Last Updated : 12 Oct, 2023 03:18 PM

 

Published : 12 Oct 2023 03:18 PM
Last Updated : 12 Oct 2023 03:18 PM

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.12 - 18

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 15.10.2023 அன்று சப்தம ஸ்தானத்திற்கு புதன் பகவான் மாறுகிறார் | 18.10.2023 அன்று சப்தம ஸ்தானத்திற்கு சூர்ய பகவான் மாறுகிறார்.

பலன்கள்: சுதந்திரமாக செயல்படும் எண்ணம் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். எதையும் மனோ தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்களுடன் சுமூக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும். பெண்களுக்கு எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.

கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது. அரசியல் துறையினருக்கு கடந்த காலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்: முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சினைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 15.10.2023 அன்று ரண ருண ரோக ஸ்தானத்திற்கு புதன் பகவான் மாறுகிறார் | 18.10.2023 அன்று ரண ருண ரோக ஸ்தானத்திற்கு சூர்ய பகவான் மாறுகிறார்.

பலன்கள்: பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிக்கும் உங்களுக்கு இந்த வாரம் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம், கவலை நீங்கும். தைரியம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும். பெண்களுக்கு எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும்.

கலைத்துறையினருக்கு சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். அரசியல் துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும்.

சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற மிகவும் கவனமாக பாடங்களை படிப்பீர்கள்.

பரிகாரம்: அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்க கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாழ்க்கை வளம் பெறும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 15.10.2023 அன்று பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு புதன் பகவான் மாறுகிறார் | 18.10.2023 அன்று பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சூர்ய பகவான் மாறுகிறார்.

பலன்கள்: எதிரில் இருப்பவரை சரியாக எடைபோடும் திறமை பெற்ற உங்களுக்கு இந்த வாரம் பணப் பற்றாக்குறை நீங்கும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படும் சூழ்நிலை உருவாகலாம் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் கடும் முயற்சிக்குப் பின் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். மனோதைரியம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். இடமாற்றம் உண்டாகலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் கஷ்டம், சுகம் இரண்டும் ஏற்படலாம். எல்லாரும் நட்புடன் பழகுவார்கள். பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும்.

கலைத்துறையினருக்கு பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். சனி சஞ்சாரத்தால் வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பு உண்டாகலாம். அரசியல் துறையினருக்கு நிலவி வந்த பிரச்சினைகள் மறையும். மாணவர்களுக்கு அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வணங்க முன்ஜென்ம பாவம் தீரும். குடும்ப கஷ்டம் தீரும்.

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தனவாக்கு ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 15.10.2023 அன்று சுக ஸ்தானத்திற்கு புதன் பகவான் மாறுகிறார் | 18.10.2023 அன்று சுக ஸ்தானத்திற்கு சூர்ய பகவான் மாறுகிறார்.

பலன்கள்: அடுத்தவர் யாரும் குறை கூறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு இந்த வாரம் எதிலும் லாபம் கிடைக்கும். எடுக்கும் காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நன்மை தரும்.

பெண்களுக்கு மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். அரசியல் துறையினருக்கு நல்ல பெயர் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: குலதெய்வத்தை தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 15.10.2023 அன்று தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு புதன் பகவான் மாறுகிறார் | 18.10.2023 அன்று தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு சூர்ய பகவான் மாறுகிறார்.

பலன்கள்: எதற்கும் கலக்கமோ, அதிர்ச்சியோ அடையாத உங்களுக்கு இந்த வாரம் வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமூகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.

சுக்ரன் சஞ்சாரத்தால் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு அலைச்சல் இருக்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: சிவபெருமானை அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூர்யன், புதன், கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ) - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 15.10.2023 அன்று தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு புதன் பகவான் மாறுகிறார் | 18.10.2023 அன்று தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு சூர்ய பகவான் மாறுகிறார்.

பலன்கள்: பணவிஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பவரான உங்களுக்கு இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

குடும்பத்தில் திடீர் பிரச்சினை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள்.

புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

பரிகாரம்: தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 15.10.2023 அன்று ராசி ஸ்தானத்திற்கு புதன் பகவான் மாறுகிறார் | 18.10.2023 அன்று ராசி ஸ்தானத்திற்கு சூர்ய பகவான் மாறுகிறார்.

பலன்கள்: அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருக்கும் உங்களுக்கு இந்த வாரம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தை தரும். வீண் கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும்.

கலைத்துறையினருக்கு எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

பரிகாரம்: தினமும் லக்ஷ்மியை வணங்கி வர கடன் பிரச்சினை குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 15.10.2023 அன்று விரைய ஸ்தானத்திற்கு புதன் பகவான் மாறுகிறார் | 18.10.2023 அன்று விரைய ஸ்தானத்திற்கு சூர்ய பகவான் மாறுகிறார்.

பலன்கள்: திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவரான உங்களுக்கு இந்த வாரம் நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். பெண்களுக்கு மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும்.

காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம். கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ சாற்றி வணங்க எல்லா தடைகளும் விலகும். காரிய வெற்றி உண்டாகும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 15.10.2023 அன்று லாப ஸ்தானத்திற்கு புதன் பகவான் மாறுகிறார் | 18.10.2023 அன்று லாப ஸ்தானத்திற்கு சூர்ய பகவான் மாறுகிறார்.

பலன்கள்: உயர்வான எண்ணங்களுடன் வாழும் உங்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை தீரும். பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும்.

கலைத்துறையினருக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். அரசியல்துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம்: மஞ்சள் சாமந்திபூவை சிவனுக்கு அர்ப்பணித்து வழிபட நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 15.10.2023 அன்று தொழில் ஸ்தானத்திற்கு புதன் பகவான் மாறுகிறார் | 18.10.2023 அன்று தொழில் ஸ்தானத்திற்கு சூர்ய பகவான் மாறுகிறார்.

பலன்கள்: சொல்லாற்றல் மிக்க உங்களுக்கு இந்த வாரம் சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதிநுட்பத்தால் எந்தப் பிரச்சினையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன் தரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும். உறவினர் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள். பெண்களுக்கு உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.

அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். கலைத்துறையினருக்கு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வழிபட நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - சப்தம ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன் போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 15.10.2023 அன்று பாக்கிய ஸ்தானத்திற்கு புதன் பகவான் மாறுகிறார் | 18.10.2023 அன்று பாக்கிய ஸ்தானத்திற்கு சூர்ய பகவான் மாறுகிறார்.

பலன்கள்: கடின உழைப்பை கண்டு அஞ்சாத உங்களுக்கு இந்த வாரம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சினை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். பெண்களுக்கு மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும்.

கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: பெருமாளை வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசி ஸ்தானத்தில் ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 15.10.2023 அன்று அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு புதன் பகவான் மாறுகிறார் | 18.10.2023 அன்று அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு சூர்ய பகவான் மாறுகிறார்.

பலன்கள்: அடுத்தவர்களை அனுசரித்து சென்று காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் திறமை உடைய உங்களுக்கு இந்த வாரம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும். கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x