Published : 16 Feb 2015 07:29 PM
Last Updated : 16 Feb 2015 07:29 PM

நான் நலமாக இருக்கிறேன் - நடிகை மனோரமா

உண்மையா, இல்லையா என்று கூட தெரியாமல் மனோரமா இறந்துவிட்டார் என்று ஏராளமான பேர் இரங்கலையும்,வருத்தத்தையும் தெரிவித்தனர்.மனோரமா நலமாக இருக்கிறார் என்பதே உண்மையான செய்தி. இதுகுறித்து மனோரமா வீடியோ பதிவில் பேசியிருக்கிறார்.

''என் ரசிகர்களுக்கு அன்பு கலந்த வணக்கம். எனக்கு உடல்நிலை சரியில்லைன்னு செய்தி வந்துக்கிட்டே இருக்கு. கொஞ்சம் உடம்பு சரியில்லைதான். ஆனா, நான் நல்லா இருக்கேன். நான் இறந்துட்டேன்னு சிலர் தப்பா வதந்தி பரப்பிட்டாங்க. இதை திருஷ்டி கழிப்பா எடுத்துக்கிறேன். 1100 படங்களுக்கு மேல நடிச்சிட்டேன்.

இப்போ 'பேராண்டி' படத்துல பாட்டியா நடிக்கிறேன். பாட்டிக்கும், பேரனுக்கும் உள்ள பாசம் தான் படத்தின் கதை. தலைப்பு வைக்காத இரண்டு படங்களிலும் நடிக்கிறேன். இனிமேலும் நடிப்பேன். நான் நடித்துக் கொண்டிருக்கும்போதே என் உயிர் பிரியணும். இதான் என் ஆசை. அப்படி நடக்கணும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்.'' என்று மனோரமா உருக்கமாகப் பேசினார்.

மனோரமா இன்னும் பல படங்களில் தன் நடிப்பை பரிபூரணமாக வெளிப்படுத்த நாமும் வாழ்த்துவோம்.