Published : 05 Aug 2014 12:00 AM
Last Updated : 05 Aug 2014 12:00 AM

மீனவர்கள், மீனவ பெண்களுக்கு நிவாரணம் அதிகரிப்பு: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மீன்பிடிப்பு குறைவான காலத்தில் கடல் மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூ.1800-ல் இருந்து ரூ.2,700 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா திங்கள் கிழமை சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் உற்பத்தியையும் மேம்படுத்துவதற்காக கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிடுகிறேன். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும், தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும், மீன்பிடிப்பு குறைந்த காலத்தில் கடல் மீனவர்களுக்கு ரூ.1,800 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கான தனது பங்குத் தொகையை ரூ.600-ல் இருந்து ரூ.900 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

அதுபோல மாநில அரசும் தனது பங்குத் தொகையை ரூ.600ல் இருந்து ரூ.900 ஆக உயர்த்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்குத் தொகையுடன், பயனாளியின் பங்குத்தொகை ரூ.900-ம் சேர்த்து, கடல் மீனவர்களுக்கு மீன்பிடி குறைவு கால நிவாரணமாக ரூ.2,700 வழங்கப்படும். இதனால் 2 லட்சத்து 10 ஆயிரம் மீனவர்கள் பயனடைவர்.

மீன் இறங்கு தளங்கள்

மேலும், கடல் மீனவ மகளிருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை ரூ.1,800-ல் இருந்து ரூ.2,700 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

இதில், பயனாளியின் பங்குத் தொகை ரூ.900 ஆகவும், மாநில அரசின் பங்குத் தொகை ரூ.1,800 ஆகவும் இருக்கும். இதனால் ஒரு லட்சத்து 90 ஆயிரம் கடல் மீனவ மகளிர் பயனடைவர்.நடப்பாண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் கோவளத்தில் ரூ.5 கோடியிலும், கன்னியாகுமரி மாவட்டம் இரயு

மண்துறையில் ரூ.7.50 கோடியிலும், தூத்தூரில் ரூ.4.65 கோடியிலும் என மொத்தம் ரூ.17.15 கோடியில் மூன்று புதிய மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

இதன்மூலம் இப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 8,300 மீனவர்கள் பயன்பெறுவர்.

அலுவலக கட்டிடம்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தேனி மாவட்டம் வைகை அணை ஆகிய 4 இடங்களில் உள்ள அரசு மீன் குஞ்சு வளர்ப்புப் பண்ணைகள் ரூ.17.55 கோடியில் மேம்படுத்தப்படும்.

ராமநாதபுரத்தில் மீன்வளத் துறை துணை இயக்குநர் அலுவலகம், வடக்கு மற்றும் தெற்கு மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் மீன்பிடி துறைமுக உதவி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு ரூ.1.80 கோடியில் ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடம் கட்டப்படும்.

அதேபோல, நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளத் துறை மண்டல இணை இயக்குநர், உதவி இயக்குநர், மீன்பிடி துறைமுக செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகிய 4 அலுவலகங்களுக்கும் ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடம் ரூ.1.80 கோடியில் கட்டப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x