Published : 17 Feb 2015 09:59 AM
Last Updated : 17 Feb 2015 09:59 AM
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் அது குறித்த வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறும்போது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது மாநில மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013-ல் முப்போகம் விளையும் நிலங்களுக்கு விதிவிலக்கு, 80 சதவீத விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்த முடியாது உள்ளிட்ட பல அம்சங்கள் இருந்தன. இச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக ஆதரித்தது. தற்போது , இச்சட்டத்தை அவசர சட்டத்தின் மூலமாக திருத்தியுள்ளது. விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அரசால் கையகப்படுத்த முடியும் என்ற திருத்தம் உட்பட விவசாயிகளை பாதிக்கும் பல அம்சங்கள் உள்ளன. விவசாயி களின் நில உரிமையைப் பறிக்கும் இத்திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இச்சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது. நாடாளுமன்றத்தில் இது குறித்த வாக்கெடுப்பு நடக்கும்போது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு வீட்டுவசதி, குடிசைமாற்று வாரிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு கிரயப்பத்திரம், புறநகர் பகுதியில் குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT