தமிழகம்

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரிய வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில், பாதிக்கப்பட்ட பணிப்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர். இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு காவல் துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், தவறாக அளிக்கப்பட்ட புகாரில் மனுதாரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் 30 நாட்களாக சிறையில் உள்ளனர். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதிலளிக்க அவகாசம் வழங்கி, இந்த வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (பிப்.23) ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT