரோதி வருடம் எப்படி? - ஏப்.14, 2024 முதல் ஏப்.13, 2025 வரை

விருச்சிகம் வாக்குசாதுர்யத்தால் வாதங்களில் வெல்லும் நீங்கள், வந்த சண்டையை விட மாட்டீர்கள். சூரியனும், சுக்ரனும் சாதகமாக இருக்கும் போது இந்த குரோதி வருடம் பிறப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். புது வேலைக் கிடைக்கும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள்.

உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். சவால்களை சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி பைசல் செய்வீர்கள்.

30.04.2024 வரை குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்துக் கிடப்பதால் முதல் முயற்சியிலேயே சில வேலைகளை முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிப்பீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

1.05.2024 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் உங்களின் திறமைக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மனைவியின் ஆரோக்கியம் சீராகும். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களுடைய பெருந் தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். சொந்த - பந்தங்களின் அன்புத் தொல்லைகள் குறையும். அக்கம் - பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்தில் சீரமைப்புப் பணிகள மேற்கொள்வீர்கள்.

இந்தாண்டு முழுக்க அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கட மான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் நீங்களே நேரடியாக தலையிட்டு முடிப்பது நல்லது. சொத்து வாங்கும் போது முறையான பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் வழக்கறிஞரை வைத்து சரி பார்த்து வாங்குவது நல்லது. தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்ற குழப்பம் அதிகமாகும்.

இந்தாண்டு முழுக்க ராகு ராசிக்கு 5-ம் வீட்டிலேயே அமர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போவது நல்லது. அவர்களின் திருமணம், உயர்கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். கூடாப் பழக்கமுள்ளவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந் தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது.

கேது இந்தாண்டு முழுக்க லாப ஸ்தானத்திலேயே நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். புதுப் பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள்.

அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். பெரியளவில் முதலீடுகள் வேண்டாம். கடன் வாங்கி கடையை விரிவுபடுத்தி, நவீனமாக்குவீர்கள். உணவு, இரும்பு, கன்சல்டன்சி, ரியல் எஸ்டேட், மர வகைகளால் ஆதாயம் உண்டு. பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். சிலர் புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள்.

01.05.2024 முதல் உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சனி 4-ல் நிற்பதால் மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமாகும். இந்தப் புத்தாண்டு ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு பரபரப்பாகவும், அதிக நேரம் உழைக்க வைப்பதாகவும் இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு தனி அங்கீகாரத்தை தருவதாக அமையும்.

பரிகாரம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுக்குறிக்கையில் வீற்றிருக்கும் ஸ்ரீகால பைரவரை சென்று வணங்குங்கள். வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். ஆரோக்கியம் சீராகும்.

-வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x