Published : 02 Sep 2014 12:00 AM
Last Updated : 02 Sep 2014 12:00 AM

40 நாட்களுக்குப் பிறகு கடலுக்குள் சென்ற மீனவர்கள்

40 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்துக்குப் பிறகு ராமேசுவரம் மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்குள் சென்றனர்.

கடந்த 3 மாதங்களில் தமிழக மீனவர்களின் 63 விசைப்படகு களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். விசைப் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் ஜூலை 24-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற இருநாட்டு அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தையில், இந்திய- இலங்கை மீனவர்கள் கடலில் இரு நாடுகளுக்குமான பொதுப்பரப்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளை விடுவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் ஏதும் எடுக்கப் படவில்லை.

இதனிடையே, தொடர் வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் முடங்கிப் போனதால் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு கடலுக்குள் செல்ல மீனவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, திங்கள்கிழமை மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.

கொழும்பில் அடுத்தகட்ட பேச்சு வார்த்தை தொடங்குவதற்குள் விசைப்படகுகளை விடுவிக்கவும், மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரம் மீனவர்கள் வலியுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x