ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்த புகார் தொடர்பான விசாரணையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.13) தன்னுடைய முகநூல் பக்கத்தில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தொடர்ச்சியாக நடந்த முறைகேடுகள் தொடர்பான கைதுப் படலங்கள் நீடித்து வரும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்த புகார்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பும் சில தேர்வர்கள், அது சம்பந்தமான புகாரை முதல்வரிடம் கொடுத்துள்ளதாகப் பேட்டி தந்துள்ளார்கள்.
அதற்கான விசாரணையை அரசு தொடங்கிவிட்டதா? தொடங்கவில்லை என்றால் உடனடியாகத் தொடங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்ட வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, தொடர்ந்து காவலர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என அணிவகுத்து வரும் அனைத்துக் குற்றங்களையும் தொகுத்து அவற்றின் மீது, சிபிஐ விசாரணை நடத்த, கால தாமதமின்றி உடனடியாக உத்தரவிட வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
தவறவிடாதீர்!