Published : 17 Sep 2014 02:50 PM
Last Updated : 17 Sep 2014 02:50 PM
புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்தார்.
சென்னை அடையாறு கெனால் பேங்க் சாலையை சேர்ந்தவர் அசோக்ராஜ் (52). இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் தண்டனை கைதிகள் பிரிவில் 25 கைதிகளுடன் சேர்த்து அடைக் கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு உணவு முடிந்த பிறகு கைதிகளை சரிபார்க்கும் பணியில் சிறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அசோக்ராஜ் மாயமாகி இருப்பது தெரிந்தது. உடனடியாக சிறை வளாகம் முழுவதும் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அன்று இரவு இடியுடன் மழை பெய்ததால் சரியாக தேடமுடியவில்லை.
இந்நிலையில், மறுநாள் காலையில் கைதிகள் குளிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் அசோக்ராஜ் இறந்து கிடப்பது தெரிந்தது. புழல் போலீஸார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அசோக்ராஜ் எப்படி இறந்தார்? என்பது மர்மமாகவே உள்ளது. அவரை கைதிகள் தாக்கி கொலை செய்தார்களா? அல்லது உடல் நலக் குறைவால் இறந்தாரா? என்பது குறித்து புழல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT