Published : 04 Aug 2014 08:38 AM
Last Updated : 04 Aug 2014 08:38 AM

ரயிலில் தந்த உணவில் கரப்பான் பூச்சி: ஐஆர்சிடிசி-க்கு ரூ.1 லட்சம் அபராதம்

ரயிலில் வழங்கப்பட்ட உணவுகள் தரமற்று இருந்ததால் ஐஆர்சிடிசி உள்பட பல்வேறு ஒப்பந்ததாரர்களுக்கு, ரயில்வே துறை மொத்தம் ரூ.11.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது. உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததற்காக ஐஆர்சிடிசி-க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தைப் பரிசோதிக்க கடந்த மாதம் பல்வேறு ரயில்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சில ரயில்களில் வழங்கப்பட்ட உணவுகளின் தரம் குறைவாக இருந்ததால், சம்பந்தப்பட்ட உணவு வழங்கும் ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 23-ம் தேதி கொல்கத்தா ராஜதானி ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் உணவில் கரப்பான் பூச்சி இருந்தது. அந்த ரயிலில் உணவு வழங்கும் ஒப்பந்தத்தை ஏற்றிருந்த ஐஆர்சிடிசி நிர்வாகத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 13 ரயில்களில் உணவின் தரம் மோசமாக இருந்தது. அந்த ரயில்களில் உணவு வழங்கும் ஒப்பந்தம் பெற்றுள்ள ஆர்.கே. அசோசியேட்ஸ், சன்ஷைன் கேட்டரர்ஸ், சத்யம் கேட்டரர்ஸ், பிருந்தாவன் புட் புராடக்ட்ஸ் ஆகிய ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாஸ்சிம் எக்ஸ்பிரஸ், புஷ்பக் எக்ஸ்பிரஸ், மோதிஹரி எக்ஸ்பிரஸ், சிவ கங்கா எக்ஸ்பிரஸ், கோல்டன் டெம்பிள் மெயில், நேத்ராவதி எக்ஸ்பிரஸ், பஞ்சாப்மெயில், ஹவுரா-அமிருதசரஸ் மெயில், சண்டீகர் சதாப்தி ஆகிய ரயில்களில் இச்சோதனை நடத்தப்பட்டது.

சில ரயில்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. சில ரயில் களில் நைந்து போன அல்லது தரக்குறைவான உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரு ஒப்பந்ததாரர் 5 முறை தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கான உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்த புகார்கள் அதிகரித்ததால், ரயில்வே அமைச்சகம் தொடர் சோதனையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. உணவின் தரத்தை அதிகரிக்க ஐடிசி, எம்டிஆர், ஹல்திராம்ஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுடன் இணைந்து முன்கூட்டி தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக, ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் சதானந்த கவுடா குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x