Published : 14 Apr 2015 10:44 AM
Last Updated : 14 Apr 2015 10:44 AM

சிங்கப்பூரில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 3.4 கிலோ தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட 3.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட விமானம் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று பகல் 12.15 மணிக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பினர். சென்னையை சேர்ந்த கரீம் முகைதீன் (32) என்பவரை சோதனை செய்தபோது, செல்போன் கவர், பர்ஸில் அவர் 2.8 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சீட்டில் இருந்த தங்கம்

பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பிறகு, அந்த விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது, ஒரு சீட்டில் பை ஒன்று இருந்தது. இதை பார்த்த ஊழியர்கள் உடனே விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சோதனை செய்தபோது, அந்த பையில் 600 கிராம் தங்கம் இருப்பது தெரிந்தது. சோதனைக்கு பயந்து வைத்துவிட்டுச் சென்றது யார் என்று விசாரணை நடக்கிறது.

ஒரே விமானத்தில் கடத்தப்பட்ட 3.4 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x