Published : 26 Mar 2015 10:55 AM
Last Updated : 26 Mar 2015 10:55 AM

நதிக்கரையில் சனீஸ்வரர்

தமிழ்நாட்டில் நதிக்கரையோடு கூடிய சனீஸ்வரன் சன்னிதி இது ஒன்றுதான்.

குடகுமலைப் பகுதியிலிருந்து புறப்பட்டு வருகிற காவிரி, கும்பகோணத்திற்கு வரும்போது அரசலாறு வெட்டாறாகப் பாய்ந்து பிரிகிறது. தென்புலமாகப் பிரியும் வெட்டாறு திருவாரூர் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் கங்கனாஞ்சேரிப் பகுதியில் வடக்கிலிருந்து தெற்காக வளைந்தோடுகிறது. விருத்தம் என்ற சொல்லுக்கு வட்டம், வளைப்பது என்று பொருள். இத்தலத்தில் சூரியமைந்தனாகிய சனிபகவானது அபூர்வமான கானகப்பகுதியை வளைத்தபடி வருவதால் ‘விருத்த கங்கா’ என்று பெயர் பெறுகிறது.

விருத்தம் என்று வடநூலார் கூறும் வட்டவடிவில் தான் சனீஸ்வரனின் கோள் உருவமும் அமைந்திருக்கிறது. கோணன், மந்தன், அனிதன், சாயாபுத்திரன், நீலன், கலி, காகவாகனன், ஆயுள்காரகன், கதிர்மகன், சாவகன், முதுமகன், சௌரி, முடவன், பங்குபாதன், சந்திலி, பிணிமுகன், காரி என்ற பெயர்களைக் கொண்ட சனிபகவான் இந்த ஸ்தலத்தில் தங்கியதால் காரையூர் என்ற காரணப்பெயருடன் மகள்ளது சொல்வழக்கில் அழைக்கப்படுகிறது.

தேர்த் திருவிழாவுக்குப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்திற்கு வடகிழக்காக ஈசான்ய பாகத்தில் அமைந்த சனிபகவான் திருத்தலமே சனீஸ்வர வாசல்.

கண் தெரியாது நின்ற காகவாகனர்

பொங்கு சனீஸ்வரன் தலம் என்று போற்றப்படும் திருக்கொள்ளிக் காட்டிலிருந்து திருநள்ளாறுக்குச் சென்று நளமகராஜனைப் பிடிக்கும் நோக்கத்துடன் மதிய நேரத்தில் சனி பகவான் புறப்பட்டார். சில மணிநேரத்தில் இரவு நேரம் வந்துவிடவே அவரைச் சுமந்து செல்லும் காகவாகனருக்குக் கண் தெரியவில்லை.

சனி பகவான், பூமியில் ஒரு சிவகோபுரம் தெரிய அங்கே ஓய்வெடுத்து காலை புறப்படலாம் என்றார். காரையூர் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீசங்கர நாராயணர் சிவாலயமே அது. சனி பகவான் ஓர் இரவுக்காலம் இங்கே தங்கியதால் இத்தலம் சனி ஈஸ்வர வாசல் என்ற பெயர் பெற்றுவிட்டது.

சனி, நீராடிய விருத்த கங்கா நதி

ஆலயத்தின் அருகில் உள்ள விருத்த கங்காவில் காலை பூஜைகளைச் செய்வதற்கு முன்பு நீராடிவிட்டு, மும்முறை ஆசமனம் செய்து, அந்த நதிக்கு காரகத்துவ பலன் தரும் சக்தியையும் அருளினான்.

காட்டருவி போலப் பிறந்து அனாதையாகக் கடலில் கலக்கச் சென்ற நதிக்குச் சனிப்பரிகார புண்ணிய பூமியின் பெயரும் புகழும் ஆயுட்காரகனின் ஆசியும் கிடைத்தது. தமிழ்நாட்டின் மையப்பகுதியில் நதிக்கரை ஓரமாக ஒரு சிவாலயத்தின் முகப்பில் பக்தர்களுக்கு அருள்தரும் சனிபகவான் இங்கு மட்டுமே காட்சிதருகிறார்.

நவக்கிரகங்களோடு நிற்கும்போது மேற்கு முகம் பார்த்தவராக அருள்தரும் சனி, இத்தலத்தில் கிழக்குமுகமாக நின்று, நதியில் நீராடி வருவோருக்கு மங்களகரமான பார்வையைத் தருகிறார் என்கிறது தலவரலாறு. மாங்கல்ய பலம் குறைவாக இருப்பவர்களுக்கு நலம் அருள்வதாக நம்பிக்கை உண்டு.

தம்பதியராக விருத்த கங்கா நதியில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி நீராடி நீலவண்ண அஸ்திரத்தை தாம்பூலத்துடன் தானம் செய்து, நீலோத்பல மலரால் சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்து எள், அன்னம் படைத்து சனீஸ்வரக் கவசம் படித்தால் நலம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

விதியையும் மாற்றும்

தொழில், வியாபார முயற்சிகளில் தடைகள் இருப்பின் ஞாயிறு மற்றும் அமாவாசை தினங்களில் வந்து விருத்த கங்காவில் நீராடி நீலக்கரை வேஷ்டி தானம் செய்து சனீஸ்வரனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனையை நீலமலரால் செய்து எள் சோறு, வெண்பொங்கல் படைத்திட நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

ஆலயத்தில் பிற மூர்த்தங்களாக ஸ்ரீசங்கர நாராயணர் மிகப்பெரிய பாணலிங்கமாக அருள்தர அருகில் பால உருவாக சங்கு சக்கரத்துடன் ஸ்ரீநாராயணி அம்பாள் அபய வரத முத்திரை காட்டி நிற்கிறார். சங்கடங்கள் தீர்க்கிற சனீஸ்வர வாசல் ஸ்தலத்தில் சோழமண்டலம் செல்வோர் மறவாமல் தரிசிக்க வேண்டியது அவசியம். திருவாரூரிலிருந்து நாகூர் செல்கிற வழித்தடத்தில் இந்த ஆலயம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x