Published : 30 Dec 2014 09:55 AM
Last Updated : 30 Dec 2014 09:55 AM
பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பரிதாபமாக உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த பவானி தேவியின் உடலைப் பார்த்து அவரது கணவரும் குழந்தைகளும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆட்டோ ஓட்டுநரும் கதறிய சம்பவம் காண்போரின் உள்ளத்தை உருக வைத்தது.
சென்னை அண்ணா சாலையைச் சேர்ந்தவர் பவானி தேவி (38).கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடுவதற்காக தனது குழந்தைகளுடன் கடந்த 24-ம் தேதி பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குழந்தைகள் மற்றும் உறவினர் களுடன் எம்ஜி சாலைக்கு ஷாப்பிங் செய்ய சென்றார். அப்போது சென்னையில் உள்ள தனது கணவர் பாலன் உட்பட குடும்பத்தினருக்காக புத்தாடைகளை வாங்கினார்.
அதன்பிறகு தனது மகள் லட்சுமிதேவிக்கு (11) பிடித்தமான 'அமீபா' விளையாட்டு மையத்துக்கு சென்று விளையாட வைத்தார். இரவு 8.30 மணியளவில் எம்ஜி சாலை அருகிலுள்ள சர்ச் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பவானிதேவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். அடுத்த கணம் அந்த இடமே புகைமூட்டமாக காட்சியளித்தது என சம்பவத்தின் போது உடனிருந்த பவானிதேவியின் உறவினர் மங்கிய குரலில் கூறினார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பவானி தேவியை அவரது உறவினர்கள் ஆட்டோ மூலம் இரவு 9.50 மணியளவில் மல்லையா மருத்து வமனையில் அனுமதித்தனர். மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் பவானிதேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆட்டோ ஓட்டுநரின் அழுகை
“ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த பெண்ணை தூக்கிக் கொண்டு என் ஆட்டோவை நோக்கி ஓடி வந்தனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் முடிந்தவரை வேகமாக ஆட்டோவை ஓட்டினேன். ஹார்ன் அடித்துக்கொண்டே மூன்று சிக்னல்களில் நிற்காமல் வண்டியை மருத்துவமனைக்கு செலுத்தினேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்தப் பெண் உயிரிழந்துவிட்டதாக தெரிவித் தனர். எவ்வளவு கஷ்டப்பட்டும் ஒரு உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே” என பவானியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆட்டோ ஓட்டுநர் நரசிம்மா கண்ணீருடன் கூறினார்.
கதறிய குடும்பத்தினர்
இதனிடையே பவானிதேவி குண்டு வெடிப்பில் சிக்கிய தகவலைக்கேட்டு, சென்னை யிலிருந்து அவரது கணவர் பாலன் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். பவானியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேதப் பரிசோ தனை முடிந்ததும் திங்கள்கிழமை பிற்பகலில் அவரது உடலை கணவர் பாலனிடம் ஒப்படைத்தனர்.
பவானிதேவியின் உடலைப் பார்த்து கணவரும் குழந்தைகளும் கதறி அழுதனர். பவானியின் முகத்தைப் பார்த்து இரு குழந்தைகளும் வேதனையில் துடித்ததை பார்த்தவர்களும் கண் கலங்கினர். “அம்மா வேணும்.. அம்மா வேணும்” என கதறிய 11 வயது மகளின் குரல் மருத்துவமனையில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவரது கணவரும் கதறி அழுதார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT