தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக சிரியா தொடர்ந்து சண்டையிடும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிரிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “நாடு முழுவதிலும் உள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக சிரியா தொடர்ந்து சண்டையிடும். துருக்கியின் தலைமை உண்மை நிலைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகிறது. துருக்கி ராணுவம் சட்டத்துக்குப் புறம்பான முறையில் சிரியாவில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிய வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப்பில் அந்நாட்டு அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து சிரியா நடத்திய தாக்குதலுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எர்டோகனின் எச்சரிக்கைக்குப் பதிலாகவே சிரிய அரசு தற்போது அறிக்கை அளித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, சிரியாவின் அரசுப் படைகள் ரஷ்யப் படை உதவியுடன் இட்லிப் பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றின. இதன் காரணமாக தற்போது சிரிய படைக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. ஆனால், அப்பகுதியில் தங்கள் கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ள துருக்கிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சிரியா - துருக்கி இடையே மோதல் வலுத்துள்ளது.
தவறவீடாதீர்!