Published : 25 Feb 2015 09:28 AM
Last Updated : 25 Feb 2015 09:28 AM

‘மாதொருபாகன்’ விவகாரம் நீதிமன்றத்தில் பெருமாள்முருகன் மனு

எழுத்தாளரின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்க உத்தர விட வேண்டும் என்று கோரி பெருமாள்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர் பாக மூன்று வாரத்துக்குள் பதில் அளிக்க அரசு உள்ளிட்ட 14 எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பெருமாள்முருகன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் திருச்செங்கோட்டை அடிப்படையாகக் கொண்டு ‘மாதொருபாகன்’ நாவலை எழுதி னேன். இதில், திருச்செங்கோடு பகுதி பெண்கள் பற்றி அவதூறு பரப்புவதாகக் கூறி சிலர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பிரச்சினையை சுமுகமாக முடிப்பதற்காக கடந்த ஜனவரி 12-ல் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வர, எனது வழக்கறிஞருடன் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டேன். எனது வருத்தத்தை எழுத்துப் பூர்வமாக கொடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி கோபத்துடன் கூறினார்.

எனது அறிக்கையில் ‘ஆழ்ந்த வருத்தம்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘நிபந்தனையற்ற மன்னிப்பு’ என மாற்றி எழுதித் தரச் சொன்னார்கள். அத்துடன் எதிர்ப்பாளர்கள் மேலும் சில நிபந்தனைகள் விதிப்பதாக மாவட்ட வருவாய் அதிகாரி கூறினார். நீங்கள் எதை எழுதிக் கொள்ள விரும்புகிறீர்களோ அதை எழுதிக் கொள்ளுங்கள், அதில் நான் கையெழுத்திடுகிறேன் என்றேன். அதன்படி கையெழுத்தும் போட்டுக் கொடுத்தேன். எழுத்தாளரின் அடிப்படை உரிமையான பேச்சுரிமை எழுத்துரிமையை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இந்த வழக்கை நேற்று விசாரித்தது. இந்தவழக்கின் எதிர்மனுதாரர்கள் 14 பேர், மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஏப்ரல் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x