Published : 25 Mar 2015 10:05 AM
Last Updated : 25 Mar 2015 10:05 AM
வரும் நிதி ஆண்டின் முதல் பாதியில் சந்தையில் இருந்து 3.6 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த தொகை ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கில் பாதிக்கும் மேல் ஆகும். ஒட்டுமொத்தமாக 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
இதற்காக 40 வருட கடன் பத்திரங்களை வரும் நிதி ஆண்டில் வெளியிட இருப்பதாகவும், இதன் மூலம் நீண்ட நாளைக்கு ஸ்திர தன்மையை ஏற்படுத்த முடியும் என்றும் மத்திய நிதி செயலாளர் ராஜிவ் மெஹ்ரிஷி தெரிவித்தார். முதல் ஆறு மாதங்களில் 3.6 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க இருப்பதாகவும் மேலும் கூறினார்.
நிதிப்பற்றாக்குறையை கட்டுப் படுத்த கடன் பத்திரங்களை மத்திய அரசு வெளியிடும். இதன் மூலம் ஒவ்வொரு வாரமும் 17,000 முதல் 18,000 கோடி ரூபாய் வரை கடன் வாங்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
2014-15ம் ஆண்டில் 5.92 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பத்திரங்கள் மூலம் மத்திய அரசு திரட்டியது. வரும் நிதி ஆண்டில் 6 லட்சம் கோடியாக அளவுக்கு கடன் வாங்க திட்டமிட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT