Published : 05 Feb 2015 10:07 AM
Last Updated : 05 Feb 2015 10:07 AM
கேரளத்தில் தேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கோரி நடிகர் மோகன் லாலின் ‘லாலிசோம்' கலைக் குழுவை கேரள மாநில விளையாட்டுத்துறை அமைச் சகம் அணுகியது.
அதற்கு ஒப்புக்கொண்ட மோகன்லால் நிகழ்ச்சிக்கான கட்டணமாக ரூ.1.63 கோடியைப் பெற்றார். இந்நிலையில், அவரின் கலைக் குழு மேற்கொண்ட நிகழ்ச்சிகள் நன்றாக இல்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆனால், நடிகர் மம்முட்டி கூறும்போது, "நல்ல எண்ணத்துடன் தான் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று மோகன்லால் ஒப்புக்கொண்டார். அவருக்கு அழுத்தம் தராதீர்கள். மோகன் லால் நம்முடைய பெருமை. அவரை விமர்சிப்பதற்குப் பதிலாக அவருக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அவர் ஒரு சிறந்த நடிகர். அவரின் நடிப்புத் திறமைக்காகத்தான் நாம் அவரை ஏற்றுக்கொண்டுள்ளோம். ஒரு கலைஞ னாகவும், ஒரு சகதொழிலாளியாகவும் என்னுடைய ஆதரவுகளை அவருக்குத் தெரிவிக்கிறேன்" என்றார்.
இதற்கிடையே அரசிடமிருந்து தான் பெற்ற தொகையை திருப்பித் தந்துவிடு வதாக மோகன்லால் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகக் கடினமாக உழைத்தோம். ஆனால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. தொகையைத் திருப்பிச் செலுத்துவதன் மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT